வியாழன், 10 ஆகஸ்ட், 2017

இந்தியை இடித்துக்கட்டுதல்

‘ பிரெஞ்ச் மக்களே, வாருங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வோம். ஆங்கிலேயர்களைப் பார்த்து உம் ஆங்கிலம் எமக்குத் தேவையில்லை எனச் சொல்வதற்கு நமக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்...’ 
பிரெஞ்சு மொழியில் ஆங்கிலம் கலப்பதற்கு எதிரானப் போராட்டத்தில் அறிஞர் டி.எஸ். எலியட் ஆற்றிய உரை இது. அவர் உரையாற்றி முடித்து கீழே இறங்குகையில் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சு மொழியைக் காப்பாற்ற போராடும் நாம் ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ளச் சொல்வது நம் மொழிக்குச் செய்கிறத் துரோகம் இல்லையா...?. எலியட் சொன்னார். ‘வேண்டும் என்பதை நம் மொழியில் சொல்லத் தெரிந்த நாம் , வேண்டாம் என்பதை அவன் மொழியில் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்...’ 

தமிழர்களின் தந்தை ஈ.வெ.ரா. பெரியார் தன் வாழ்நாட்களின் பிற்பகுதியை இந்தி எதிர்ப்பிற்காகக் கழித்தவர். ஆனால் ஒரு முரண் என்னத்தெரியுமா..? அவர் தொடக்கத்தில் தன் சொந்த செலவில் இந்திக்கென்று பள்ளி நடத்தியவர் அவர். 1922 ஆம் ஆண்டு அவரது வீட்டிற்கு டாக்டர் அன்சாரி, விட்டல்பாய் படேல், பண்டித மோதிலால் நேரு முதலிய காங்கிரஸ்க்காரர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் வந்து சென்றதற்கு ஞாபகார்த்தமாக ஒரு பதிய காரியம் ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று நினைத்த பெரியார் இந்தியை இன்றுமுதல் சில பிள்ளைகளுக்கு தன் சொந்தச் செலவிலேயே கற்றுக்கொடுக்கலாம் என முடிவு எடுத்தார். அதன்படி முப்பது பேர்கள் கொண்ட பள்ளியைத் தொடங்கி பதினைந்து ஆசிரியர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் இரண்டு ஆசிரியர்களை நியமித்தார். பதினைந்து மாணவர்களின் தங்கும் மற்றும் உணவு செலவை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. மற்றக் குழந்தைகளுக்கான செலவு இவருடையது. அவரது தகப்பனார் சமாதிக்கு அருகாமையிலுள்ள கட்டிடமே பள்ளிக்கூடமாகச் செயல்பட்டது. பாடம் ஆறுமாதம் நடத்தப்பட்டிருந்தது. குழந்தைகள் இந்தியின் வழியில் எதைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் கவனிக்கத் தொடங்கினார். அவர்கள் இந்தியில் வேதங்களைக் கற்றுக்கொண்டிருந்தார்கள். அப்பள்ளியை அத்துடன் நிறுத்தியிருந்தார். ஓரளவு இந்திப்படித்த மாணவர்களைக் கொண்டு இந்தியில் எதிர்ப்பு தெரிவிக்க வைத்தார். ‘ உங்கள் வடநாட்டு இந்தி, எங்கள் திராவிட நாட்டிற்கு தேவை இல்லை’
தமிழ்நாட்டில் எப்பொழுதெல்லாம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெறுகிறதோ அப்பொழுதெல்லாம் பெரியாரின் பெயர் தவறாமல் அடிபடும். ஒரு முறை பெரியாரிடம் கேட்டார்கள் ‘ நீங்கள் ஏன் இந்தியை எதிர்க்கிறீர்கள். ஆங்கிலத்தை ஈர்க்கிறீர்கள்....’என்று. பெரியார் சொன்னார் ‘ இந்தியில் திதி, திவசம், கன்னியாதானம், கருமாதி, பூசுரர் - வான்சுரர், மோட்சலோகம் - நரகலோகம், பிராமணன் -  சூத்திரன், தேவதாசி,..போன்ற சொற்கள் இருக்கின்றன. அதனால் அதை எதிர்க்கிறேன். இத்தகைய சொற்கள் இல்லாத ஆங்கிலத்தை விரும்பி ஈர்க்கிறேன்...’
பெரியார் இல்லாமல் நடக்கும் முதல் இந்தி திணிப்பு எதிர்ப்பு இதுதான். இது இந்திக்கு எதிரான நான்காவது போராட்டம். அன்றைய இந்திக்கு எதிரானப் போராட்டம் என்பது இந்தி எதிர்ப்பு போராட்டம். அதிலும் மூன்றாம் கட்டப்போராட்டம் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மேற்குவங்காளம் என பரந்துபட்ட போராட்டமாக எழுந்தது. இப்போராட்டம் நீண்ட கால காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து திராவிட ஆட்சிக்கு வழி வகுத்தது. இன்றைக்கு நரேந்திர மோடி ஆட்சிக்காலத்தில் துளிர்விடும் இந்திக்கு எதிரானப் போராட்டம் அத்தகையப் போராட்டம் அன்று. இது இந்தி திணிப்பிற்கு எதிரானப் போராட்டம். முன்னது இந்தி எந்த வடிவத்திலும் வேண்டாம். பின்னது தேவைக்கு ஏற்ப கற்றுக்கொண்டுதானே இருக்கிறோம்...கட்டாயப்படுத்தினால் எப்படி...? 
ஏன் இந்த இறக்கம்...? இந்திக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்களின் வாரிசுகள் இன்றைக்கு ஹிந்தியில் சகலகலா  வல்லவர்களாக இருக்கையில் நாம் ஏன் இந்தி கற்றுக்கொள்ளக்கூடாது என்கிற கேள்வியின் விளிம்புதான் காரணம். அவர்கள் ஹிந்தியின் தேவையை உணர்ந்திருக்கிறார்கள். ஹிந்தி தெரியாமல் டெல்லியில், ஆட்சியில், அதிகாரத்தில், நிர்வாகத்தில், வியாபாரத்தில் ஆழமாக காலூன்ற முடியாது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இதன் விளைவுதான் ‘ இந்தி எதிர்ப்புப் போராட்டம், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டமாக பரிணாமம் அடைந்திருக்கிறது. 
மார்க்சிய தத்துவத்தில் ஹெகலின் இயக்கவியல் முரண் கோட்பாடு என்று ஒன்று உண்டு. முட்டைக்குள் இருக்கும் மஞ்சள் கரு குஞ்சாக மாற முட்டைக்கு ஓடு தேவை. அதே ஓடுதான் முட்டைக்குளிலிருந்து குஞ்சு வெளியில் வர தடையாகவும் இருக்கும். சமஸ்கிருதம் தமிழகத்தில் எடுபடாத மொழியாக மாறிப்போனதற்கு காரணம் இயக்கவியல் முரண் கோட்பாடுதான். அன்றைய மெட்ராஸ் சர்க்காரில் சமஸ்கிருத பல்கலைக்கழகம் இராமேஸ்வரம் மற்றும் திருப்பதியில் இருந்தன. இப்பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் வர்ணாசிரம கட்டமைப்பில் சூத்திரர்களும், பஞ்சமார்களும் படிக்கக்கூடாத மொழியாக சமஸ்கிருதம் இருந்தது. இவர்கள் சமஸ்கிருதம் படித்தால் அவர்களின் நாக்கு அறுக்க வேண்டும். காதினில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என வேதங்கள் சொல்லியிருந்தன. 
மற்றொன்று இதை விடவும் சூழ்ச்சியானது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வரும் காலம் வரைக்கும் மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவத்துறைக்கான விண்ணப்பத்தில் சமஸ்கிருதம் தெரிந்த ஒருவர் மட்டும்தான் மருத்துவம் படிக்க தகுதியானவர் என்கிற குறிப்பு இடம் பெற்றிருந்தது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்ததும் சமஸ்கிருதத்திற்கும் ஆங்கிலத்தில் படிக்கும் அலோபதி மருத்துவத்திற்கும் என்னத் தொடர்பு...? என்கிற கேள்வியோடு அக்குறிப்பை அடியோடு நீக்கியிருந்தது. இதற்குப் பிறகே மருத்துவம் எல்லோருக்குமான படிப்பானது. பிராமணர்களுடன் போட்டிக்கு நிற்கும் மாணவர்களை போட்டியில் கலந்துகொள்ளாமல் வெளியேற்ற தேவைப்படும் மொழியாக இருந்ததுதான் சமஸ்கிருதம். அன்றைக்கு தலைத்தூக்கியிருந்த வேணும், கூடாது என்கிற பாகுபாட்டின் வடுதான் இன்றைக்கும் நம்மை சமஸ்கிருதத்திலிருந்து மெல்ல, மெல்ல நம்மை விலக்கிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தேசிய அளவில் நீட் தேர்வு நடைபெற்றது இல்லையா! இத்தேர்வு எழுதுவதற்கு அடிப்படைத் தகுதி ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தால் எப்படி இருக்கும்...? அப்படியாகத்தான் அன்றைக்கு மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையென இருந்தது. 
சரி! சமஸ்கிருதம் வெறுப்பிற்கு காரணம் இருக்கிறது. இந்தியை ஏன் நாம் எதிர்க்க வேண்டும்....?. முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் மொழியில் சொல்வதாக இருந்தால் ‘ சமஸ்கிருதத்தின் வாலறுக்கப்பட்ட நரிதான் இந்தி’
சிலர் இந்தி தேசிய மொழி என்கிறார்கள். தேசியம் என்கிற ஒன்று இந்தியாவில் இல்லைவே இல்லை. என்றைக்கு மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதோ அன்றைய தினமே தேசியம் என்கிற சொல் சடமாகிவிட்டது. தேசியம் என்பது ஒற்றை மொழி, ஒற்றை இனம், ஒற்றைக் கலாச்சாரம் கொண்டது. அதை கட்டமைக்கும் வேலையில்தான் இன்றைய ஆளும் மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது.
‘இந்தி தமிழ்நாட்டிற்குள் நுழைந்தால் தமிழ்மொழி அழிந்துபோய்விடுமா...?’ பெரியாரிடம் கேட்டார்கள். பெரியார் சொன்னார். ‘ தமிழை அழிக்க இந்தியால் முடியாது. ஆனால் இந்தி தமிழ்நாட்டிற்குள் நுழைந்தால் திராவிட கலாச்சாரம் சிதைந்துபோய்விடும்...’ என்றார். இந்தி என்பது உருது மற்றும் பாரசீக மொழிகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட மொழி. இந்தியால் திராவிட நாட்டில் துளசிதாஸ் இராமாயணம் படிக்கலாம். சாதிகளை வளர்க்கும் வேதங்கள் படிக்கலாம். நம் திராவிடர்களுக்குத் தேவை அது இல்லை. இராக்கெட் என்பது இந்தியில் உண்டு. ஆங்கிலத்திலும் உண்டு. இந்தியில் உள்ள இராக்கெட் மந்திரத்தால் இயங்கக்கூடியது. ஆங்கிலத்தில் உள்ள இராக்கெட் எந்திரத்தால் இயங்கக்கூடியது. நமக்குத் தேவை இந்தியா, ஆங்கிலமா...? குடிஅரசு தலையங்கத்தின் அவர் எழுதிய  கட்டுரை இது. 
இந்தி 96 வகைகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முரண்பாடுகளைக் கொண்டவையாக இருக்கிறது. அதில் ஒரு வகை தேவநாகரி ( தேவ - கடவுள் , நாகரி - நகரம் )இந்தி.  அதாவது கடவுளின் நகரத்து மொழி என்பது அதன் பொருளாகும். இந்தி மட்டுமல்ல சமஸ்கிருதம், மராட்டி, குஜராத்தி, காஷ்மீரி, சாந்தாலி, சிந்தி மொழிகள் யாவும் அவ்வகையைச் சார்ந்த மொழிகளாகவே காட்டப்படுகிறது. சிலர் இம்மொழிகள் கிமு 500 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த பிராமி எழுத்தின் நீட்சி என்கின்றார்கள் . பலர் அதை மறுக்கின்றனர். மேலும் இது அபுகிடா  என அழைக்கப்படும் எழுத்து முறை வகையைச் சார்ந்தது. ஒரு எழுத்தை வைத்துக்கொண்டு அதன் வடிவத்தை நீட்டுவதன் மூலம் புதிய புதிய எழுத்துகளை உருவாக்கும் வகையைச் சார்ந்த மொழி அது.
தற்போது பேச்சு, எழுத்து வழக்கத்தில் இருக்கும் இந்தி தேவநாகரி வடிவம் அல்ல. கடிபோலி வடிவம். அதாவது முகலாயர்களின் வருகைக்குப்பிறகு உருவான கலப்பின மொழிதான் கடிபோலி. இது உருது மொழியின் கிளை மொழியாகும். 1867 ஆம் ஆண்டிற்கு முன்பு  இந்தியின் பேச்சு மற்றும் எழுத்து வடிவம் தேவநாகரி அதன்பிறகு கடிபோலி. கடிபோலி எழுத்து வடிவம் வளர்ந்தக்காலம் ‘துவிவேதி யுகம்’ என அழைக்கப்படுகிறது.
கடிபோலி இந்தியை வளர்த்தெடுத்தவர் மகாவீரர் பிரசாத்து துவிவேதி ( 1868 - 1938 )  அவர்கள். அவர் உருது வடிவத்துடன் கூடிய இந்தி மொழியை வளர்த்தெடுத்தார். உருது மொழியுடன் இந்தி கலைச்சொற்களை இணைத்து நவீன இந்தியை உருவாக்கினார். அவ்வடிவின் வாயிலாக  கவிதை நூல்களை இயற்றினார். ‘விதி விடம்பனா’,‘ குமார சம்பவ சாரம் ’முதலிய உயர்ந்த கவிதை நூல்கள் கடிபோலி வடிவ இந்தி நூல்களாகும்.
 இந்தியின் தேசிய கவிஞரான  ‘மைதிலி  சரண் குப்தா’ அவர்களின்  ‘சாகேத்து’, ‘யசோதரா ’ போன்ற காப்பியங்களும் இன்றைய நவீன இந்தி இலக்கியங்களும் கடிபோலி இந்தி வடிவத்தால் ஆனவை. ஆனால் இந்தியின் வேதம் என அழைக்கப்படக்கூடிய ரிக், யஜுர் வேதங்கள் தேவநாகரி வடிவத்தலானவை. 
மத்திய இந்தியாவில் அதாவது டெல்லி, லக்கோ ,... பகுதிகளில் கடிபோலி இந்தியும் மற்ற பகுதிகளில் தேவநாகரி இந்தியும் பேசும் மொழியாக இருக்கின்றன. டெல்லி வாழ் மக்கள் பேசுகின்ற இந்தி காஷ்மீர் வாழ் இந்து பண்டிட்களுக்கு புரியாது. மக்கட்தொகை அடிப்படையில் பார்த்தால் இந்திய சுதந்திரத்தின் போது கடிபோலி இந்தி பேசுபவர்கள் அதிகமாக இருந்தார்கள். என்வே சுதந்திரத்திற்கு பிறகு கடிபோலி வடிவ இந்தி நிர்வாக மொழியாக மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. தேசிய மொழியாக  அல்ல.  ஆனால் தேவநாகரி இந்தி பேசுபவர்கள் அன்று முதல் இன்று வரை கடிபோலி இந்தியைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள்.. இதற்கிடையில்  கடிபோலி இந்தி உருது மொழியின் கிளை மொழி என்பதால் அம்மொழியை புறக்கணித்து தேவநாகரி வடிவம் கொண்ட இந்தியை பரவலாக்கும் முயற்சி நடந்தேறி வந்தது. சமீபத்தி்ல் மத்திய அரசு நிறுவிய அரசிற்கான இணையதளம் தேவநாகரி வடிவிலானது. அதாவது உருது மொழி கலப்பற்ற இந்தி அது. 
 காந்தியடிகள் வாழ்ந்த காலத்தில் அவர் ‘இந்துஸ்தானி’ என்கிற கலப்பு மொழியின் தேவையை அவர் வலியுறுத்தினார். ஆனால் அவர்காலத்திலேயே இந்தியில் இருந்த பாரசீகம், உருது மொழிகள் அகற்றப்பட்டு தூய வடிவ சமஸ்கிருதம் மொழியுடன் கூடிய இந்தியை உருவாக்கினார்கள். காந்தி பேசிய இந்தி கீழ் இந்தி வகையைச் சேர்ந்தது. 
இன்றைக்கு நாம் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். இந்தியை இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணித்ததில் பண்டித நேரு அவர்களுக்கு இருந்த நோக்கமும், இன்றைக்கு மோடி அரசுக்கு இருக்கும் நோக்கமும் வேறு , வேறு. நேரு காலத்தில் அவர் கடிபோலி மொழியை முன்மொழிந்தார். இந்தி என்கிற ஒற்றை நூழிலையின் வாயிலாக இந்திய மாநிலங்களை கோர்த்துவிடலாம் என நினைத்தார். அவரது கனவு மெல்ல நிறைவேறிக்கொண்டு இருந்தன. வட சென்னைக்கு வடக்கு இந்தி தன் ஆளுமையைக் காட்டத் தொடங்கியிருக்கிறது. ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களில் இந்தி பரவலாக பேசப்படும் மொழியாகியிருக்கிறது. ஆனால் அவர்கள் பேசுவது கடிபோலி இந்தி. அவற்றை முறியடித்து தேவநாகரி இந்தியை விதைக்கும் வேலையில் இன்றைய மோடி அரசு செயல்படுத்த நினைக்கிறது. 
இந்தி எதிரிப்புக்கு விதை இட்டது அன்றைய மருத்துவ படிப்புதான். 1937 ஆம் ஆண்டு காங்கிரசு அமைத்த முதல் அரசாங்கத்தில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க திட்டமிட்டது. வட நாட்டு காங்கிரஸ்க்காரர்களை திருப்திப் படுத்த இந்த கொள்கை முடிவு அவர்களுக்கு தேவையென இருந்தது. 
சென்னை மாநிலத் தமிழர் மாநாடு திருச்சியில் டிசம்பர் 26 - 1937  நாளன்று கூடியது. கி. ஆ.பெ. விசுவாதம் செயலளராகவும், பசுமலை பேராசிரியர் ச. சோமசுந்தர பாரதியார் மாநாட்டு தலைவராகவும் இருந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ‘இந்திக்கு எதிரான முதல் மாநாட்டு தீர்மானமாகும்.’
இந்தி தமிழ்நாட்டிலிருந்து பின்வாங்கப்பட்டதற்கு இரண்டாம் உலகப்போரும் காரணமாக இருந்தது என்பது வியக்கத்தக்க ஒன்று. அன்றைய ஆளும் காங்கிரசு அரசு 21.04.1938 ஆம் நாள் ஆணைப்படி தமிழகத்தில் 60 பள்ளிகள், ஆந்திரத்தில் 54, கன்னட நாட்டில் 4, கேரளத்தில் 7 என மொத்தம் 125  பள்ளிகளில் முதல் மூன்று வகுப்புகளுக்கு இந்தி கட்டாய மொழியாகத் திணிக்கப்பட்டது. இந்த ஆணையை எதிர்க்க சென்னை மாநில இந்தி எதிர்ப்பு உரிமை அணையம் என்கிற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி தமிழக அறிஞர்களைக் கொண்டு கிளை அமைப்புகள் அமைத்து இந்தி கற்பிக்கும் பள்ளிகள் முன்பு இந்திக்கு எதிராகப் போராடத் தொடங்கினார்கள். அத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்தி தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஸ்க்காரர்கள் இந்தியா இரண்டாம் உலகப் போரில் கலந்துகொள்கிறது என அறிவித்ததும் ஆங்கிலேயர்களுக்கும் - காங்கிரஸ்காரர்களுக்கும் இடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு மெட்ராஸ் சட்டமன்றத்திலிருந்து விலகிக்கொண்டனர். மாநிலத்தின் நிர்வாகம் ஆளுநர் கைக்கு சென்றது. இக்காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் இந்திக்கு எதிரான போராட்டம் பெரிய அளவில் நடந்தேற போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வரும் பொருட்டு ஆளுநர் இந்தியை தற்போதைக்கு பள்ளியிலிருந்து விலக்கிக்கொள்வதாக அறிவித்தார். 
இந்திய விடுதலைக்கு பிறகு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரின் முதல் அமைச்சரவையில் 20.06.1948 ஆம் நாளன்று அரசாணையில் இந்தி கட்டாயப் பாடமாக ஆணைப் பிறப்பித்தது. இதன் பிறகு இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் கிளர்ந்தெழுந்தது. அப்பொழுது ஓமந்தூர் இராமசாமி பெரியாரை நேரில் அழைத்து சொன்னார் ‘ நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன்...உங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்ளுங்கள்...’ எனக் கேட்டுக்கொண்டும் பெரியார் இந்திக்கு எதிரானப் போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக இல்லை. இந்த போராட்டம் அன்றைய கல்வி அமைச்சராக இருந்த தி.சு. அவினாசிலிங்கம் அவர்களுக்கு எதிரான போராட்டமாக அமைந்ததால் அவினாசிலிங்கம் தன் பதவியை ராஜினாமா செய்ததும் இந்தி இரண்டாவது முறையாக பள்ளியிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டது. 
 அன்றைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத் இந்தி மட்டுமே ஆட்சியாக விளங்கும் என்றும் ஜனவரி- 26 1965 முதல் இந்தி கட்டாய மொழி என்றும்  அறிவிப்பு செய்தார். அதன் பிறகு அவர் தமிழ்நாட்டிற்கு வருகையில் திமுகவினர்களால் அவருக்கு கறுப்புக்கொடி காட்டப்பட்டது. ஹைதரபாத்தில் அவர் பேசுகையில் தமிழர்கள் காட்டிய கறுப்புக்கொடிக்கு பதில் சொல்லும் பொருட்டு‘ இந்தி பேசா மக்களின் இடர்கள் உணர்ச்சிகள் பறக்கணிக்கப் படமாட்டா’ என்று உறுதியளித்தார்.
மூன்றாம் கட்ட எதிர்ப்பு போராட்டம் மிக முக்கியமான எதிர்ப்பு போராட்டமாக அமைந்தது. இந்தி பேசாத மாநிலங்களிலிருந்த ஆங்கிலம் மாற்று மொழியிலிருந்து துணை மொழியாக கீழிறக்கப்பட்டது. பிறகு அது இணை மொழி என்றானது. இதற்கு பிறகு கூடிய திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘ இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள மொழிப்பிரிவின் 17 ஆவது பகுதியை வெளிப்படையாக அறிவித்து விட்டு பொதுக்கூட்டத்தில் கொளுத்துவேன்’ என அறிவித்திருந்தார். அன்றைக்கு முதலமைச்சராக இருந்தவர் மீ. பக்தவத்சலம் அவர்கள். மாணவர்களின் பங்களிப்புடன் கூடிய போராட்டமாக இது மாறியது. பலர் தீக்குளித்தனர். இப்போராட்டம் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கன்னடம், மேற்கு வங்காளம் எனப் பரவியது. இப்போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வரும் பொருட்டு இந்திராகாந்தி இந்தி எதிர்ப்பு மாநிலங்களுக்கு விரைந்து சென்று இந்தியை விலக்கிக்கொள்வதாக உத்திரவாதம் அளித்ததும் மாணவர்களின் போராட்டம் முடிவிற்கு வந்தது. இந்த மாணவர்களின் எழுச்சிதான் திராவிட ஆட்சிக்கு வழிக் கோலியது. 
ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணிப்பதால் ஏற்படும் விளைவுகளை அவ்வபோது உலக நிகழ்வுகள் காட்டிக்கொண்டிருந்தன. ஒன்றுபட்ட பாகிஸ்தான் உருது மொழியை ஆட்சி மொழியாகவும், தேசிய மொழியாகவும் திணிக்க முற்பட்டதன் விளைவுதான்  வங்க மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாக உதயமானது. ஒன்றுபட்ட சோவியத் யூனியனில்  ஒற்றை மொழி மாகாணம் முழுமைக்கும் திணித்தால் நாடு பல நாடுகளாக சிதைந்து போய்விட வாய்ப்புண்டு என்பதை அவர் லெனின், ஸ்டாலின் புரிந்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் மொழி ஆதிக்கம் தலைத்தூக்க அந்நாடு உடையவும் செய்தன. இலங்கையில் முதல் பிரிவினைவாதமே சிங்கள மொழியைத் திணிப்பதில் தொடங்கியது. 
இந்தி திணிப்பு ஆதரவாளர்கள் கேட்கின்ற ஒரு நியாயமான கேள்வி ஒன்றுண்டு. அந்நியர்களின் மொழியான ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் நம் நாட்டின் மொழியான இந்தியை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது...? 
இந்தியாவை ஆங்கிலேயர்கள் மட்டும் ஆளவில்லை.ஒரு பகுதியை ப்ரெஞ்சுக்காரர்களும் ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளில் ப்ரெஞ்சு மொழி தழைக்காமல் ஆங்கிலம் ஆழமாகக் கால் ஊன்ற காரணம் என்ன...? காஷ்மீரை ஆங்கிலேயர்கள் ஆளவில்லை. ஆனால் அங்குள்ள மக்கள் ஆங்கிலம் விரும்பிக் கற்றுக்கொள்ளவும், பேசவும் செய்வதற்கானக் காரணம் என்ன...?. இன்றைய உலகம் அரசியல், மருத்துவம் என்கிற இரண்டு அச்சுகளில் இயங்கக்கூடியது. அரசியல் கிரேக்கச் சொற்களாலும், மருத்துவம் இலத்தீன் சொற்களாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு மொழிகளையும் உள்வாங்கி உருவான மொழி ஆங்கிலம். ஆகவே ஆங்கிலத்தின் தேவை உலகத்தின் தேவையென இருக்கிறது. 
‘இந்தியிலும் ஆங்கிலத்திற்கு நிகரான கலைச்சொற்கள் இருக்கின்றன’ எனச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். ‘இருக்கினறன என்பதை விடவும் இருந்தது’ என்பதே சரியானப் பதமாக இருக்க முடியும். கிரேக்க, இலத்தீன் மொழிகளுக்கு நிகரான மொழிகளாக இருந்த அன்றைய மொழிகள் பாரசீகம் மற்றும் உருது. இவ்விரு மொழிகளும் சமஸ்கிருதத்துடன் இணைந்து உருவான மொழிதான் இந்தி. ஆனால் இன்றைக்கு இந்தி ஆதிக்கவாதிகளால் திணிக்கப்படும்  தேவநாகரி என்கிற இந்தி உருது, பாரசீகம் நீக்கப்பட்ட இந்தி. அதாவது சமஸ்கிருத இந்தி. இந்த இந்தி வேதம் படிக்கவும் இந்து அடைப்படையிலான சட்டத்தர்மங்கள் பேசவும் மட்டுமே பயன்படுமே ஒழிய உலக அரசியலுக்கும் உலக மருத்துவத்திற்கும் உதவாத மொழி அது. இன்னும் சொல்லப்போனால் ஒப்பீட்டு அளவில் மருத்துவம் மற்றும் அரசியலுக்கு தமிழில் இருக்கும் கலைச்சொற்கள் தேவநாகரி இந்தியில் கிடையாது. இம்மொழியை யாரும் கற்றுக்கொள்ள தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை. அவரரவர் தேவைச்சேர்ந்து பிறதொரு மொழியைக் கற்றுக்கொள்ளவும், பேசவும் செய்கிறார்கள். அதிலென்று இந்தி மொழியாகவும் இருக்கிறது. அம்மொழியை கட்டாய மொழியாக திணிக்கையில்தான் அதற்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு உள்ளாகியிருக்கிறது. 
இக்கட்டுரையின் வாயிலாக கடைசியில் ஒரே ஒரு கேள்வி. இராமர் ஆட்சியை அமைத்துகொண்டிருக்கும் இன்றைய மத்திய அரசு இராமன் - சீதை பேசிய மொழியாகப் பாவிக்கப்படும் மைதிலி மொழியை தேசிய மொழியாக்க முயற்சிக்காமல் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேவநாகரி இந்தியை கடை விரிப்பதன் பின்னணி என்ன...? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக