செவ்வாய், 17 அக்டோபர், 2017

ஆப்பிள் கிழவி

நூல் விமர்சனம் - ஆப்பிள் கிழவி
நவீனம் கலந்த மனச்சுனை - ஆப்பிள் கிழவி
சந்தக் கடை மாதிரி ஆகிவிட்டது இலக்கிய உலகம் என்பதாகத் தொடங்குகிறது இந்நூலின் ஆசிரியர் உரை. அவர் அடுத்து சொல்லியிருப்பதைப்போல இங்கே சப்தங்கள் அதிகம் உண்டு. ஆனால் சரக்கு குறைந்துவிடவில்லை. அதற்கு அவருடைய ஆப்பிள் கிழவி சிறுகதைத் தொகுப்பே சாட்சி.

புது உத்தி, மொழி, நடையில் எழுதப்பட்டுக்கொண்டு வருகிறது இன்றைய சிறுகதைகள். அப்படியான நடை மொழியில் எழுதப்பட்டிருக்கும் தொகுப்புதான் ஆப்பிள் கிழவி. இந்த இடத்தில் இந்நூலின் ஆசிரியர் எம். ஆர்.சி. திருமுருகன் பாராட்டப்பட வேண்டியவர். நூலினை அவர் யாருக்கும் காணிக்கை , சமர்ப்பணம் செய்து அவர்களை நீங்கா நினைவில் ஆழ்த்திவிடவில்லை. மற்றொன்று அணிந்துரை எழுத யாருக்கும் அவர் நூலைக் கொடுத்து காத்திருக்கவோ, இதை நீங்கள் படித்தேயாகவேண்டும் என்கிற அன்புக்கட்டளையில் ஆழ்த்தவோ இல்லை. சமீப திரைப்படங்கள் எழுத்து ஓடுகின்ற பொழுதே கதையும் தொடங்கிவிடுவதைப்போலதான் புத்தகத்தைத் திறந்தால் கதை நம்மை அழைத்துக்கொண்டு ஓடத் தொடங்குகிறது.

தொகுப்பில் மொத்தம் எட்டு கதைகள். அத்தனையும் பல்வேறு இதழ்களில் பிரசுரமான கதைகள். இரண்டு கதைகள் போட்டிகளில் பரிசு பெற்ற கதைகளும் கூட. ஒற்றைக்காது என்கிற முதல் கதை இதற்கு மு்ன்பு ஒரு இதழில் வாசித்தக் கதை. இயல்பான நடையில் , ஒரு திருடன், திருடப்போய் மாட்டிக்கொள்ளும் கதி, அதனால் அவனின் ஒற்றைக்காது அறுபடுவது, அதனால் அவனுக்கு ஏற்படும் குற்ற உணர்வு, தற்கொலை செய்துவிடலாம் என அவனுக்குள் அவன் எடுக்கும் முடிவு, ஒரு பாம்பும், குரங்கும் சண்டையிடுவது, பாம்பு வெற்றிப்பெற்றலாம் தற்கொலை செய்துகொள்ளலாம், குரங்கு வெற்றிப்பெற்றால் வீடு திரும்பலாம்,...என்பதாக ஒரு மலையின் உச்சியிலிருந்து பார்ப்பது, பிறகு அவன் நான் ஏன் வாழக்கூடாது...என வீடு திரும்புவது, யாரேனும் கேட்டால் ஒற்றைக் காது அறுப்பட்ட செய்தியை உரக்கச் சொல்வது என்கிற ஆயாசத்துடன் கூடியக் கதை. இக்கதையால் இன்றைய களவாணி தேசத்தின் முகத்தை கலைடாஸ்கோப்பில் பார்த்துவிடலாம். ‘ திருடுவதும் ஒரு கலையே...’ மனோகரா வசனம் நாட்டின் கீதாசாரமாகிவிட்ட நிலையில் அவன் திருடியதற்காக வருந்தச் செய்வது தேசத்தின் முதுகெலும்பை நமிரச் செய்கிறது. இக்கதையை வாசிக்கையில் எனக்கு இமையம் எழுதிய ஒரு சிறுகதை நினைவிற்கு வந்தது.

வயிற்றுப்பசிக்காக திருடப்போகும் ஒருவன் திருட்டுக் கறுப்புசாமியிடம் உத்தரவு கேட்டு உட்கார்ந்திருப்பான், அவன் 2ஜீ, 3ஜீ, போர்பஸ், ,,..இதில் நடந்த திருட்டுகளைச் சொல்லி உத்தரவு கேட்பவன் நான் திருடுவது பசிக்கு . எனக்கொரு உத்தரவு கொடு...என்பதாக பல்லி கீச்சிடுதலுக்காகக் காத்திருக்கும் கதை ஒற்றைக்காதுடன் பொறுத்திப்பார்க்க வேண்டிய ஒன்று.

பாலு பையன் என்கிற சிறுகதை வேறொரு வடிவிலானது. இக்கதையில் ஓரிடம் .‘ யார் செய்தப் பாவங்களோ நம் தலையில் பெண் சவளப்பிள்ளையாய் வந்துப் பிறந்து விழுந்துவிட்டது. இந்தப் பாவத்தைச் செய்து வேறு ஒரு பாவமா? மகள் இறந்தால் ஒரு கன்னிப்பெண் குலதெய்வமாய் மாறிவிடுவாள்....’ என்கிற இடம் பெண்ணை இருப்பு, இறப்பு என்கிற இரண்டு கோணத்தில் பார்க்கும் வலி. இது ஒன்றும் கற்பனையானதில்லை. கடைசியில் சவளப்பிள்ளையை அக்கா மகன் பாலு பையன் ஏற்றுக்கொள்வதும், சவளப்பிள்ளை மனை ஏறுவதும் சுபம்.

ஆப்பிள் கிழவி நாவலாக எழுதியிருக்க வேண்டிய சரித்திரமும், கிராமியமும் புனைவும் கொண்ட ஒரு குறியீட்டுக் கதை. ஆப்பிள் கிழவி நாகமலையின் அடிவாரத்தில் நீர்சினையாக இருப்பதும், அவள் சிலந்தி, கருவண்டுடன் வாழ்ந்து வருவதுமான கதையோட்டம் ஒரு பகுதி. மற்றொரு பகுதியில் ஒரு சிறுவன் அம்மாயி வீட்டிற்கு போவதுமான பயணம். இதற்கிடையில் சோமபுரி அரண்மனை, சமஸ்தானம், மாறவன், ஒரே மகன் சசிதரன், தாய் வள்ளியம்மை, மகள் பார்கவி , சண்முகப்பண்டாரம் இவற்றுடன் ஆப்பிள் கிழவியையும் விடுமுறைக்காக அம்மாயி வீட்டிற்குச் செல்லும் சிறுவனும் பொருந்துவதுதான் கதை. ஒரு சரித்திரக் கதை, ஒரு உண்மைக்கதை இரண்டும் கதையின் முடிவில் கைக்கோர்பது கதைக்கும் தொகுப்பிற்கும் கனம் சேர்க்கிறது. ஒரு சில பத்திகளே வந்து சென்றாலும் பார்கவி மனதில் பதிந்து விடுகிறாள். சண்முகப்பண்டாரம் மாயாஜாலம் செய்யும் பேர்வழியாக காட்டுகையில் தெரிந்துவிடுகிறது காமப்பேர் வழி என்று.

ஆப்பிள் கிழவி , அவள் வாழும் நாகமலை நீர்ச்சுனை அதைச்சூழ்ந்த காட்சி வர்ணனைகளால் இக்கதை மற்றக் கதைகளிலிருந்து வேறுபடுகிறது. கிழக்கு வானம் சிவந்திருப்பதை இறைவன் வெற்றிலை எச்சிலைத் துப்பிய சிவப்பு என்றும் இன்னொரு இடத்தில் மேற்கு வானச் சிவப்பை வெட்கச் சிவப்பு என்றும் வர்ணித்தது கதையின் ஓட்டத்தில் அழகு சேர்க்கிறது. இத்தனையும் அம்மாயி வீட்டிற்கு செல்லும் சிறுவனின் மாமா என்னவானான்..? என்பதைச் சுற்றிய கதைப்பின்னல் என்பதால் கதை கற்பனை சுருளிலிருந்து தாண்டி நிகழ்காலப் புனைவிற்கு வந்து நிற்கிறது.

இதே போன்று தைலக்கிணறு மற்றொரு புனைவு குறியீட்டு சிறுகதை. அருள்வாக்கு அங்கதச் சுவை கொண்ட சாமியார், ஜோதிடம், பில்லி, சூனியம் இவற்றை கேலியும், சில எச்சரிப்புகளையும் செய்யும் கதை..

இப்படியாக ஆப்பிள் கதை சிறுகதைத் தொகுப்பு நவீனமும் கிராமியமும், புனைவும், மனச்சாட்சியுடன் வாழக்கூடிய மனிதனைப் பேசும் கதையாக வந்திருக்கிறது. நல்ல வரவு. ஆப்பிள் கிழவி சிலந்து வலையின் வழியே சிறுகதை உலகத்திற்குள் கரையேறுகிறாள். கை நீட்டி அழைக்கும் பொறுப்பு தமிழ் சிறுகதை வாசகர்களுக்கு இருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக