வெள்ளி, 10 நவம்பர், 2017

சிறுகதை பாகிஸ்தானி பிரியாணிக் கடை


டெல்லி அசோக் மந்தர் பகுதியில் அக்கட்டிடம்  இருந்தது.  அப்பகுதியின்  பாழடைந்தக் கட்டிடம் அது ஒன்றுதான். அக்கட்டிடம் பார்க்க மசூதியைப் போலிருந்தது. ஆனால் அது மசூதி அல்ல. மசூதியைப் போன்ற கட்டிட வேலைப்பாடுகள் கொண்ட பழைய காலத்து உணவகம் அது.  கட்டிடத்தில் இல்லாத இரண்டு ஸ்தூபிகள்  அது வழிப்பாட்டுத் தளம் இல்லாத வேறு ஒன்று எனச் சொல்லிக்கொண்டிருந்தது. அதன் மேற்கூரையும் திமில் போன்ற குடைவும் பார்க்க மசூதியைப் போலிருந்தது. முகலாயக் கலை அம்சத்துடன் கட்டப்பட்டிருந்த அக்கட்டிடத்தின் பெரும்பகுதி சாயம் இழந்துபோய் மேற்பகுதியின் ஒரு பகுதி  இடிந்து வெளிப்புறமாக விழுந்துவிட்டிருந்தது.

சுதந்திர இந்தியக் காலத்தில் அப்பகுதியின் மிகப்பெரிய உணவகமாக அது இருந்தது. தென் இந்திய, வட இந்திய, மேற்கத்திய என மூன்று வகை உணவுகளும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில்  கிடைக்குமளவிற்கு பிரசித்திப்பெற்ற உணவகம் அது. இன்றைக்கு அக்கட்டிடத்தைச் சுற்றிலும் அடைசலாக புல் பூண்டு புதர்கள். மேல் ,கீழ் தளத்தில் ஆல , அரச கன்றுகள் முளைத்திருந்தன.  மேற்கூரையில் விட்டிருந்த ஆணி வேர்  பூமி வரைக்குமாக வளர்ந்து விட்டிருந்தது. மேற்தளத்தில் வளர்ந்திருந்த மரங்களுக்கிடையில் கட்டிடத்தைப் பார்க்கையில்  வேர்களுக்கிடையில் தொங்கும் கட்டிடம் போல அக்கட்டிடம் இருந்தது.
 
அன்றைக்கு அப்பகுதியின் பிரமாண்டம் அதுதான். தங்கும் விடுதியும் கூட. ஆனால் இன்றைக்கு அக்கட்டிடத்தை விடவும் பெரிய கட்டிடங்கள் அதைச் சுற்றி முளைத்துவிட்டிருந்தன. அத்தனையும் வானளாவிய கட்டிடங்கள். அவ்வுயரத்திற்கு முன்னால் அக்கட்டிடமும் அதன் குவிந்து வளைந்த கோபுரமும்  சிறியதாகி விட்டிருந்தது.

டெல்லியில் எந்த மூலையில் கலவரம் நடந்தாலும் தவறாது தாக்குதலுக்கு உள்ளாகும் கட்டிடமாக அக்கட்டிடம் இருந்தது.  எத்தனைப் பேர் சேர்ந்து தாக்கினாலும்  அதன் கம்பீரமும் கட்டமைப்பும் சற்றும் குன்றாமல் இருந்தது அக்கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கே வியப்பு அளிக்கும்படியாக இருந்தது. அதன் தலையில்  திமிலை நிமிர்த்திக்கொண்டு அது நிற்கும் கம்பீரமே தனி அழகுதான்.

அக்கட்டிடம் அடிக்கடி  தாக்குதலுக்கு உள்ளானதன் பிறகு அக்கட்டிடத்தின் வழியே கிடைக்கும் வருமானம் ஒரு கட்டத்தில்  அதை சீர்செய்வதற்கென்று  மட்டுமே  பயன்பட்டிருந்தது.  இதற்கு மேலும் இதை நிர்வகிக்க முடியாது என்று உணர்ந்த அக்கட்டிடத்தின் உரிமையாளர் கட்டிடத்தின் முன்பு பெரிய பூட்டினைத் தொங்கவிட்டு வேறொரு நகரத்தை நோக்கி இடம் பெயரலானார். அவரால் பூட்டப்பட்ட பூட்டு பல வருடங்கள் திறக்கப்படாமலேயே இருந்தது.

அக்கட்டிடத்தின் உரிமையாளர் உருது மொழி  பேசக்கூடியவராக இருந்தார். பெரிய செல்வந்தர். இதுமாதிரியான உணவகம் அவரிடம் நான்கைந்து நகரங்களில் இருந்தன. இதைத் தவிரவும் அவர்  ஒன்றிரண்டு தொழில்கள் செய்யக்கூடியவராக இருந்தார். ஒரு தொழிலில் ஏற்பட்டிருந்த நட்டத்தை ஈடு கட்ட அவர் அக்கட்டிடத்தை அவருக்கு நெருக்கமான உறவினரிடம்  கேட்ட விலைக்கு  விற்றுவிட்டிருந்தார்.

அக்கட்டிடத்தை விலைக்கு வாங்கிய உறவினர் அதை அடியோடு தகர்த்தெறிந்துவிட்டு இந்திய - முகலாயக் கட்டிடக் கலை அம்சத்துடன் கூடிய  ஒரு சொகுசு உணவகத்தை கட்டிவிடலாமென  நினைத்தார். அதை அவர் வாங்கிய நாட்களில் இடித்திருந்தால் இடித்திருந்திருக்கலாம். அவர் ஆண்டுகள் பல கடந்து இடிக்கலாமென இறங்குகையில் அக்கட்டிடத்தைச் சுற்றிலும் நிறைய கட்டிடங்கள் முளைத்துவிட்டிருந்தன. கட்டிடங்களை விடவும் அக்கட்டிடத்திற்கு வெளியிலிருந்த பிள்ளையார் கோயிலும் இடது புறமிருந்த அனுமார் கோயிலும் என் மீது சிறு துரும்பேனும் படாமல் எப்படி இடிக்கிறீர்கள் எனப் பார்த்துவிடுகிறேன்....என்றபடி இரண்டும் பதட்டத்தைக் கொடுத்தபடி  இருந்தன.

அக்கட்டிடத்தை இடித்துவிட உரிமையாளர் படாதப்பாடுபட்டார். தினமும் இடிமான நிறுவனங்கள் வந்து பார்த்து செல்வதாக இருந்தன. கட்டுமான பொறியாளர்கள் அக்கட்டிடத்தை நான்கைந்து சுற்று வந்து பார்த்து சென்றிருந்தார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது.  அடுத்தடுத்தக் கட்டிடங்களுக்கு ஒரு பாதகமும் இல்லாமல் அதை தகர்த்தெறிவதற்கான ஒரு வழியும் இருப்பதாக இல்லை. அருகாமை கட்டிடங்களை விடவும் பெரிய அச்சுறுத்தலைக் கொடுத்தது  பிள்ளையார் , அனுமார் இரு கோயில்களும்தான்.

இடிக்கப்பட வேண்டியக் கட்டிடமாக இருந்த அக்கட்டிடத்தின் உள்ளரங்கம் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே கிரிக்கெட போட்டி நடத்தி முடிக்கும் அளவிற்கு பரந்து விரிந்த பரப்பளவைக் கொண்டதாக இருந்தது. யானையை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டதைப்போல அதன் தூண்கள். மலையைக் குடைந்ததைப்போல மேற்கூரைகள். கூரையின் ஓவியங்களும் ,சித்திரங்களும் அதன் வேலைப்பாடுகளும் பார்க்கிறவர்களை திகைக்கவைக்கும்படியாக இருந்தன. அதன்   நுண் கலை வடிப்புகளில்  நூலாம் படைகள் போர்த்தி  போர்வைப் போல படிந்துபோயிருந்தது.

அனுமார் கோயிலின் உயரம் அக்கட்டிட உயரத்திற்கு இருந்தது. கோயிலின் கோபுரத்தில் புதுப்பித்தல் பணி நடந்துகொண்டிருந்தது. அதற்காக நான்குபுறமும் சாரம் கட்டப்பட்டிருந்தது. அச்சாரம் இடிக்கப்பட வேண்டிய கட்டிடத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியிருந்தது.

 அக்கட்டிடத்திற்கு வெளியே அதன் முகப்பிலிருந்த பிள்ளையார் மிகச்சிறிய கோயிலாக இருந்தது.அதன் உயரம் இரண்டு ஆள் மட்டம் அளவிற்கே இருந்தது.  ஆஸ்பெட்டாஸ் கூரையினலான அக்கோயிலின் கூரை நான்கு இரும்புக் கம்பி தூண்களில் பந்தல் போல் பரந்து மழை நீர் மட்டத்திற்காக ஒரு பக்கமாக ஒடுங்கியிருந்தது. 

கட்டிடம் இடிக்கப்பட்டால் நிச்சயம் பிள்ளையார் கோயில் சேதாரம் அடையவே செய்யும். இரு கோயில்களுக்கும் ஒரு சேதாரமும் இல்லாமல் இடிக்க வாய்ப்பில்லாத அக்கட்டிடத்தை தான் வைத்திருப்பது வீண் என்று உணர்ந்த அவர் அதை ஒரு வெளிநாட்டு  நண்பரின் உதவியுடன் ஒரு வணிகரிடம் விற்றுவிட்டிருந்தார்.
அதை வாங்கியிருந்த வணிகர் அதை இடித்தால் மட்டுமே  வாங்கிய விலைக்கேனும் விற்கவோ அல்லது அதிலிருந்து வேறொரு வியாபாரத்தைத் தொடங்கவோ முடியும்  என கருதிய அவர் என்ன விலைக்கொடுத்தேனும் அதை இடித்து தரைமட்டமாக்கிவிட வேண்டும் என்கிற முடிவில் தீர்க்கமாக இறங்கினார்.

முதற்கட்டமாக அவர் இரு கோயில் நிர்வாகத்துடனும்  பேசினார். கோயில் நிர்வாகத்தினர் என்னச் சொல்கிறோமெனச் சொல்லாமல் பதில் சொல்லிவிட்டிருந்தார்கள். 'நீங்கள் உங்கள் கட்டிடத்தை இடிக்கிறீர்கள். அதை ஏன் எங்களிடம் பகிர்ந்துகொள்கிறீர்கள். நீங்கள் இடிக்கும் கட்டிடத்தில் ஒரு தூசி எங்கள் கோயிலின் மீது பட்டால் கோயிலின் புனிதம் கெட்டுப்போய்விடும். அப்படியொன்று நடந்தால்  என்ன வேண்டுமானாலும் நடக்கக்கூடும்..' என்பதை அவர்கள்  மிரட்டல் விடுப்பதைப் போல சொல்லிவிட்டிருந்தார்கள். இதைக் கேட்டதும் கட்டிட உரிமையாளர்  ஒரு கணம் பின்வாங்கவேச் செய்தார்.

இரண்டு மாதங்கள் கழித்து அவர் திரும்பவும் பேச்சு வார்த்தையில் இறங்கினார்.  சேதாரம் நடந்தால் இழப்பீடு  தருவதாகப் பேசிப்பார்த்தார். மசூதி போல கட்டப்பட்டிருக்கும் இக்கட்டிடத்தின் ஒரு கல் எங்கள் ஆலயத்தின் மீது விழவேக் கூடாது என  கோயில் நிர்வாகிகள் உறுதியாக சொல்லி பேச்சுவார்த்தையை முறித்துகொண்டார்கள்.

என்ன நடந்தாலும் சரி அதை இடித்தாக வேண்டும் என்பதில் கண்கொத்திப் பாம்பாக இருந்த அவர் இடிப்பு இயந்திரங்களைக் கொண்டு வந்து  அக்கட்டிடத்திற்கு முன்பு நிறுத்தினார். இயந்திரங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை  கண்டவர்கள் அந்த இடத்தைச் சூழத் தொடங்கினார்கள். அந்த இடம் சற்று நேரத்திற்குள் பதட்டத்திற்கு உள்ளானது. நமக்கு ஏன் வீண் வம்பு என்று இயந்திரக்காரர்கள் இயந்திரத்தை எடுத்துகொண்டு தலைத் தெறிக்க ஓட்டமெடுத்தார்கள்.

அக்கட்டிடத்திலிருந்த ஒரே குறை போதுமான நுழைவுவாயில் இல்லாமைதான். அதன்  நுழைவுவாயில் ஒரு குதிரை நுழையும் அளவிற்கே இருந்தது. அந்நுழைவு வாயிலுக்குள் எப்படி நுழைந்தாலும் நுழைய முடியாததாக அவ்வாசல் இருந்தது .  அவ்வாசல் இடத்தில்தான் பிள்ளையார் கோயில் இருந்தது.

ஒரு நாள் அவர் டெல்லியில் வெளியாகும் அனைத்து தினசரிகளிலும் ஒரு பக்கம் அளவிற்கு  விளம்பரம் கொடுத்தார். அருகாமை கட்டிடத்திற்கு ஒரு சேதாரமும் இல்லாமல்  இடித்து தரைமட்டமாக்கும் நிறுவனத்திற்கு பரிசும் இரட்டிப்பு கூலியும் தரப்படும் என அறிவிப்பு செய்தார். அவர் விளம்பரம் கொடுத்த நாட்கொண்டு ஒவ்வொரு நிறுவனமும்  வந்து கட்டிடத்தை எட்டிப்பார்க்கவே செய்தார்களே தவிர யாரும் அதன் மீது கை வைக்கவில்லை. ஒரு வருடக்காலம் அப்படியாகவேச் சென்றது. அக்கட்டிடத்தை விலைக்கொடுத்து வாங்கியிருந்தவரின் வயிறு  புளி கரைக்கத்தொடங்கியது. பல கோடிகள் அதற்குள் விழுந்து ஒரு செரிமானமுமில்லாமல் இருக்கும் அக்கட்டிடத்தை  அவர் வேறொருவரிடம் விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரிந்திருக்கவில்லை.

நான்காவதாக அக்கட்டிடத்தை விலைக்கு  வாங்கியவர் வெளிநாட்டுக்காரராக இருந்தார். அவர் இந்தியர்களின் நுகர்வோர் கலாச்சாரத்தை தெரிந்து வைத்தவராக இருந்தார். அவர் அக்கட்டிடத்தை விலைக்கு வாங்கியதும் அதை சீரமைக்கும் வேலையில் இறங்கினார். கட்டிடத்தின் மீது முளைத்திருந்த புல், புதர் செடிகளை வேரோடுக் களைந்தார். ஒட்டடையடித்தார். வெடிப்புக்கண்ட இடத்தில் மேற்ப்பூச்சு பூசினார். தினமும் இருபது பேர் இரவு பகல் பாராமல் கட்டிடத்தைச் சீரமைக்கும் வேலையில் இறங்கியிருந்தார்கள். இரண்டு மூன்று முறை கட்டிடத்திற்கு வெள்ளையடித்தார்கள்.  அதன் மீது வண்ணப்பசை பூசினார்கள்.

பழைய பாழடைந்தக் கட்டிடம்  ஒரு வாரக் காலத்திற்குள் புதுக்கட்டிடமானது. போகிறவர்கள்  வருகிறவர்களை கட்டிடம் சுண்டி இழுத்து நிற்க வைத்து தான் எப்படி இருக்கேன் எனக் கேட்டுக்கொண்டது.

அவ்வழியில் போகிறவர்கள் வருகிறவர்கள அக்கட்டிட உரிமையாளரைப் பார்ப்பதைப் போலவே  புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை வேடிக்கையோடு பார்த்தார்கள்.

இன்றோ நாளையோ  தானாக இடிந்து விழுந்துவிடப்போகிற கட்டிடத்திற்கு இவர்  வண்ணமடிப்பதைப் பார்....என   கிசுகிசுத்து கொண்டார்கள்.  அந்த வெளிநாடடுக்காரர் யார் பேச்சையும் காதுக்கொடுத்து கேட்பவராக இல்லை. அவர் அவருடையப் போக்கில் கட்டிடத்தைச் சீரமைக்கும் வேலையில் இறங்கி முழுவதுமாக முடித்துவிட்டிருந்தார்

அடுத்ததாக அவருடைய கவனம் கட்டிடம் திறப்பு விழாவை நோக்கித் திரும்பியது. இக்கடைக்குறித்து விளம்பரம் செய்தார். கடை திறக்கப்போகும் ஒரு வாரத்திற்கு முன்பு கடைக்கு வெளியே பெரிய எழுத்துகளால் எழுத்தப்பட்ட கடையின் பெயர் பலகையை  உயரத்தில் நிறுத்தினார். அதில் மின் விளக்குகள் ஒளிர விட்டார்.  கடையின் பெயரும் தடித்த எழுத்தும் போகிறவர் வருகிறவர்களை ஒரு கணம் நிறுத்தி கவனிக்க வைத்தது.

அக்கட்டிடம் திறப்பு விழாவிற்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்றது. கட்டிடம் என்னை யாரும் என்ன செய்திட முடியும் எனக் கேட்பதைப்போல நின்றுகொண்டிருந்தது. 

கட்டிடம் திறப்பு விழா பற்றிய விளம்பரங்கள் டெல்லி தினசரிகளில்  தொடர்ந்து வந்தபடியே இருந்தன. விளம்பரத்தைக் கண்டிருந்த பலரும் கும்பல் கும்பலாக வந்து கடையைப் பார்த்து செல்வதாக இருந்தார்கள். சிலர் புகைப்படம் எடுத்துகொண்டார்கள். 

கடை திறக்கப்படவிருந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியிலிருந்து வெளியாகும்  அனைத்து  தினசரிகளிலும் அக்கட்டிடம் பற்றியச் செய்தி தவறாது இடம் பிடித்திருந்தது. அச்செய்தி இவ்வாறு  இருந்தது.

' புதிதாகத் திறக்கப்படவிருந்த பாகிஸ்தானி பிரியாணிக்கடை  நாசக்கார கும்பலால்  ஒரே இரவில் இடித்து தரை மட்டம்...' 
                                      - பிரசுரம் - பேசும் புதிய சக்தி நவம்பர் - 2017
 

1 கருத்து: