ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

விக்கிரமன் நினைவு தினக் கட்டுரைப் போட்டி

தலைப்புகள்
1. புதுக்கவிதையில் மானுடச் சிந்தனைகள்

2. உலக அரங்கில் இந்தியாவின் பங்களிப்பு

3. இன்றைய இளைய தலைமுறையினரின் சிந்தனையும் செயல்பாடும்

4.ஆன்மிக மறுமலர்ச்சியில் மகான்கள்

பனிரெண்டு கட்டுரைகள் தேர்வு. மொத்தப்பரிசு 12000

கடைசி தேதி 30.09.2017

முகவரி
இலக்கியப் பீடம்
எண் 3 ஜெய்சங்கர் தெரு
மேற்கு மேம்பாலம்
சென்னை 33
ilakiyapeedam@gmail.com

சனி, 16 செப்டம்பர், 2017

எல்லா சொல்லும் பொய் குறித்தனவே


நிற வேறுபாடு தலைத்தூக்கியிருந்தக் காலத்தில் மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற கனவோடு ஒரு கருப்பின மாணவி மருத்துவ கல்லூரிக்குள் நுழைந்தாள். ஒரு கருப்பின பெண் தமக்கு நிகராக மருத்துவம் படிப்பதா…என வெகுண்டெழுந்த ஆங்கிலேய மருத்துவர்கள் அவளை அழைத்து அவளுக்கொரு தேர்வு வைத்தார்கள். அத்தேர்வு இப்படியாக இருந்தது. ‘ கை  நடுக்கமில்லாமல் உனக்கு நீயே இந்த ஊசி மருந்தை செலுத்திக்கொள்ள வேண்டும்’ அவளுக்கு முன்பு ஊசி, சிரஞ்ச், மருந்துக்குப்பி வைக்கப்பட்டிருந்தன. மருந்துக்குப்பியை எடுத்துப்பார்த்தாள் அவள். அக்குப்பியில் இருப்பது விஷமாக இருந்தது. விஷம் எனத் தெரிந்தும் மருத்துவராகும் கனவில் விஷத்தை சிரஞ்ச்சில் எடுத்து கை நடுக்கமுமில்லாமல் அவளது உடம்பில் செலுத்திக்கொண்டு மருத்துவராகிவிட்ட மகிழ்ச்சியில் வேரோடு சாய்ந்தாள்.
நீக்ரோ என்கிற சொல் தென்னாப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய பொழுது மருத்துவம் படிக்க விரும்பிய ஒரு கருப்பினப் பெண்ணிற்கு ஏற்பட்ட கோர நிகழ்வு இது. அவளது மரணத்தை  உலகப் பத்திரிக்கைகள் இவ்வாறு எழுதின. ‘அவளது கனவு மருத்துவராக வேண்டும் என்பதுதான்.  மருத்துவராக வாழ்வதில் அல்ல…’


மருத்துவர் ஆகுதல் - மருத்துவராக வாழ்த்தல் இரண்டுக்கும் இடையில் ஆறுக்கும் மேற்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. அதில் ஒரு வித்தியாசம் டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் அனிதாவிற்கும் இடையிலான வித்தியாசம்.  இரண்டாவது டாக்டர் கிருஷ்ணசாமி மகளுக்கும் அனிதாவிற்கும் இடைப்பட்ட வித்தியாசம். அடுத்து டாக்டர் தமிழிசை சௌந்தராஜனுக்கும் அனிதாவிற்கும் இடைப்பட்டதாக இருக்கிறது.
சட்டப் பேரவையில் அவசரச் சட்டம் இயற்றி வந்தால் தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கித் தரப்படும் என்கிற ஆசை வார்த்தையை வார்த்தார் நம் ஊர்க்காரரான மாண்புமிகு அமைச்சர் நிர்மலா சீதாராமன். பொய் சொன்ன வாய்க்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. நம் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஒன்றுக்கூடி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி டெல்லி அனுப்பிவைத்ததும் மருத்துவராகிவிட்ட கனவில் மூழ்கத் தொடங்கினார் அனிதா.
சட்ட பேரவையின் தீர்மானம் தோல்வியைத் தழுவியது. இனி ஒரு நொடியேனும் காத்திருப்பதில் பயனில்லை என்ற உணர்ந்த அனிதா சுப்ரீம் கோர்ட் கதவுகளைத் தட்டத் தொடங்கினாள். இதற்கிடையில் தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு எதிரானப் போராட்டம் ஆங்காங்கே வெடித்துகொண்டிருந்தது. பிரச்சனை கோர்ட் வரைக்கும் சென்றதால் மராட்டிய எழுத்தாளர் விஜய் டெண்டுல்கர் எழுதிய ஒரு நாடகமான ‘அமைதி! கோர்ட் நடந்துகொண்டிருக்கிறது’ ரீதியில் நம் மக்கள் கோர்ட் சமிக்ஞையை எதிர்ப்பார்த்து ஒட்டுத் திண்ணையில் உட்கார்ந்தார்கள்.
உச்ச நீதிமன்றத்தை அனிதா பெரிதாக நம்பினாள். அப்படியாக அவள் நம்பக்காரணம் நீதி மன்றத்தின் நீதி தேவதையும் அது கையில் பிடித்திருக்கும் தராசும்தான். நீதி தேவதை நீதி தேவர்களால் வடிக்கப்பட்டது. நீதி தேவதை பார்வையில் குருடாக இருந்தாலும் அதன் காதுகள் கூர்மையானவை. எதையும் கூர்ந்துக் கேட்கும் தேவதை தன் ஏக்கக்குரலை காதுக்கொடுத்து கேட்கத்தான் போகிறது. அதன் வழியே தன் கோரிக்கை வெல்லத்தான் போகிறது என பகல் கனவு கண்டுக்கொண்டிருந்தாள். நீதி தேவதை என்ன செய்வாள் பாவம்! அவளும் பெண் தானே! நீட் தேர்விற்கு எதிராக வறிந்துக்கட்டிக்கொண்டு வாதாடியவர்கள் வாய்ச்சொல்லில் வீரராகிப்போனார்கள். அனிதா என்ன செய்வாள்! தாய் இல்லாத பிள்ளை. நான் கூடாதக் கனவொன்றைக் கண்டிருக்கிறேனென தற்கொலை செய்துகொண்டாள்.


அனிதா தரப்பிலிருக்கும் ஒரு குறை அவள் மருத்துவராகக்  கனவு கண்டதுதான். ஆனால் அதே நேரம் அவளைக் கொன்றதிலும் கொல்லப்பட்டவளைத் திரும்பத் திரும்ப கொலை செய்ததிலும் மருத்துவர்களின் பங்கு பெரும்பங்காற்றியிருக்கிறது. அனிதா செய்துகொண்டது தற்கொலை. இப்படியான ஒரு முடிவை அவள் எடுத்திருக்க வேண்டியதில்லை. இத்தற்கொலையை அவளுக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை என்பதற்காகப் பார்க்கிறார்கள்.  அவள் எடுத்திருந்த மொத்த மதிப்பெண், மருத்துவ படிப்பிற்குரிய கட் ஆப் மதிப்பெண் இரண்டும் அவளுக்கான மருத்துவ படிப்பை உறுதி செய்திருக்கிறது. இந்நிலையில் அவளது தற்கொலை என்பது தனக்கு மருத்துவ வாய்ப்பு கிடைக்கவில்லை  என்பதற்கானது அல்ல. தமிழ்நாட்டில் நீட் தேர்வு என்கிற ஒன்று கூடவே கூடாது என்பதற்கானது.


அனிதாவின் தற்கொலையில் மர்மம் இருக்கிறது. அதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் மனு நீட்டியிருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. யாரால் அனிதாவிற்கு நீதி கிடைத்திருக்க வேண்டுமோ அவரிடம் அவளது மரணத்திற்கான விசாரணை மனு போய்ச்சேர்ந்திருப்பது இவ்வாண்டின் மிகக்கொடுமையான கொடூரம். சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. விசாரித்தால் தனக்கு மருத்துவ சீட்டு கிடைக்குமா என்பதே அனிதாவின் கவலை. அனிதாவிற்கு கிடைக்கவிட்டாலும் அனிதா போல கவிதா, புனிதா,….யாரேனும் ஒருவருக்கு கிடைத்தாலும் பரவாயில்லைதான்!
நீட் தேர்வு இல்லாத காலத்தில் மருத்துவம் படித்து  டாக்டராகிய கிருஷ்ணசாமி, தான் மட்டும் மருத்துவம் பயின்றது போதாதென்று தன் மகளையும் மருத்துவராக துடித்தார். அவரது மகள்  இன்றைய அனிதாவை விடவும் குறைவான மதிப்பெண் பெற்றிருந்த போதிலும் எப்படியேனும் மருத்துவ இடம் பெற்றுவிட முணைப்பில்  அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மூலமாக மகளுக்கு மருத்துவ சீட் பெற்ற செய்தியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி போட்டுடைக்க தற்கொலை செய்துகொள்ளுமளவிற்கு அவருடைய சுயநல அரசியல் நடுசந்திக்கு வந்து நிற்கிறது.


அனிதா தற்கொலை சந்தேகத்திற்கு உட்பட்டது என்றார் அவர். அவரது இக்கருத்தை புறம் தள்ள வேண்டியதில்லை. சந்தேகத்திற்கு உட்பட்ட ஒன்றாகவே இருக்கலாம். தமிழகம் ஒன்றும் அத்தனை புனிதமான ஒன்று இல்லை. நீட் தேர்விற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணமே மர்மமாக இருக்கையில் அனிதா தற்கொலை வெறும் தற்கொலைதான் என நம்ப வேண்டியதில்லைதான்.  அத்தற்கொலைக்கு அவர் கற்பிக்கும் காரண - காரியம்தான் ஆணாதிக்க உலகத்தை  சீழ் வடிய வைக்கிறது. அனிதா இளவயதுக்காரர். அவரை டெல்லி வரைக்கும் அழைத்துசென்றது யார், அவரை எங்கே தங்க வைத்தார்கள்….? அவருடன் யார் துணைக்கு தங்கியிருந்தார்கள்,.. என்பதாக  நீளும் அவருடைய சந்தேகக் கேள்விகள் அனிதாவின் தற்கொலையை திசைத்திருப்பும் வேலையை மட்டும் செய்யவில்லை. ஒரு வேளை நாம் , நம் சகோதரி, மகள், தாயை அழைத்துகொண்டு ஆண் மருத்துவர்களிடம் மருத்துவச்சிகிச்சை எடுத்துக்கொள்ள செல்கையில் மருத்துவர்களின் கற்பு நெறியை ஜெராக்ஸ் எடுத்து பார்த்துக்கொள்ள தூண்டியிருக்கிறது.


அவர் எதையோ சொல்லி அதை முழுமையாகச் சொல்லி முடிக்க முடியாமல் பாதியோடு இடையில் நிறுத்தியிருக்கிறார். அவரது அறிக்கையிலிருந்து ஒன்றைப் புரிந்துகொள்ள  முடிந்தது. டாக்டர் கிருஷ்ணசாமி மொழிதலின் படி சொல்வதாக இருந்தால் இளவயது ஒரு பெண் நீதிப்பிச்சைக்கேட்டு சுப்ரீம் கோர்ட் வரைக்கும் சென்றிருக்கக்கூடாது. ஓர் இளம்பெண்ணை ( அனிதாவை ) ஓர் கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர் உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுத்திருக்க முடியும்  என்றால் அதே வயதுடைய இளம் பெண்ணுக்கு ஓர் ஆண் மருத்துவரால் மனம் நோகும்படியாக உளவியல் சித்தரவதை செய்யவும் முடியும். அப்படித்தானே !
அடுத்து அவருடைய விளக்கம் இவ்வாறு இருந்திருக்கிறது. அனிதா அப்படியாக தற்கொலை செய்திருக்க வேண்டியதில்லை. மருத்துவம் மட்டுமே வாழ்க்கையா என்ன..? சரிதான். அனிதா பாவம். அவள் வெறும் புத்தகப் புழுவாகவே இருந்துவிட்டு போயிருக்கிறாள்.  அனிதா டாக்டர் கிருஷ்ணசாமியை ஒரு கணம் ஆழ்ந்து கவனித்திருக்க வேண்டும்.
தலித் வாக்குகளைப் பெற்று சட்டமன்றத்திற்குள் தனித்துவமாக நுழைந்த டாக்டர் கிருஷ்ணசாமி (இப்போதைக்கு அவர் தலித் அல்ல) தமிழக பல்வேறு  துறைகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு  இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. அதற்கான வெள்ளை அறிக்கை வேண்டுமென உரக்கப்பேசி தாழ்த்தப்பட்ட மக்களிடம் மதிப்பு மரியாதையைக் கூட்டிக்கொண்ட டாக்டர் கிருஷ்ணசாமி , அடுத்த தேர்தலில் சாதி ஓட்டுகளை நம்பி தோல்வியைச் சந்தித்ததும் தலித் அரசியல் நீரோட்டத்திலிருந்து நீந்தி கரையேயில்லாத கரையில் ஏறி நின்று உரத்தக்குரல்களைக் கொடுத்துகொண்டிருக்கிறார். நாங்கள் தலித் அல்ல. மாட்டுக்கறி  சாப்பிடுவது உடம்பிற்கு கேடு. நீட் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, நீட் தேர்வில் இந்த வருடம் வெற்றிப்பெற முடியவில்லையென்றால் அடுத்த வருடம்...அதிலும் முடியவில்லை என்றால் அடுத்த வருடம்….இப்படியாக கீதாசாரம் ஒப்பிக்கும் அவரது சமீப வளர்ச்சியை நூலைப் பிடித்து பார்ப்போமேயானால் நூலின் ஒரு  முனை  கேரளாவில் புதிதாக  கட்டிக்கொண்டிருக்கும் மருத்துவமனையில் போய் நிற்கவே செய்யும். அதற்குள் பசை கண்ட இடத்தில் ஒட்டிக்கொள்ளும் சாமர்த்தியம் தெரியக்கூடும். தலித் அரசியலை ‘நூல் அரசியலுடன்’ கலந்து அவருக்கான பீடத்தை உயர்த்திக்கொள்ளும் வேலையை கவனித்திருக்கக்கூடும்.

இதைக்கொண்டு அனிதா ஒரு முடிவிற்கு வந்திருக்கலாம். மருத்துவ படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. அதைத்தாண்டி அரசியல் இருக்கிறது. அதுவுமே கைக்கூட வில்லையென்றால் இருக்கவே இருக்கிறது. குலத் தொழில். காரிகை கற்று கவி பாடுவதிலும் பேரிகைக்கொட்டி பிழைப்பது மேல்! இதையே டாக்டர் கிருஷ்ணசாமி மொழிதலில் சொல்வதாக இருந்தால் மருத்துவராகி மருத்துவமனை கட்டுவதைக்காட்டிலும் பேரிகைக் கொட்டி பிழைப்பது மேல் அப்படித்தானே!
மருத்துவரின் வாய்த்துர்நாற்றத்தைப்பற்றி நாடோடிக் கதை ஒன்றுண்டு. ஒரு மருத்துவர் இருக்கிறார். அவரிடம் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள மக்கள் தயங்குகிறார்கள். காரணம் அவர் பேசுகையில் வரும் வாய்த்துரு நாற்றம். மருத்துவ தொழில் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. அவர் மருத்துவத் தொழிலைக் கைவிட்டு பிற தொழில்களுக்கு மாறுகிறார். மற்றத் தொழில்கள் அவருக்கு பேரும் புகழையும் பெற்றுத்தருகிறது.
மற்றத் தொழிலின் வழியே அவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். முதல் நாள் இரவில் அவரது வாய்த்துரு நாற்றத்தை பொறுக்க முடியாமல் மனைவி விலக நினைக்கிறாள். மனைவியை சமாதானம் செய்யும் பொருட்டு மருத்துவர் சொல்கிறார். இது வாய்த்துரு நாற்றம் அல்ல. நான் மருத்துவர் இல்லையா! போஸ்ட்மார்ட்டம் பிரிவில் வேலைப்பார்க்கிறேன் இல்லையா! அத்தொழிலால் வரும் நாற்றம் என்கிறார். அதற்குப் பிறகு ஊர்மக்கள் பேசிக்கொள்வார்கள்.  ‘ மருத்துவர் வாய் இருக்கிறதே..அது நல்ல வாய். ஆனால் அவர் வேலைச் செய்யும் இடம்தான் நாற்றமுடையதாக இருக்கிறது’

புதன், 6 செப்டம்பர், 2017

ஹெச்.ஜி.ரசூலின் பேட்டிக்கட்டுரை

கொலை செய்வதற்கு ஆயுதங்களோடு
எப்போதும் துரத்தி வருகின்றனர்
அல்லது தற்கொலை செய்வதற்கான எல்லா
சாத்தியங்களையும் திறந்து வைத்திருக்கின்றனர்
எலிப்பொறி வைத்து பிடித்துவிட்டால்
எழுத்துக்கள் எலிகளாய் செத்துக்கிடக்கும்
என நம்புகின்றனர்.
இப்படியாக நீளும் இக்கவிதை 'உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்' என்கிற கவிதைத்தொகுப்பிற்கு ஹெச்.ஜி.ரசூல் எழுதிக்கொண்ட முன்னுரையின் முதல் பத்தி.  இம்முன்னுரைக்கு அவர் கொடுத்திருக்கும் தலைப்பு  ' கொலை செய்வது அல்லது தற்கொலை செய்வது'. அவரது லப் டப் வாழ்க்கையின் மொத்த  ஓட்டத்தையும் சொல்லி நிறுத்த இத்தலைப்பு ஒன்றே போதும்.

கடந்த மே மாதம் கன்னியாகுமரியில் கூடிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இரு நாள் முகாமில் ஹெச்.ஜி. ரசூல் அவர்களின் தலைமையில் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் பேசியத் தலைப்பு ‘ அறியப்படாத கதையாளர்களின் கதைகள்’. அவ்வாய்ப்பினைக் கொடுத்தவர் ரசூல் அவர்கள்.

நான் பேசத் தொடங்குகையில் அறியப்படாத கதையாளர்களின் கதைகள் பட்டியலில் முதல் நபராக ஹெச்.ஜி. ரசூல் அவர்களைத்தான் வைத்தேன். அந்தப் பட்டியலில் இன்னும் பலரையும் வைத்திருந்தேன். எழுத்தாளர்கள் கீரனூர் ஜாகிர்ராஜா, அழகியபெரியவன்....இத்தகையவராக.

இத்தகைய உரைக்கு ரசூல் அவர்கள் வருத்தப்பட்டாரோ என்று கூட நான் அவர் குறித்து யோசிக்கவில்லை. தமிழக இலக்கிய அமைப்புகளின் மீது எனக்கு வருத்தம் இருக்கவே செய்தது. இவரை ஏன் கொண்டாட மறுக்கிறார்கள்....? என்று. இந்த உள்ளக்குமறல்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜுலை மாதத்தின் தொடக்கத்தில் அவரது படைப்புகளைக் கொண்டு அரை நாள் நிகழ்வை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - கந்தர்வகோட்டை கிளையின் சார்பில் நடத்தினேன். அந்நிகழ்விற்கு தலைமை எழுத்தாளர் சந்திரகாந்தன்.
அன்றைய தினம் ஹெச்.ஜி. ரசூல் அவருடைய முகம் இதற்கு முன் யாராலும் கண்டிராத அழகான முகமாக இருந்தது. அவர் படைப்புகளைக் குறித்து பேசுகிறோம் என்பதற்காக அல்ல. அவரைச் சூழ்ந்திருந்த இலக்கியவாதிகளின் எண்ணிக்கைக்காக. அந்நிகழ்விற்கு நாங்கள் சூட்டியிருந்த பெயர் ‘ ரசூல் சூழ் ரசூல்’.

அவருடைய அத்தனை நூல்கள் குறித்தும் இந்நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது. அவரது படைப்புகளைக் குறித்து முழுக்கப் பேசிய முதல் மற்றும் கடைசி நிகழ்வு அதுவாகவே இருக்கும் என நினைக்கிறேன். இக்காலத்தையொட்டி அவர் சமீபத்தில் வெளியிட்ட ‘ போர்ஹேயின் வேதாளம்’ என்கிற குறுங்கதைகள் தொகுப்பிற்காக ஒன்றிரண்டு நிகழ்வுகளில் கலந்துகொள்பவராக இருந்தார்.

அந்நிகழ்விற்காக அவரை நான் அழைக்கையில் அவர் கேட்ட முதல் கேள்வி ‘ இதனால் என்ன பயன்..?’ என்பதாகவே இருந்தது. அவரிடம் நான் திருப்பிக்கேட்டேன் ‘ நீங்கள் இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள். இதனால் என்ன பயன் கிட்டுமோ, அதே பயன் புதுக்கோட்டைக்கு கிட்டும்’ என்றேன். அவர் சிரித்தார். நானும் சிரித்தேன். சிரிப்பு என்பது சம்மதத்தின் அறிகுறிதான் இல்லையா!

அந்நிகழ்வு தொடங்க இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அவர் தங்கியிருந்த அறையில்  அவருடன் அவரது இலக்கிய மேடு, பள்ள பயணங்கள் குறித்து உரையாடினேன். அப்பொழுதுதான் எனக்கு புரிய வந்தது,  நான் எத்தனை சிரத்தையான வேலையைத் தொடங்கியிருக்கிறேன் என்று.
அவரிடம் உரையாடிக் கொண்டிருக்கையில், பேட்டி எடுப்பதைப்போலதான் அவருடனான என் உரையாடல் இருந்தது. அதன் சாராம்சங்களை இக்கட்டுரையில் தர விரும்புகிறேன்..

முதலில் அவர்தான் உரையாடலைத் தொடங்கினார். ' இந்த நூல் குறித்த விமர்சன நிரலில் இஸ்லாம் தோழர்களை வைக்காமல் இருந்தது  நிகழ்ச்சி நடத்தும் உங்களுக்கு நல்லது. அதை விட நல்லது  யாரேனும் ஒருவர் கூட்டத்திற்கு வராமல் இருப்பது...' என்றவாறு சிரித்தார். இதைச் சொன்னத் தொனியால் எனக்குச் சற்று பதட்டம் வரவேச் செய்தது.
'ஏன் தோழர்...?’
 'இஸ்லாம் மார்க்கத்தில் மதத்தைக் கேள்விக்கேட்கும் உரிமையை தனி நபர் கையில் எடுப்பதை இன்னொரு இஸ்லாமியன் ஏற்க மாட்டார். அதைக் குறித்து நிகழ்வில் யாரேனும் ஒருவர் கேள்வி எழுப்புவராயின் அது பதட்டத்தில் வந்தே முடியும்..’
நான் சற்றுநேரம் அமைதியாகவே உட்கார்ந்திருந்தேன். பல மேடைகளில் அவரது கவிதைகளை வேறு யாரும் உச்சரிப்பதற்கும், அவரைக் கொண்டாட தயங்குவதற்கும் காரணம் இதுதான் என்று அப்பொழுதுதான் நான் புரிந்துகொண்டேன்.
' அப்படி என்னதான் கேள்வி கேட்டீர்கள்..?'
' இத்தனை இத்தனை ஆண் நபிகளுக்கு மத்தியில் ஏன் வாப்பா பெண் நபி ’ என்கிற கேள்விதான்'
இதற்கு அடுத்து நான் என் அறிவிற்கு  எட்டிய கேள்வியொன்றைக் கேட்டடிருந்தேன். இதுநாள் வரைக்கும் யாரும் கேட்காத கேள்வியாக அதை அவர் பார்த்தார். ' ஏன்  வாப்பா  ஒரு பெண் நபி இல்லை ' என்கிற கேள்விதான் பிரச்சனையா.?  இல்லை அக்கேள்வியை மகள் வாப்பாவிடம் கேட்டதால் பிரச்சனையா..? '.
 அவர் சிரித்துகொண்டார். ' பெண் குழந்தை கேட்பதுதான் பிரச்சனை'
' நீங்கள், ஏன் உம்மா இல்லை ஒரு பெண் நபி.. என்று எழுதியிருக்கலாமே ’
' எந்த மதமாக இருந்தால் என்ன... எல்லா மதமும் பெண்களை  ஒடுக்கி வைக்கும் வேலையைதானே செய்து வருகிறது. மதத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான முதல் கேள்வி என்பது பெண் குழந்தையின் வாயிலாக அப்பாவிடம் கேட்பதிலிருந்தே தொடங்கப்பட வேண்டும் . அதைத்தான் நான் செய்திருந்தேன்...'
அவர் அவர் சார்ந்த மதத்திலிருந்து கவிதைகளைப் படைத்திருந்தாலும் அவரது உரை, அவரது கவிதைக்கான சுவடுகளை அவரது இந்த விளக்கம் பொதுமையப்படுத்தியிருந்தது.
‘எனக்கு உங்கள் கவிதைகளில் முதலில் அறிமுகமானது உம்மா கவிதைதான். அக்கவிதையை நீங்கள் பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநில மாநாட்டில் நீங்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்…
ஒரே உதையில் தூரத்தில் போய் விழுந்த
பொம்மை சொன்னது
இப்படியெல்லாம் நடந்திருக்காது
எனக்கு ஒரு உம்மா இருந்திருந்தால்’
நான் முடிப்பதற்குள் அவர் தொடர்ந்தார்.
' உங்களுக்கு பிடித்ததைப் போல பலருக்கும் இக்கவிதைதான் பிடித்தக் கவிதையாக இருக்கிறது '
' தோழர்,உம்மா என்பதை  முதலில் முத்தம் என்பதாக நான் நினைத்தேன்'
அவர்  வயிறு குழுங்கச் சிரித்தார். ' நீங்கள் பரவாயில்லை. சிலர் அதை வேறொரு விதமாகப் புரிந்துகொண்டு தவறாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்'
' எப்படி..?'
' உம்மாவை ' உம்மா' வுடன் தொடர்புபடுத்தி அக்கவிதையின் போக்கை வேறொரு தளத்தை நோக்கி கொண்டு சென்றுவிட்டார்கள். அக்காலத்தில் ' உம்மா இயக்கம்' தலையெடுத்திருந்த காலம் அது. ஒரு நண்பர் என்னிடம் சற்றும் மனம் கூசாமல் கேட்டார் ' உங்கள் கவிதையில் உம்மா என்பது அம்மாவா...இல்லை உம்மாதானா..’என்று.
சற்று நேரம் இருவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தோம். அடுத்து என் கேள்வி வேறொரு பக்கத்திற்குச் சென்றது.
‘அப்துல் ரஹ்மான், ஹெச்.ஜி. ரசூல் , மனுஷ்யபுத்திரன் மூவரும் எனக்கு பிடித்தமான மானசீக கவிஞர்கள். அப்துல் ரஹ்மான் சூபி மற்றும் அரபு கவிதைகளின் சாராம்சத்தை தமிழ் மொழியில் தந்தவர். இஸ்லாம் மார்க்கத்தின் உச்சத்தையும் காட்டியது அவருடைய கவிதைகள் என்பது எனது புரிதல். அவர் உங்களுடைய பிரச்சனைக்கு எந்த வகையிலாவது குரல் கொடுத்தாரா...?’
‘அப்துல் ரஹ்மான் வேறு இஸ்லாம் மார்க்கம் வேறு அல்ல. அவர் கட்டுடைத்தல் வேலையை செய்திருக்கவில்லை.  எனது கட்டுடைத்தல் அவருக்கு பிடித்திருக்கவும் செய்யாது. அதைக்குறித்து ஆதரவாகவோ எதிராகவோ கருத்தைப் பதிவு செய்ததாக எனக்குத் தெரியவில்லை’
'மனுஷ்யபுத்திரன்...?' நீண்ட நேரம் அமைதியாக இருந்தவர் பிறகு சொன்னார் ' மைலாஞ்சி இவ்வளவு பெரிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்ததற்கு காரணம் அவர்தான் '
'என்னச் சொல்கிறீர்கள் தோழர்..?'
' தவறாகச் சொல்லவில்லை. மைலாஞ்சி நூலை அக்கு வேறு அணி வேறாக பிரித்து விமர்சனம் செய்து அதை எதிர்ப்பாளர் வரைக்கும் கொண்டுபோய் சேர்த்தது உயிர்மை இதழ். அப்படியொரு விமர்சனம்  உயிர்மையில் வந்திருக்காவிட்டால் மைலாஞ்சியின் கவிதையின் வீச்சு துபாய் , சௌதி அரேபியா வரைக்கும் போய்ச்சேர்ந்திருக்க வாய்ப்பில்லை.  என்னைப் பற்றி உலகம் தெரிந்திருக்க வாய்ப்புமில்லை. அதே நேரம் சமூக வில்லக்கத்திற்கு நான் ஆளாக வேண்டிய அவசியமும் எனக்கு ஏற்பட்டிருக்காது’
' உங்கள் கவிதை சௌதி அரேபியா , துபாய் வரைக்கும் ஏன் போக வேணும்..?'
' மைலாஞ்சி நூல் வெளிவந்ததற்குப் பிறகு மார்க்கத்திற்கு எதிராக அவர்களுக்குத் தெரிந்த சில கவிதைகளை கவிதைகளின் சில வரிகளை ஜெராக்ஸ் எடுத்து பரவலாகக் கொடுத்தார்கள். ஒரு நாள் என்னை வக்பு வாரியத்திற்கு அழைத்துசென்று விடிய விடிய கேள்விகளாகக் கேட்டார்கள். அத்தனை கேள்விகளுக்கும் நான் விடாது பதில் சொல்லிகொண்டு வந்தேன். எனது பதில்கள் ஒரு வேளை அவர்களை அவமதிப்பிற்கு உள்ளாக்கிருக்கக் கூடும். பிறகு அவர்கள் ஜெராக்ஸ் எடுத்த கவிதைகளை மொழிப்பெயர்த்து சௌதி அரேபியா, துபாய் நாட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார்கள்.
நபி கவிதை மட்டும் பிரச்சனையில்லை. ஜிகாதி நூலில் இப்படியாக ஒரு கவிதை இருந்தது. (அக்கவிதையை அவரே மனனமாகச் சொன்னார்). அதாவது அல்லா  அவன் என்று சொல்லுதல் கூடாது ஏனென்றால் அவன் ஆண் அல்ல. அவள் என்று சொல்லக்கூடாது ஏனென்றால்  பெண் அல்ல. ஆணும் பெண்ணும் இல்லாத ஒன்றை எப்படி நான் அழைப்பது என்பதுதான் அக்கவிதையின் சாராம்சம்.  இக்கவிதையை வாசித்ததும் கன்னியாகுமரி மதக்குருமார்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்கள். ' ஹெச். ஜி.ரசூலை உடனே சமூக விலக்கம் செய்ய வேண்டும் என்று '
' பிறகு..?'
' என் கவிதையின் கேள்வியால் மதமார்கள் ஒன்று கூடி மதப்போதனைகளில் ஒரு திருத்தம் செய்து அதையும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். அது அல்லா ஒரு ஆண் வழியே பெண்ணையும் இந்த உலகத்தையும் படைத்தார் என்பதால் அல்லாவை ஆண்களை விளிக்கும் அவன் என்று சொல்லலாம் என்கிற திருத்தம் அது'
‘மத விலக்கம் என்பது என்ன.? அதை எப்படி நீங்கள் எதிர்க்கொண்டீர்கள்...?'
' இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த யாரும் எங்கள் குடும்பத்துடன் எந்த ஒரு பற்றுதல் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதுதான் மத விலக்கம். எல்லோர் வீட்டுக்கும் திருமண பத்திரிகை கொடுத்து வருபவர்கள் எங்கள் குடும்பத்தை மட்டும் விலக்கி செல்வார்கள். துக்க வீட்டிற்கு சென்றால் முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். அழைக்கமாட்டார்கள்...அப்படியாகவே நீண்ட ஆண்டுகள் யார் வீட்டு விசேஷத்திற்கும் செல்லாமல் வீட்டிற்குள் அடைப்பட்டுக் கிடந்தோம்...'
' உங்கள் பெற்றோர்கள் சமூக விலக்கை எப்படியாக பார்த்தார்கள் என்பது இருக்கட்டும். உங்கள் துணைவியார் அதை எப்படி எடுத்துகொண்டார்கள்...?'
' அதை இப்பொழுது நினைத்தாலும் திக் என்றே இருக்கிறது... ஒரு சில நேரம் அவரது வார்த்தைகள் சொல்லாததை அவருடைய பார்வைச் சொல்லும். போதுமா...? இதை நீங்கள்  எழுதிருக்கவிட்டால்தான் என்ன..? நம்ம குடும்பம் அதோகதியில் நிற்பதை பார்க்கிறீர்கள் தானே...?'
' சமூக விலக்கத்தின் உச்சக்கட்ட பாதிப்பாக எதைப் பார்க்கிறீர்கள்..?'
' மகள் திருமணத்தைதான். சொந்த மாவட்டத்தில், மாநிலத்தில் வரன் அமையவில்லை. பெங்களூரில் வரன் அமைந்தது. அத்திருமணத்தை நடத்தி வைக்க மார்க்கத்தைச் சார்ந்த யாரும் வருவதாக இல்லை. வருவதாகச் சொல்லியிருந்தவரகளும் வர மறுப்பு தெரிவித்தார்கள். ( இந்த இடத்தில் அவரது கண்கள் கலங்கியிருந்தன ). பிறகு நண்பர்கள் ஒன்று திரண்டு மகளின் நிக்காஹ் நடத்தி வைத்தார்கள்...'
' பிறகு எப்படி மத விலக்கை முறியடித்தீர்கள்..?'
' நீதி மன்றத்திற்கு சென்று தொடர்ந்து போராடினேன். நீதி மன்றம் மத விலக்கு செய்தது செல்லாது என தீர்ப்பு வழங்கியது....'
' அதற்குப்பிறகு மதத்தில் சேர்த்துகொண்டார்கள் தானே..?'
' இல்லை. அதற்குப்பிறகும் பல முயற்சிகள் எடுக்க வேண்டியிருந்தது...'
' இஸ்லாம் மார்க்கத்தில் பெண் சுதந்திரம் , பெண் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கீர்கள்...இஸ்லாம் பெண்கள் அதை எப்படியாகப் பார்த்தார்கள்..? அவர்களிடமிருந்து உங்களுக்கு  ஆதரவு கிடைத்ததா..?'
' ஆம்...இருந்தது. ஆனால் அதை வீட்டிற்கு வெளியில் வந்து நின்று சொல்ல முடியாதவர்களாக இருந்தார்கள்....' ' இப்பிரச்சினை உங்களை எந்த வழியில் உங்களை ஒழுங்குப்படுத்தியது..?' அவர் சிரித்தார். இப்படியெல்லாம் கேள்விக் கேட்கிறீர்களே….அவர் சிரித்தார். ' ஒன்று சொல்கிறேன். மைலாஞ்சியை நான் எழு‌தி முடிக்கும் காலம் வரைக்கும் எனது இஸ்லாம் மதம் , அதன் தத்துவங்கள், வழிபாடு, நபிகள் , சூபிகளின் போதனைகள்....இவற்றில் எந்தவொரு ஆழமான புரிதலும் இல்லாமல் இருந்தேன். மைலாஞ்சி பிரச்சனைக்குப் பிறகு இஸ்லாமிய நூல்கள் அத்தனையும்  தேடிப்பிடித்து வாங்கி வாசிக்கத்தொடங்கினேன். அதற்கு பிறகு மார்க்கத்தைப் பற்றிய ஆழமான அறிவு எனக்கு கிடைத்தது...'
' இப்படி எழுதியிருக்க வேண்டியதில்லை  என்கிற மனநிலை உங்களுக்கு வந்ததா..?'
' நிச்சயமாக இல்லை.  எழுதியதெலலாம் சரிதான். ஒரு வேளை மைலாஞ்சி எழுதுவதற்கு முன்பே இஸ்லாம் நூல்களை ஆழ்ந்து வாசித்திருந்தால் எனது எழுத்து வேறொரு போக்கில் பயணம் செய்திருக்கும்..என்றே நினைக்கிறேன்....'
' சமீபத்தில் பசு.    கவுதமன்    தன் பேட்டியில் தலித் முஸ்லீம் என்கிற பதத்தைப் பயன்படுத்தியிருந்தார். அதில் கீரனூர் ஜாகிர்ராஜா,  ஹெச். ஜி. ரசூல் இருவரின் பெயர்களையும் பயன்படுத்தியிருநதார். இந்து மதத்தில் ஏற்றுககொள்ள முடியாத ஒடுக்குமுறை பதம் தலித் என்பது. இஸ்லாம் மதத்தில் அப்படியாக ஒன்று இருக்கிறதா..? தலித் முஸ்லீம் என நீங்கள் ஒரு நூல் கூட எழுதியிருக்கிறீர்களே...?' ' இருக்கிறது. இந்துக்களில் இருப்பதைப்போன்று வெளிப்படையாக தெரியாது. முக்கிய தினங்களில் உணவு பரிமாறுகையில கையில் ஒரு ஏத்திரத்தை வைத்துகொண்டு அதில் அள்ளி உணவு வழங்கினால் அவர்கள் இஸ்லாம்  மதத்தில் சமமாக மதிக்கப்படுகிறார்கள் என்று பொருள். அதையே வெறும் கையால் வழங்கினால் அவர்கள் தலித் முஸ்லீம். அவர்களுக்கு சம உரிமை என்பது கிடையாது..' 'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறீர்கள். சமூக விலக்கத்தின் போது இயக்கம் உங்களுக்கு துணையாக இருந்ததா..?'
' ஆம். நிச்சயமாக. எனக்கான நிம்மதி தேடும் இடமாக இருந்தது இலக்கிய பெருமனறம்தான். அதிலும் அண்ணாச்சி பொன்னீலன் ஒரு படி மேலே போய் என் குடும்பத்தை மார்க்கத்திலிருந்து மத விலக்கம் செய்தவர்களிடம் எனக்காக பேசவும் செய்தார்...'
' உங்கள் எழுத்து பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை என்பது என் கருத்து. சமீபத்தில் மே மாதம் கூடிய கன்னியாகுமரி மாவட்ட இலக்கிய சந்திப்பில் என்னை அறியப்படாத எழுத்தாளர்களின் எழுத்துகள் தலைப்பின் கீழ் பேச அழைத்திருந்தீர்கள். அறியப்படாத எழுத்தாளர் பட்டியலில் முதல் நபராக உங்களை வைத்துதான் பேசினேன். என் பார்வை சரியா..? இல்லை உங்களுக்கு கிடைத்த  அங்கீகாரம் போதுமென நினைக்கிறீர்களா...?'
' அங்கீகாரத்தை எதிர்ப்பார்த்து எழுதுவது எழுத்தாக இருக்க முடியுமா என்ன.. ஆனாலும் என் எழுத்துக்காக நீங்கள் கவலைப்படும் அளவிற்கு என் எழுத்து இருந்திருக்கிறதே...அதுவே நல்ல அங்கீகாரம்தானே...'
 ' நீங்கள் ஓய்வு பெற்றுவீட்டீர்கள் இல்லையா. இனி நீங்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தையும் என்னைப்போன்ற வளரும் எழுத்தாளர்களையும் வழி நடத்த வேண்டும்....'
' பழைய வீச்சுக்கு எழுதலாமென இருக்கேன்....'
' நல்லது...அப்படியானால் நாவல் எழுதுங்களே...'
' பார்க்கலாம்…’
 ‘நீங்கள்  உங்கள்  வாழ்க்கையையே நாவலாக எழுதினால் தமிழ் நாவல்கள் பட்டியலில்  மிக முக்கிய நாவலாக உங்கள் நாவல் இடம் பிடிக்கும்...'
'அப்படியா...' என்றவாறு சிரித்தார்.
' . மணியாகிக்கொண்டிருக்கிறது. நான் சென்று நிகழ்விற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டும். கடைசியாக நீங்கள் எழுதியக் கவிதையை உங்கள் குரலில் கேட்க விரும்புகிறேன். ஏதேனும் ஒன்று சொல்லுங்களே...?’'
அவர் சற்றும் யோசிக்காதவராய் சொன்னார்
 ' சகாபி வகாபி சண்டையில்லை
சுன்னி ஷியா மோதலில்லை
பாபர்மசூதி அயோத்தி கலவரமில்லை
குரான் பைபிள் விவாதமில்லை
தொட்டில் குழந்தையின்
நிச்சலனமற்ற மௌனம்
அதிகாலை தோறும்
என்னை வீழ்த்திவிடும் தூக்கத்திற்கு
நன்றி சொல்கிறேன்
தொழுகையைவிட தூக்கம் மேலானது’