செவ்வாய், 17 அக்டோபர், 2017

ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்

ரெயினீஸ் ஐயர் தெரு குறுநாவல் அளவில் இருக்கிறது. எண்பதுகளின் தொடக்கத்தில் வெளிவந்த நாவல் அது. இலக்கிய ரீதியில் நான் யாருக்காவது பெரிதும் கடன்பட்டிருக்கிறேன் என்றால் அது க.நா.சு.வுக்குத்தான். ‘ இலக்கிய விசாரம்’ என்ற நூலில் க.நா.சு ‘எழுத்தில் சோதனை முயற்சிகள் செய்து பார்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கருத்தை என் இலக்கியச் செயல்பாடுகளின் அடிப்படை அம்சமாகக் கொண்டுள்ளேன் என்கிறார் முன்னுரையில் வண்ணநிலவன். ரெயினீஸ் ஐயர் தெரு நாவலை வாசிக்கையில் அதன் உருவமும், நடையும் அப்படியாகத்தான் தோன்றுகிறது.


ரெயினீஸ் ஐயர் தெருவின் ஆரம்பம் திருவனந்தபுரம் ரோட்டிலிருந்து பிரிகிறது. இருபுறமும் வீடுகள் கொண்ட மொத்தமே ஆறு வீடுகள். அவ்வீடுகள் அவர்களின் வாழ்க்கைச்சூழல் , கொண்டாட்டம், அமைதி, இருப்பு, வாழ்க்கைக்கூறுகள் , அன்றாட பொழுது போக்குகள் இவற்றைச் சொல்லிச்செல்வதுதான் இந்நாவல். முதல்வீடு - இரண்டாவது வீடு - மூன்றாவது வீடு - திரும்பவும் முதல் வீடு - நான்காவது வீடு - இன்றொரு நாள் முதல் வீடு - தெரு -இப்படியாக வடிவமைப்பைக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் நாவல் இது. முதல் வீடு டாரதி , இரண்டாவது வீடு இருதயத்து டீச்சர், மூன்றாவது வீடு அற்புத மேரி , நான்காவது வீடு ஆசீர்வாதம் பிள்ளையின் வீடு, இதைக்கடந்து தெரு இவற்றைப்பற்றி பேசும் இந்நாவல் தாயிடமிருந்து பிரிந்து தனித்து மேயும் ஒரு பெட்டை கோழிக்குஞ்சில் தொடங்கி கோழிக்குஞ்சில் முடிகிறது. மழைக்கு பிடித்தமான அத்தெருவில் இன்பம், துன்பம், துக்கம், கொண்டாட்டம் இவற்றைக் கடந்து போகிறது. அம்மாவை குழந்தைப் பருவத்தில் இழந்துநிற்கும் டாரதி பெரியம்மா வீட்டில் வசிக்கிறாள். தாய் இல்லாமல் தனித்து வாடும் அவளது நாட்கடத்தலை தாயிடமிருந்து பிறந்து இரைதேடும் கோழிக்குஞ்சுடன் ஒப்பீடுவதும் ரேயஜனீஸ் ஐயரின் கல்லறை, கல்லறையிலிருந்து வெளிவரும் பாம்பு ஒன்று ரோஸம்மாள் என்கிற அபூர்வமான பெண் செத்துப்போவதுமான கதையாக்கம் ஓர் அலையுமில்லாமல் சலனமற்று போகும் கதையில் குறுக்கலையை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு வீட்டின் கதையை சொல்லி தெருவிற்கு அழைத்து வரும் இக்கதைப்பின்னல் முதலில் வாசிக்கையில் குழப்பம் வரத்தான் செய்யும். காரணம் தொடர்ச்சியின்மை. கதை மீண்டும் முதல் வீட்டிற்கும், தெருவிற்கும் வருகையில்தான் கதையோட்டம் புதிய உத்தி என்று தெரிய வருகிறது.
வண்ணநிலவன் முன்னுரையில் சொல்லியிருப்பதைப்போல ஓரெ ஒரு சந்தர்ப்பத்தில் தவிர , நாவலில் எந்தக் கதாபாத்திரங்களுக்கிடையிலும் , நேரடியான உரையாடல்கள் இல்லை. ஆனால் இக்கதையை வாசித்ததும் யாரிடமேனும் உரையாடத் தோன்றுவதில் ரெயினீஸ் ஐயர் தெரு குறுநாவல் பேசும் நாவலாகிறது

நர்மதா பதிப்பகம் .

ஆப்பிள் கிழவி

நூல் விமர்சனம் - ஆப்பிள் கிழவி
நவீனம் கலந்த மனச்சுனை - ஆப்பிள் கிழவி
சந்தக் கடை மாதிரி ஆகிவிட்டது இலக்கிய உலகம் என்பதாகத் தொடங்குகிறது இந்நூலின் ஆசிரியர் உரை. அவர் அடுத்து சொல்லியிருப்பதைப்போல இங்கே சப்தங்கள் அதிகம் உண்டு. ஆனால் சரக்கு குறைந்துவிடவில்லை. அதற்கு அவருடைய ஆப்பிள் கிழவி சிறுகதைத் தொகுப்பே சாட்சி.

புது உத்தி, மொழி, நடையில் எழுதப்பட்டுக்கொண்டு வருகிறது இன்றைய சிறுகதைகள். அப்படியான நடை மொழியில் எழுதப்பட்டிருக்கும் தொகுப்புதான் ஆப்பிள் கிழவி. இந்த இடத்தில் இந்நூலின் ஆசிரியர் எம். ஆர்.சி. திருமுருகன் பாராட்டப்பட வேண்டியவர். நூலினை அவர் யாருக்கும் காணிக்கை , சமர்ப்பணம் செய்து அவர்களை நீங்கா நினைவில் ஆழ்த்திவிடவில்லை. மற்றொன்று அணிந்துரை எழுத யாருக்கும் அவர் நூலைக் கொடுத்து காத்திருக்கவோ, இதை நீங்கள் படித்தேயாகவேண்டும் என்கிற அன்புக்கட்டளையில் ஆழ்த்தவோ இல்லை. சமீப திரைப்படங்கள் எழுத்து ஓடுகின்ற பொழுதே கதையும் தொடங்கிவிடுவதைப்போலதான் புத்தகத்தைத் திறந்தால் கதை நம்மை அழைத்துக்கொண்டு ஓடத் தொடங்குகிறது.

தொகுப்பில் மொத்தம் எட்டு கதைகள். அத்தனையும் பல்வேறு இதழ்களில் பிரசுரமான கதைகள். இரண்டு கதைகள் போட்டிகளில் பரிசு பெற்ற கதைகளும் கூட. ஒற்றைக்காது என்கிற முதல் கதை இதற்கு மு்ன்பு ஒரு இதழில் வாசித்தக் கதை. இயல்பான நடையில் , ஒரு திருடன், திருடப்போய் மாட்டிக்கொள்ளும் கதி, அதனால் அவனின் ஒற்றைக்காது அறுபடுவது, அதனால் அவனுக்கு ஏற்படும் குற்ற உணர்வு, தற்கொலை செய்துவிடலாம் என அவனுக்குள் அவன் எடுக்கும் முடிவு, ஒரு பாம்பும், குரங்கும் சண்டையிடுவது, பாம்பு வெற்றிப்பெற்றலாம் தற்கொலை செய்துகொள்ளலாம், குரங்கு வெற்றிப்பெற்றால் வீடு திரும்பலாம்,...என்பதாக ஒரு மலையின் உச்சியிலிருந்து பார்ப்பது, பிறகு அவன் நான் ஏன் வாழக்கூடாது...என வீடு திரும்புவது, யாரேனும் கேட்டால் ஒற்றைக் காது அறுப்பட்ட செய்தியை உரக்கச் சொல்வது என்கிற ஆயாசத்துடன் கூடியக் கதை. இக்கதையால் இன்றைய களவாணி தேசத்தின் முகத்தை கலைடாஸ்கோப்பில் பார்த்துவிடலாம். ‘ திருடுவதும் ஒரு கலையே...’ மனோகரா வசனம் நாட்டின் கீதாசாரமாகிவிட்ட நிலையில் அவன் திருடியதற்காக வருந்தச் செய்வது தேசத்தின் முதுகெலும்பை நமிரச் செய்கிறது. இக்கதையை வாசிக்கையில் எனக்கு இமையம் எழுதிய ஒரு சிறுகதை நினைவிற்கு வந்தது.

வயிற்றுப்பசிக்காக திருடப்போகும் ஒருவன் திருட்டுக் கறுப்புசாமியிடம் உத்தரவு கேட்டு உட்கார்ந்திருப்பான், அவன் 2ஜீ, 3ஜீ, போர்பஸ், ,,..இதில் நடந்த திருட்டுகளைச் சொல்லி உத்தரவு கேட்பவன் நான் திருடுவது பசிக்கு . எனக்கொரு உத்தரவு கொடு...என்பதாக பல்லி கீச்சிடுதலுக்காகக் காத்திருக்கும் கதை ஒற்றைக்காதுடன் பொறுத்திப்பார்க்க வேண்டிய ஒன்று.

பாலு பையன் என்கிற சிறுகதை வேறொரு வடிவிலானது. இக்கதையில் ஓரிடம் .‘ யார் செய்தப் பாவங்களோ நம் தலையில் பெண் சவளப்பிள்ளையாய் வந்துப் பிறந்து விழுந்துவிட்டது. இந்தப் பாவத்தைச் செய்து வேறு ஒரு பாவமா? மகள் இறந்தால் ஒரு கன்னிப்பெண் குலதெய்வமாய் மாறிவிடுவாள்....’ என்கிற இடம் பெண்ணை இருப்பு, இறப்பு என்கிற இரண்டு கோணத்தில் பார்க்கும் வலி. இது ஒன்றும் கற்பனையானதில்லை. கடைசியில் சவளப்பிள்ளையை அக்கா மகன் பாலு பையன் ஏற்றுக்கொள்வதும், சவளப்பிள்ளை மனை ஏறுவதும் சுபம்.

ஆப்பிள் கிழவி நாவலாக எழுதியிருக்க வேண்டிய சரித்திரமும், கிராமியமும் புனைவும் கொண்ட ஒரு குறியீட்டுக் கதை. ஆப்பிள் கிழவி நாகமலையின் அடிவாரத்தில் நீர்சினையாக இருப்பதும், அவள் சிலந்தி, கருவண்டுடன் வாழ்ந்து வருவதுமான கதையோட்டம் ஒரு பகுதி. மற்றொரு பகுதியில் ஒரு சிறுவன் அம்மாயி வீட்டிற்கு போவதுமான பயணம். இதற்கிடையில் சோமபுரி அரண்மனை, சமஸ்தானம், மாறவன், ஒரே மகன் சசிதரன், தாய் வள்ளியம்மை, மகள் பார்கவி , சண்முகப்பண்டாரம் இவற்றுடன் ஆப்பிள் கிழவியையும் விடுமுறைக்காக அம்மாயி வீட்டிற்குச் செல்லும் சிறுவனும் பொருந்துவதுதான் கதை. ஒரு சரித்திரக் கதை, ஒரு உண்மைக்கதை இரண்டும் கதையின் முடிவில் கைக்கோர்பது கதைக்கும் தொகுப்பிற்கும் கனம் சேர்க்கிறது. ஒரு சில பத்திகளே வந்து சென்றாலும் பார்கவி மனதில் பதிந்து விடுகிறாள். சண்முகப்பண்டாரம் மாயாஜாலம் செய்யும் பேர்வழியாக காட்டுகையில் தெரிந்துவிடுகிறது காமப்பேர் வழி என்று.

ஆப்பிள் கிழவி , அவள் வாழும் நாகமலை நீர்ச்சுனை அதைச்சூழ்ந்த காட்சி வர்ணனைகளால் இக்கதை மற்றக் கதைகளிலிருந்து வேறுபடுகிறது. கிழக்கு வானம் சிவந்திருப்பதை இறைவன் வெற்றிலை எச்சிலைத் துப்பிய சிவப்பு என்றும் இன்னொரு இடத்தில் மேற்கு வானச் சிவப்பை வெட்கச் சிவப்பு என்றும் வர்ணித்தது கதையின் ஓட்டத்தில் அழகு சேர்க்கிறது. இத்தனையும் அம்மாயி வீட்டிற்கு செல்லும் சிறுவனின் மாமா என்னவானான்..? என்பதைச் சுற்றிய கதைப்பின்னல் என்பதால் கதை கற்பனை சுருளிலிருந்து தாண்டி நிகழ்காலப் புனைவிற்கு வந்து நிற்கிறது.

இதே போன்று தைலக்கிணறு மற்றொரு புனைவு குறியீட்டு சிறுகதை. அருள்வாக்கு அங்கதச் சுவை கொண்ட சாமியார், ஜோதிடம், பில்லி, சூனியம் இவற்றை கேலியும், சில எச்சரிப்புகளையும் செய்யும் கதை..

இப்படியாக ஆப்பிள் கதை சிறுகதைத் தொகுப்பு நவீனமும் கிராமியமும், புனைவும், மனச்சாட்சியுடன் வாழக்கூடிய மனிதனைப் பேசும் கதையாக வந்திருக்கிறது. நல்ல வரவு. ஆப்பிள் கிழவி சிலந்து வலையின் வழியே சிறுகதை உலகத்திற்குள் கரையேறுகிறாள். கை நீட்டி அழைக்கும் பொறுப்பு தமிழ் சிறுகதை வாசகர்களுக்கு இருக்கிறது.


ஞாயிறு, 15 அக்டோபர், 2017

யாரோ ஒருத்தியின் கடிதம் (குறுநாவல் ) - ஸ்டெபான் ஸ்வெய்க் @தமிழில் - ராஜ்ஜா

புகழ்பெற்ற நாவலாசிரியர் ரா...வெளியூர் சென்று திரும்பி வருகையில் வீட்டில் குவிந்து கிடக்கும் கடிதத்தில் ஒன்றைப் பிரித்து வாசிக்கிறார். அக்கடிதம் தன் பெயரைக் குறிப்பிடாத ஒரு பெண்ணின் கடிதமாக இருக்கிறது.

மகன் இறந்துகிடக்க அவனைச் சுற்றி மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டிருக்க அந்த வெளிச்சத்தில் எழுதி அனுப்பிய கடிதமாக அக்கடிதம் இருக்கிறது. சின்ன வயதிலிருந்து உங்களை நான் காதலித்து வந்ததாகவும் உங்களைத் தொட , பார்க்க , ரசிக்க , சிரிக்க இருந்ததாகவும் நீங்கள் வசிக்கும் அதே வீட்டில்தான் நான் என் தாயுடன் வசித்து வந்ததாகவும் பிறகு என் தாய் வேறொரு திருமணம் செய்துகொண்டதும் அந்த இடத்தை விட்டு வெளியேறியதாகவும் நீள்கிறது கதை.

ஒரு நாள் எழுத்தாளரை நேரில் சந்திக்கிறாள். தனிமையில் இருக்க  அவளை அவன் அழைக்கிறான். அவனுக்கு அவளைக் கொடுக்கிறாள். அந்த குழந்தைதான் இறந்தக் குழந்தை என்பதை வாசிக்கையில் கதை திருப்பம் கொள்கிறது.

என்னை நீங்கள் சந்திக்க வர வேண்டாம். ஒரு வேளை வந்தால் நான் இறந்தே இருப்பேன். உங்கள் பிறந்த நாள் அன்று எப்பொழுதும் நான் வெள்ளை ரோஜா அனுப்பி வைப்பேன். இனி என்னால் அனுப்பி வைக்க முடியாது. நீங்களே பூஞ்சாடியில் ஒரு வெள்ளை ரோஜாவை வைத்து என் நினைவூட்டிக்கொள்ளுங்கள்   என்பதாக கடைசி பத்தியை நோக்கி நகரும் கடிதம் உங்களை நான் காதலிக்கிறேன்...மனதார நேசிக்கிறேன்...என் அன்பே நான் போகிறேன்...
என்பதோடு கதை முடிகிறது.


இக்குறுநாவலையொட்டி ஆசிரியரைக்குறித்தும் சொல்லியாக வேண்டும். யூதர். ஜெர்மனியிலிருந்து விரட்டப்பட்டவர் அமெரிக்கா , பிரேசில் என அடைக்கலம் தேடி கடைசியில் தற்கொலைக்கு உள்ளானவர். சிக்மண்ட் ப்ராய்டின் சீடர்.

Letter from an unwoman.

தமிழினி பதிப்பகம்.