வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

குட்டியக்கா - மலையாள சிறுகதை - எம்.டி.வாசுதேவன் நாயர் @ மொழிப்பெயர்ப்பு - இராம. குருநாதன்

ஜானு , குட்டியக்கா இருவரும் சகோதரிகள். குட்டியக்கா மூத்தவள். படு கருப்பி. காது ஓரத்தில் ஒரு மச்சம். அதுவும் அசிங்கமாக.

ஜானு அழகு. எல்லோருக்கும் அவளைத்தான் பிடிக்கிறது.

குட்டியக்காவிற்கு வரன் அமையவில்லை. ஆனால் சின்னவளுக்கு வரன் நிறைய வருகிறது.

ஒரு நாள் பருவை அறுத்துக்கொள்கிறாள். முகத்தில் பவுடர் ஏற்றிக்கொள்கிறாள். அப்படியும் வரன் அமையவில்லை.

ஒரு தாழ்த்தப்பட்டவோடு காதல் பிறக்கிறது. குடும்பத்தினர் கண்டித்து செத்துப்போ என திட்டுகிறார்கள்.

குட்டியக்காவுடன் முழுக்கவே அவளுடைய சித்தி மகன் இருப்பான். அவனிடம் தூக்கத்தில் சொல்லிக்கொண்டிருப்பாள். ' தம்பி....அம்மாவையும் பெரியம்மாவையும் பத்திரமாப் பார்த்துக்கோ...' 

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு சிறுகதை


சிவப்பு  ரொட்டித்துண்டு
‘ அடேய் விவசாயி மகனே....என் அரண்மனைக்குள் நுழைந்து சில ரொட்டித்துண்டுகளைத் திருடியிருக்கிறாயடா நீ....?’
கண்களுக்குள் தனலைக்காட்டி கேட்டிக்கொண்டிருந்தான் உருஷ்ய ஜாரரசன் இரண்டாம் நிக்கோலஸ் . உறைக்குள்ளேருந்து வெளிவரும் வாளினைப்போல அவனது கேள்வி வந்திருந்தது. அவனது நாசிகள் துப்பாக்கிக் குழல்களாக விடைத்து நின்றன.
புஷ்கின், பொந்துக்கிளியாக இருக்க வேண்டியவன். கூண்டுக்கிளியாக கையறு நிலையில் நின்றுகொண்டிருந்தான். அவனது கால்கள் ஆட்டம் கண்டிருந்தன. அவனுடைய நாசியிலிருந்து ரத்தம் சன்னமாக ஒழுகிக்கொண்டிருந்தது. ஒன்று, இரண்டு, மூன்று - அவனைச்சுற்றி ஒன்பது சிவப்புப்படை காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஜாரரசனின் அதிகாரப்பூர்வ காவலர்கள். அவன் காட்டும் ஒவ்வொரு சமிக்ஞைக்கும் ஒவ்வொரு குத்து புஷ்கின் முகத்தில் விழுந்துகொண்டிருந்தது.
‘ ஜாரரசன் அரண்மனைக்குள் நுழைய உனக்கு யாரடா தைரியம் கொடுத்தது...?’
‘ எத்தனை நாட்களாக இந்த திருட்டு நடக்கிறது...?’
‘ கேவலம் நீ விவசாயி மகன்தானா நீ...?’
‘ போல்ஷவீக் கும்பலைச் சேர்ந்தவனா....?’
‘ உன் திருட்டுக்கு துணைக்கு வந்தவன்கள் யாரடா....?’
ஒவ்வொரு கேள்வியும் சாட்டையாக, உதையாக,அடியாக விழுந்துகொண்டிருந்தன. புஷ்கின் வாயைத் திறக்கவில்லை. திகில் பிடித்த பாவம் அவனது முகத்தில் இருந்தது. வாங்கிய அடி, உதைகளால் அவனது தோல்கள் மரத்துப்போயிருந்தது. உணர்வுகள் அறுந்துவிட்டிருந்தது. கண்களை மூடுவதும், திறப்பதும், மூடுவதுமாக இருந்தான். கண்களிலிருந்து கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படையாக இறங்கிக்கொண்டிருந்தது.
‘ அடேய்...நீ போல்ஷவீக் கும்பலைச் சேர்ந்தவன். கருவறுக்கப்பட வேண்டியவன்....!’ ஜாரரசன் வார்த்தைக் கொப்பளத்தால் விரோதித்தான். கொடும்பார்வையால் கயிறு திரித்தான். அனலிலிட்ட புழுவைப்போல துடிக்க வைத்தான்.
ஜாரரசனுக்கு அரண்மனைத் திருட்டு பெருத்த அவமானமாக இருந்தது. நாசிக்குள் பாம்பு நுழைந்துவிட்டதைப்போல குறுகுறுத்தது. ஆட்சிக்கு எதிராக கலகம் தூண்டிவிட்டதைப்போலிருந்தது. அவன் நியமித்திருந்த ஒற்றர்கள் மீதும் சிவப்புப்படை காவலர்களின் மீதும் நீதிபதிகளின் மீதும் நம்பிக்கையற்று வெறுப்பு வந்தது.
இரண்டாம் நிக்கோலஸ் ஜாரரசனுக்கு நீண்ட நாட்களாகவே ஓர் ஆசை இருந்து வந்தது. அவன் பேரரசன் என அழைக்கப்பட வேண்டும் என்று. பதினான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருஷ்ய தேசம் பைஸாண்டிய தேசத்தைப்போல பரந்து விரிந்த தேசமாக இருந்தது. முதலாம் ஜான் பீட்டர் மக்களால் பேரரசன் என்று அழைக்கப்பட்டுவந்தார். பைஸாண்டிய என்கிற பரந்து விரிந்த தேசம் இப்பொழுது இல்லை. ஆனால் அத்தேசத்திற்குரிய பல நிலப்பகுதிகளை இரண்டாம் நிக்கோலஸ் பிடித்திருந்தான். இப்போதைக்கு இப்பூவுலகின் பெரிய தேசம் அவனுக்கும் கீழ் இயக்கும் உருஷ்ய தேசம்தான். அத்தேசத்தை ஆளும் தான் பேரரசன் என விளிக்கப்பட மரபு வழித்திருச்சபை, போயர் மன்றம், சிவப்பு படை இராணுவ வட்டங்களில் தெரிவித்திருந்தான். அவனுக்கு முன் உருஷ்யாவை ஆட்சிப்புரிந்த முதலாம் நிக்கோலஸ், முதலாம் ,இரண்டாம், மூன்றாம் அலெக்ஸாண்டர்களை விடவும் நன்மதிப்பு, மரியாதை அவன் மீது கூடியிருந்தது. அதற்கொரு காரணமிருந்தது.
மரணக்கைதிகளை கல்லால் அடித்து கொல்லும் சட்டத்தை அவன் அடியோடி நீக்கியிருந்தான். அதற்குப்பதிலாக தூக்குத் தண்டனை விதித்திருந்தான். இந்த திருத்தம் வால்கா கரையோரம் முதல் ட்வினா வரை எழுச்சி இளைஞர்களின் மத்தியில்  நன்மதிப்பை கூட்டியிருந்தது. குறிப்பாக டார்டார்கள், உக்ரைனியன்கள், செர்பியர்கள்,யுரல்மலை பகுதி வாழ் மக்களிடமிருந்து பெருத்த வரவேற்பு கிடைத்திருந்தது.
ஜாரரசனின் மனைவிகள் ஜாரினாக்கள் என அழைக்கப்பட்டு வந்தார்கள். அவர்கள் நீண்ட நாட்களாக சமிக்ஞை காட்டிக்கொண்டு வந்தார்கள். அரசக்குடும்பத்திற்கு எதிராக சதி நடக்கிறதென்றும், சிவப்பு படை வீரர்களின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டும் என்றும், படைத்தளபதிகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும்......! ஆனால் ஜாரரசன் அதனை காதுக்கொடுத்துக்கேட்டதில்லை. விரைந்து சுழலும் இந்தப்பூமிப்பந்தில் அடியேன் ஒருவனே பேரரசன் மற்றவர்கள் என் அடிமைகள் என சொல்லிக்கொண்டுவந்தான். ஆனால் அவன் எதிர்ப்பார்த்திராத அந்த அரண்மனைத் திருட்டு அவனுக்குள் ஒரு பெரியக் கலவரத்தை மூட்டியிருந்தது. ஜாரினாக்கள் அவனை துச்சமாகப் பார்ப்பதைப்போலிருந்தது.
அரண்மனைத் திருட்டு விசாரணையை முதலில் ஏதேனும் ஒரு நீதிபதியை வைத்துதான் விசாரிக்க வேண்டும் என ஜாரரசன் நினைத்திருந்தான். நீதிபதிகள் மீதும் அவனுக்கு அவ்வளவாக நம்பிக்கை இருக்கவில்லை. ஆகவே அவனே ஒரு அவசர நீதிமன்றத்தை செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் பொதுவெளி சதுக்கத்தில் கூட்டியிருந்தான். இவ்விசாரணை மூலம் பொதுமக்களுக்கும், ஆட்சிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுபவர்களுக்கும், போல்ஷவீக் கும்பலுக்கும் ஓர் எச்சரிக்கையைக் கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தான்.
‘ அடேய் விவசாயி மகனே... அரசாளும் அரண்மனைக்குள் நுழைந்து திருடக் கற்றுக்கொடுத்தவன் எவனடா....?’
புஷ்கின் மேனி குலுங்கினான். அவனது நிர்வாண உடம்பு சில்லிட்டிருந்தது. கையறு நிலையில் அவன் நின்றான். மொத்தக்கண்களும் அவனை மேய்வதைப்போலிருந்தது.
நகரத்தில் பனி கொட்டிக்கொண்டிருந்தது. புஷ்கின் என்றோ ஒருநாள் கனவின் நடுப்பகுதியில் கண்ட பிரமாண்டமான கட்டிடத்தைப்போல செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் கட்டிடங்கள் இருந்தன. அவனால் அதை நிமிர்ந்து பார்க்கமுடியவில்லை. அவனது பற்கள் கிட்டிற்றன. தோல்கள் சுருங்கி சில்லிட்டன. உடல் வெடவெடத்தன.
புஷ்கின் செய்கையைப்பார்த்து ஜாரரசன் சிரித்தான். இரணியன் போல அவன் வயிறு வெடிக்கச் சிரித்தான். அரசன் சிரித்தால் அவையினர் சிரிக்க வேண்டும் இல்லையா!. ஜாரினாக்கள் சிரித்தார்கள். அமைச்சர்கள்,நீதிபதிகள், வழக்காடுபவர்கள், ஊழியர்கள் எனப் பலரும் சிரித்தார்கள். புஷ்கினும் சிரித்தான். புஷ்கின் ஜாரரசன் சிரிப்பதைப்போல உடம்பை நான்கு புறமும் குலுக்கிச் சிரித்தான். அவன் சிரிப்பால் ஜாரரசனின் முகம் சிவந்தது. தன் வாகான தோளை நிமிர்த்தி புஷ்கினைப் பார்த்தான். அதேப்பார்வையில் அவையை முறைத்தான். அவையினர் சிரிப்பை முறித்து தொண்டைக்குள் அடைக்கினர். மன்றம் ஒரு நொடிக்குள் அமைதிக்குள் வந்து விழுந்தது.
‘அடேய் விவசாயி மகனே....திருடும் போது இல்லாத பயம் விசாரணையில் ஏனடா வரவேண்டும்.....?’
ஜாரரசனின் இக்கேள்விக்கு புஷ்கினிடம் பதில் இருந்தது. பதில் சொல்ல வேண்டுமென்றால் தலையை நிமிர்த்த வேண்டும். கழுத்தில் இரும்புச் சங்கிலியால் புணைக்கப்பட்ட ஒரு பெரிய உலோகக்கொண்டு தொங்கிக்கிடந்தது. அது புவி ஈர்ப்பு விசையுடன் சேர்த்து அவனது தலையை தரையை நோக்கி இழுத்துகொண்டிருந்தது.
புஷ்கின் மொத்தப்பலத்தையும் கழுத்திற்கு கொடுத்தான். உலோகக்குண்டுடன் சேர்ந்து தலையை நிமிர்த்தினான். ஜாரரசனை ஏறிட்டுப்பார்த்தான். ‘நான் பெரிதென மதிக்கும் மாட்சிமைத்தாங்கிய சக்கரவர்த்தி அவர்களே....என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்...என் நடுக்கம் பயத்தினாலானது இல்லை....’
‘ பிறகென்ன பனியினாலானது என்கிறாயா....?’
‘ அதுவும் அன்று. பசியினாலானது....’
ஜாரரசன் ‘ கொல்’லெனச் சிரித்தான். ‘ அடேய்...பசி கெஞ்சச் செய்யும். இப்படி நடுங்கச் செய்யாதேடா.....’
‘ பேரரசரே... இளம்பசி நடுங்க செய்யும்.கொடும்பசி சூறையாடச் செய்யும்...’
‘ என்னடா பேசுகிறாய்....? யாரிடம் நீ பேசுகிறாய்....?’ ஜாரரசன் கடைக்கண்களை அங்கேயிங்கே ஓடவிட்டான். அவனது பார்வைகேற்ப ஒரு சிவப்புப்படை காவலன் புஷ்கினின் முகத்தில் குத்தினான். இன்னொருத்தன் நீண்ட சாட்டையை முதுகில் பாய்ச்சினான்.
நரம்பிற்குள் ஓடிய இரத்தம் தோலிற்கு வெளியில் ஓடிக்கிடந்தது. சிலர் அதை இரத்தமாகப் பார்த்தார்கள். சிலர் கலகத்தை மூட்டும் சிவப்பாகப் பார்த்தார்கள். ஜாரினாக்கள் அவனது ரத்தத்தைக் கண்டு ரசித்தார்கள். இன்னும் கூட அவனது இரத்தம் சிந்தப்பட வேண்டும் என வெறித்தார்கள். சிலர் அரசக்குடும்பத்தினர்களின் முகம் கோணாமல் இருக்க ரசிப்பதைப்போல நடித்தார்கள்.
நீதிமன்றம் மக்கட்திரளால் நிரம்பி வழிந்தது. ஜாரரசன் கீழ் இயங்கும் அத்தனை அதிகார சக்கரங்களும் அவனது பிடிக்கு வந்திருந்தன. இந்த வழக்கு ஜாரரசனின் குடும்ப வழக்கு. ஜாரரசனே விசாரித்து கைதிக்கு தீர்ப்பளிக்கப்போகிறார். இது எப்பொழுதாவது நடந்தேறும் பிரகடனம். பதினாறாம் நூற்றாண்டில் இப்படி நிறைய பிரகடனம் நடந்தேறி இருக்கிறது. பலருக்கு கல்லெறி மரணத்தண்டனை நிறைவேற்றியிருக்கிறது. ஜார் அரண்மனையின் கொந்தளிப்பான ஆண்டுகள் அவை. அவ்வாண்டுகள் புவி சுழற்சியில் திரும்பவும் திரும்பியிருக்கிறதோ....ஜாரரசனுக்கு எதிராக இளைஞர் படை ஒன்று திரண்டிருக்கிறதோ....அதன் தொடக்கம்தான் இந்த அரண்மனைத் திருட்டோ.....? மக்கள் புதிரான கேள்விகளுடன் விசாரணை சதுக்கத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.
செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் மையத்தில் இரண்டு அரண்மனைகளுக்கு இடையில் அவ்விசாரணை நடந்துகொண்டிருந்தது. விசாரணை ஒன்றுபட்ட உருஷிய தேசமும் புதிதாக சேர்ந்த செர்பியா, யுரல் பகுதி மக்களும் காது வழிச் செய்தியைக் கேட்டறியும் பொருட்டு செவியைத் தீட்டிக்கொண்டிருந்தார்கள்.
ஜாரரசன் அகோரமாக எழுந்தான். நாவை மடக்கி கண்களை உருட்டிக் கேட்டான். ‘ அடேய்.. உன் மேல் நான் சுமத்திருக்கும் குற்றத்திற்கு நீ சொல்லவரும் பதில்தான் என்ன...?’ மொத்த அமைதியையும் அவனது கேள்வி முறித்திருந்தது. பலரும் திடுக்கிட்டிருந்தார்கள். சதுக்கம் ஒரு குலுங்கி குலுங்கி நிமிர்ந்தது. புஷ்கின், ஒரு பதட்டமும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தான்.
‘ புஷ்கின்...நீ செய்திருக்கும் குற்றத்தை ஒப்புக்கொள்....’ சூழ்ந்திருந்த மக்கள் பார்வையால் அவனைக் கனிந்தார்கள். உதடுகளால் கெஞ்சினார்கள். அவர்களின் நெற்றியும், முகச்சுழிப்பும் அதையே சொல்லிக்கொண்டிருந்தன. புஷ்கின் இரத்தம ஒழுகிய முகத்தோடு அதனைக் கவனித்தான். நெற்றியை ஏற்றி இறக்கி உங்கள் தவிப்பு எனக்கு புரிகிறது என்றான்.
ஒரு தடித்த அரைக்கால் டவுசர் அணந்த சிவப்புப்படை காவலன் சொன்னான் ‘ அடேய்....குற்றத்தை ஒப்புக்கொள்ளும் குற்றவாளிக்கு தண்டனை குறைந்திருக்கிறது.....’
இன்னொரு காவலன் சொன்னான் ‘ அடேய்....யூதர்கள் பின்பற்றிய கல்லால் அடித்தே கொல்லும் மரணத்தண்டனையைத் தூக்குத்தண்டனையாக மாற்றிய பேரரசன் நம் ஜாரரசன். உன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றத்தை ஒப்புக்கொள்....’ காதிற்குள் கிசுகிசுத்தான்.
இன்னொரு காவலன் ‘ அடேய்....பிழைக்கத்தெரியாதவனே....நம் சக்கரவர்த்தி எத்தனையோ மரணத் தண்டனைக் கைதிகளுக்கு விடுதலைத் தந்திருக்கிறார். நான் கூட அப்படியாகப்பட்டவன்தான். சிலருக்கு விடுதலையுடன் சேர்த்து வெகுமதியும் கொடுத்திருக்கிறார். நம் உக்ரைன் மாகாண தரைப்படை தளபதி ஒரு காலத்தில் மரணத்தண்டனை கைதி. அவருக்கு விடுதலை கிட்டும் என்று யார் எதிர்ப்பார்த்தார்கள். இன்றைக்கு அவர் ஒரு மாகாணத்தின் தளபதி...
உருஷ்ய முழுவதும் இப்படி குற்றத்தை ஒப்புக்கொண்டு உயிர்ப்பிச்சையுடன் பதவிகள் பெற்றவர்கள் நிறையப்பேர். மாஸ்கோ தலைமை நீதிபதி ஒரு காலத்தில் உன்னைப்போல  சங்கிலி உலோகக்குண்டு புணைக்கப்பட்ட குற்றவாளிதான். அவர் செய்த குற்றத்திற்கு  மரணத்தண்டனையை விடவும் பெரியத் தண்டனை கிடைத்திருக்க வேண்டும்... அவர் செய்த குற்றம் என்னத் தெரியுமா....? ஜாரரசனின் தம்பி மகனை அரண்மனைக்குள் வைத்து கொன்றதுதான். விசாரணை நீதி மன்றத்திற்குச் சென்று மரணத்தண்டனை உறுதியாகிவிட்டிருந்தது. குற்றவாளி உன்னைப்போல விதண்டாவாதம் பேசிக்கொண்டிருக்கவில்லை.   ஜாரரசனை சந்தித்து ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும் எனக் கெஞ்சி மன்றாடினான். விசாரணை ஜாரரசனுக்கு வந்தது. ஜாரரசன் வழக்கை விசாரித்தார். ‘ அடேய்...என் உடன்பிறப்பு மகனை ஏனடாக் கொன்றாய்....?’ எனக் கேட்டார். அவன் சொன்னான் ‘ என்னை மன்னிக்க வேண்டும் பேரரசே... உங்களுக்கு எதிராக சதி நடந்தது. உம்மைத் தீர்த்துக்கட்டி உம் அரியாசனத்தில் ஏறும் சதியில் அவன் இறங்கியிருந்தான். வலையையும் பின்னினான். அதற்கான நாளைக் குறித்தான். இதை நான் கண்ணால் கண்டேன். உமக்கு எதிராக சதியா....! அதையும் என்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியுமா....! ஒரு வாளினை உருவினேன். அவனது சிரத்தைக் கொய்தேன்...இதற்கு மேல் நீவிர் என்னத் தண்டனைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்...’ என்று சிரம் தாழ்ந்தான்.
இதற்கு ஜாரரசன் என்ன தீர்ப்பளிக்கப்போகிறார் என உலகமே பார்த்திருந்தது. ஜாரரசன் எழுந்தார். தன் தீர்ப்பை வழங்கினார் ‘ இவன் குற்றவாளி அல்ல. இவன் என் நிழல். இவனை இப்பொழுதே விடுதலை செய்கிறேன். இவன் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைப்பாத்திரமாக இவனை நான் மாஸ்கோ நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கிறேன்.....’என்றார். இதுதான் நம் ஜாரரசன். அவர் நம்பும் படியாக ஏதேனும் ஒரு பொய்யைச் சொல். அவரிடமிருந்து உயிர்ப்பிச்சை வாங்கிக்கொள்....’ ஒரு காவலன் புஷ்கின் முகத்தை நிமிர்த்தி கண்கள் பார்க்க அவனுக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொல்லி முடித்தான்.
ஜாரரசன் புஷ்கினை அதட்டினார். அந்த அதட்டல் பெய்யும் பனிமழையைத் துளைத்தது. மக்கள் பயத்தில் உறைந்துபோய் உட்கார்ந்திருந்தார்கள்.
‘ அடேய்....உன்னைத்தாண்டா கேட்கிறேன்....என் அரண்மனைக்குள் நுழைந்து திருடியிருக்கிறாய்....இதற்கு நீ சொல்லவரும் விளக்கம் என்ன....?’
நீதிமன்றத்தில் சூழ்ந்திருந்த மக்கள் வாயில் கையை வைத்துகொண்டு அவனை பரிதாபமாகப் பார்த்துகொண்டிருந்தார்கள். அவர்களின் இதயத்துடிப்புகள் இரட்டித்துக்கொண்டிருந்தன. மூச்சை உள்ளே மெதுவாக இழுத்து நெஞ்சு அடைக்க விட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ‘திக்....திக்...’ என இருந்தது.
புஷ்கின் தலையை மெல்ல உயர்த்தினான். தடதடக்கும் நடுக்கத்துடன் சொன்னான்‘ மாட்சிமைத்தாங்கிய பேரரசே....நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. சிறு தவறுதான் செய்திருக்கிறேன்....’
சூழ்ந்திருந்த மக்களின் முகம் சட்டென இருண்டது. எப்படியேனும் இவன் விடுதலைப்பெற வேண்டும் என தவித்துக்கொண்டிருந்தவர்களின் துடிப்பு இறுக்கம் கொண்டது.
‘ என்னடா சொல்கிறாய்.....குற்றம் செய்யவில்லை...தவறுதான் செய்திருக்கிறாயா.....! இரண்டிற்கும் ஆகப்பெரிய வித்தியாசமாக என்னடா வைத்திருக்கிறாய்.....?’ ஜாரரசனால் ஒரே இடத்தில் இருப்புக்கொள்ள முடியவில்லை. பிட்டம் தானாக இருக்கையிலிருந்து எழுவதும் அமர்வதுமாக இருந்தது. நாற்காலி அவன் ஆட்சி செய்யும் நாட்டைப்போல ஆட்டம் கண்டது. நாற்காலி ஆடும் ஆட்டத்திற்கேற்ப அவரைச்சுற்றியிருந்தவர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
‘ அடேய்....உன் பெயரென்ன சொன்னாய்....?’
‘  பேரரசு அவர்களே, என் பெயர் புஷ்கின்...’
ஜாரரசன் முகம் சினத்தால் சிவந்தது. ‘ இப்படி தலை வால் இல்லாமல் சொன்னால் எப்படி...? தலையெழுத்து, வால் எழுத்தென்று எதாவது இருக்கிறதா இல்லையா...?’
‘ இருக்கிறது பேரரசே...என் முழுபெயர் அலெக்ஸாண்டர் புஷ்கின்....’
‘ விவசாயி மகன் தானா நீ....?’ ஒரு அலட்சியமான உச்சரிப்பில் அக்கேள்வி இருந்தது.
‘ ஆமாம்... அரசே...’
‘ என் அரண்மனைக்குள் திருடியிருக்கிறாய்.....?’
‘ ஆமாம் அரசே...’
‘ ஒப்புக்கொள்கிறாயா...?’
‘ ஆம்....ஒப்புக்கொள்கிறேன். அரசே....’
‘ அப்படியானால் நீ குற்றம் புரிந்தவன் அப்படித்தானே...?’
‘ என்னை மன்னிக்க வேண்டும் அரசே.... பசிக்காக உணவைத் தேடுவதும் கிடைக்கையில்  அதைப்பறிப்பதும் எப்படி அரசே  குற்றமாக முடியும்...?’
‘ இவ்வுலகின் மிகப்பெரிய தேசத்தை ஆளும் என் அரண்மனைக்குள் நுழைந்து சில ரொட்டித் துண்டுகளைத் திருடியவன் குற்றம் புரிந்தவன் இல்லாமல் வேறு என்னவாம்...?’
‘ நான் பெரிதென மதிக்கும் அரசே....நான் அரண்மனைக்குள் நுழைந்தேன். ஒப்புக்கொள்கிறேன். ஓர் அறையில் தங்கக்குவியல்களாக இருந்தன. நான் நினைத்திருந்தால் அதை வாறி அள்ளி முடிந்திருக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்தவனில்லை. இன்னொரு அறைக்குள் நுழைந்தேன். அறை முழுவதும் ஆபரணங்களாக இருந்தன. அதையும் நான் சீண்டவில்லை. மற்றொரு அறையில் பொற்காசுகள் குவிந்திருந்தன. அதையும் நான் தொட்டவனில்லை. மற்றொரு அறையில் நீர் உடுத்தும் விலை மதிப்புமிக்க ஆடைகளும், மற்றொன்றி்ல் போர் குறித்த ரகசிய ஆவணங்களும் இருந்தன. இவற்றில் ஏதேனும் ஒன்றை திருடியிருந்தால் உம் கேள்வி சரியென இருக்கும். நான் எடுத்தது ஒன்றிரண்டு ரொட்டித்துண்டுகள் தான் அரசே...! அதையும் நான் என் பசிக்காகதான் எடுத்தேன். பசி தணிந்தப்பிறகு மேலும் ஒரு ரொட்டித்துண்டுகளைத் தின்றிருந்தால் நீவிர் சொல்வதைப்போல நான் குற்றம் புரிந்தவனாகியிருப்பேன். மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ரொட்டி அடுத்தவர் ரொட்டி அரசே...! இது என் தந்தை எனக்கு சொன்னது அரசே...
ரொட்டித்துண்டுகளை எனக்காகத்தான் நான் எடுத்தேன். தின்றேன். பசி அடைந்த பின் அரண்மனைக்கு வெளியே ஒரு மரத்தடியில் உண்ட மயக்கத்தில் உறங்கினேன். உம் சிவப்புப்படை காவலர்கள் வேறு யார் யாரையோ பிடித்துவைத்துகொண்டு அடித்து உதைத்து வதைத்தார்கள். என் மனம் பொறுக்கவில்லை. நானாக முன் வந்து நான் செய்த தவறை ஒப்புக்கொண்டேன். இது எப்படி அரசே குற்றமாக முடியும்...?’
‘ அடேய்...நீ செய்தது பெருங்குற்றம்...’
‘ இல்லை அரசே....என்னை நீங்கள் மன்னித்தாக வேணும்....அது குற்றமல்ல....தவறுதான்....’ ஜாரரசன் விலங்கிடப்பட்டு நின்றுகொண்டிருந்த புஷ்கினைப் பார்த்தான். ஒரு ஓநாய் ஒரு ஆட்டுக்குட்டியைப் பார்ப்பதைப்போல அப்பார்வை இருந்தது.
‘ குற்றத்திற்கும் தவறுக்குமிடையில் நீ காணும் வித்தியாசம் என்ன...?’
‘ நான் பெரிதென மதிக்கும் நீதியரசர் அவர்களே...இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தைப் பார்க்கிறேன்.....’
‘ அதைத்தான் கேட்கிறேன்....’
‘ சொல்கிறேன் அரசே....தாகமெடுக்கிறது...நா வறண்டுத் தவிக்கிறது.. கண்கள் இமைகளுக்குள் கனக்கிறது....ஒரு மிடற்று தண்ணீர் வேண்டும்..தாருங்கள் தாகம் தணித்துகொண்டு இரண்டிற்குமான வித்தியாசத்தைச் சொல்கிறேன்....’
ஒரு காவலன் கையில் வேலுடன் தண்ணீர் கொண்டு வர ஓடினான். ஜார் மன்னன் அவனைத் தடுத்தான். ‘ அவனுக்கு தண்ணீர் கொடுக்காதீர்....அவன் செய்திருக்கும் குற்றத்திற்கு ஒரு மாத காலம் தாகம் தணியாமல் இருக்க வேண்டும் என்பது நான் அவனுக்கு கொடுக்கும் ஒரு தண்டனை....’
தண்டனையைக் கேட்டதும் மக்கள் காதினைப் பொத்தினார்கள். செய்தி மெல்ல அரண்மனைக்கு வெளியே காதுவழியாக கசிந்துகொண்டிருந்தது. நகரம் துக்கம் தொணித்த அமைதியானது. புஷ்கின் கால்கள் ஆட்டம் கண்டன. கழுத்தில் தொங்கிய உலோகக்குண்டு அவனை தரையோடு சாய்த்தது. புஷ்கின் முட்டிக்காலிட்டு குப்புற விழுந்தான். நெற்றி அடிபட சுருண்டான்.
‘ என் அரண்மனைக்குள் நுழைந்தது ஒரு குற்றம். அரண்மனை ரகசியங்களை கண்டது இன்னொரு குற்றம். ரொட்டித்துண்டுகளைத் திருடியது இன்னொரு குற்றம். குற்றத்தின் மேல் குற்றம் செய்திருக்கிறாயடா நீ.....’
‘ எனக்கு ஒரு மிடற்று தண்ணீர் மட்டும் தாருங்கள் அரசே....’
‘ தருகிறேன்...என் இன்னொரு கேள்விக்கு பதில் சொல்....நான் கேள்விப்பட்டிருக்கும் பதிலை நீ சொல்வாயேயானால் உன்னை விடுதலை செய்கிறேன். எதாவது ஒரு மாகாணத்தின் தளபதியாக்கி அழகுப்பார்க்கிறேன்.....’
குப்புற விழுந்துக்கிடந்தவன் தலையை உயர்த்தி ஜாரரசனைப் பார்த்தான். உறைந்து உட்கார்ந்திருந்த மக்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.
‘ விவசாயி மகனே... உன்னுடன் சேர்ந்து திருடியவர்கள் யார் யார்....?’
புஷ்கின் தலையை மேலும் நிமிர்த்தினான். தெரிந்தக் கேள்வியைக் கேட்டமைக்காக கண்களால் நன்றி நல்கினான். என்னை விடுதலை செய்துவிடுமாறு கெஞ்சினான்.
‘ நான் பெரிதென மதிக்கும் மாமன்னர் அவர்களே....என்னுடன் சேர்ந்து மூன்று தோழர்கள் திருடினார்கள்....’
ஜாரரசன் ‘வீறீட்...’டென்று எழுந்தான். அவனுடன் சேர்ந்து நீதிபதிகள் எழுந்தார்கள். அதிகாரிகள்,ஊழியர்கள் எழுந்தார்கள். ஜாரரசன் கையை ஒரு முறை தட்டிக்கொண்டான். மீசையை நீவி விட்டுக்கொண்டான். ஒரு முறை கனைத்துகொண்டான். அதே இடத்தில் நின்றவாறு குதித்தான். அதற்கும் இதற்குமாக நடந்தான். ‘என் கணிப்பு சரியாகி விட்டது. என் ஆட்சிக்கு எதிராக போல்ஷவீக் கும்பல் சதித்திட்டம் தீட்டியிருப்பது தெரியவருகிறது! காவலர்களே....என் ஆளுமையின் கீழ் பணியாற்றும் ஊழியர்களே...கேட்டுக்கொள்ளுங்கள்....போல்ஷவீக் பயல்கள் தேசத்திற்கு விரோதமானவர்கள். அவர்கள் கருவறுக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் வேறொடு களையப்பட வேண்டியவர்கள். அவர்களின் நிழல் என் ஆட்சி பகுதிக்குள் விழுதல் கூடாது.....’
சிவப்புப்படை வீரர்கள் ஒரு சேர எழுந்தார்கள். நெஞ்சை நிமிர்த்தி நின்றார்கள். ஒன்றாகக் குனிந்து நிமிர்ந்தார்கள். ‘ மாட்சிமை தாங்கிய மாமன்னர் வாழ்க...ஜாரரசன் புகழ் ஓங்குக...’
ஜாரரசன் ஒரு கணம் அமைதியாக வீற்றிருந்தான். புஷ்கின் முகத்தைப்பார்த்தான். அவனுடைய தவிப்பையும் கெஞ்சல் துடிப்பையும் ரசித்தான். ஒரு காவலனிடம் கையை நீட்டி அவனுக்கு ஒரு குவளைத் தண்ணீர் கொடுக்குமாறு பணித்தான்.
ஒரு காவலன் தண்ணீர் கொண்டு வந்தான். இன்னொரு காவலன் அதை வாங்கி புஷ்கின்  வாயினில் ஊற்றினான். தண்ணீர் நூலிழையாக தொண்டைக்குள் இறங்கியது.
‘ அடேய்...புஷ்கின்....நீ மிக விரைவில் விடுதலையாகப் போகிறாய்....தாமதிக்காதே....உன்னுடன் சேர்ந்து திருடியவர்கள் யார் யாரென சொல்லி முடி...’
‘ அந்த மூவருமே என் தோழர்கள் அரசே....?’
ஜாரரசனின் முகம் இருண்டது. பற்களைக் கடித்தான். கண்களை உருட்டி விழித்தான். ‘அவர்கள் யார் யார்....?’
‘ சொல்கிறேன் அரசே....அதற்கு முன் பசியாற எனக்கு இரண்டு ரொட்டித்துண்டுகள் வேணும்....’
ஒரு காவலன் ஓடினான். ஒரு தட்டில் சில ரொட்டித்துண்டுகளை எடுத்து வந்தான். அதை ஒவ்வொன்றாக எடுத்து பஷ்கின் வாயினில் திணித்தான். புஷ்கின் பசியாறினான். தண்ணீர் பருகினான்.
‘ வேறு என்ன வேணும்....சொல் தருகிறேன்....?’
‘ போதும் பேரரசே.....’ புஷ்கின் தலை குனிந்து நன்றி நல்கினான்.
‘ சொல். அவர்கள் யார் யார்....?’
நீதிமன்றம் நிசப்தமானது. மக்கள் விதிர்விதிர்த்து உட்கார்ந்தார்கள். அவர்களின் ஆசுவாசமான மூச்சு நின்று பேருமூச்சாக நெஞ்சுக்குள் அடைத்து நின்றது. ‘ இவன் தொலைகிறான் என்றில்லாமல் யார் யாரையோ காட்டிக்கொடுக்கப்போகிறான்...இவன் படுபாவி.! இவனுக்காக நாம் இரக்கமுற்றோமே....இவன் கல்லால் அடித்து கொல்லப்பட வேண்டியவன்....துரோகி....’ மக்கள் தொண்டைக்குள் பேசிக்கொண்டார்கள்.
புஷ்கின் மெல்ல எழுந்தான். மக்களைப் பார்த்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்றவாறு கெஞ்சி நின்றான். ‘ அரசே....என்னுடன் சேர்ந்து திருடியவர்கள் மூன்று தோழர்கள்....’
‘ ஆம்...சொல்....அவர்கள் யார் யார்....?’
‘ முதல் தோழர் அடர் இருட்டு.’
ஜாரரசன் வெகுண்டான்.
‘ இரண்டாவது தோழர் சிட்டெனச் சீறிப்பாயும் ஒரு குதிரை...’
அவன் முகம் இருண்டது.
‘  மூன்றாவது தோழர் ஓர் வில். அத்துடன் சில அம்புகள்....’
‘விராட்...’ டென்று எழுந்தான் ஜாரரசன். ஒன்றிரண்டு பேர் சிரித்திருந்தார்கள். இன்னும் சிலர் சிரிப்பை கொடும்பிற்குள் அடைத்தார்கள்.
‘ அடேய்.விவசாயி மகனே...நீ நன்றாகப் பேசுகிறாயடா..என் நீதி மன்றத்து அவையில் இதற்கு முன் எவனும் இப்படி  பேசியதில்லையடா. .உன் பேச்சுத் திறமையைப் பாராட்டுகிறேன். அத்துடன் உனக்கு நான் மூன்று பரிசுகள் தருகிறேன்.
முதல் பரிசு கிடைமட்டமாக ஊன்றப்பட்ட இரண்டு கம்பங்கள்.
இரண்டாவது பரிசு அதன் குறுக்கே கட்டப்பட்ட ஒரு சட்டம்.
மூன்றாவது பரிசு அதில் தொங்கும் ஒரு கயிறு’
ஜாரரசன் அம்பென அம்மன்றத்திலிருந்து  வெளியேறினான். இது அவனது கடைசி வெளியேற்றம்!


வியாழன், 10 ஆகஸ்ட், 2017

எது வாழ்க்கை?

💮 *உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம*்.

"உலகத்திலேயே அழகானப் பிணம்   இங்கே  உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல  வேளை  இவள்  பிணமானாள்,  இல்லாவிட்டால்   இந்தக் கல்லறைக்குள்  ரோமாபுரி  சாம்ராஜ்யமே  பிணமாகியிருக்கும்."

 💮 *மகா அலெக்சாண்டரின்  கல்லறை  வாசகங்கள்*.

"இந்த  உலகம்  முழுவதுமே  போதாது  என்று  சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி  போதுமானதாக ஆகிவிட்டது."

💮 *ஒரு  தொழிலாளியின் கல்லறை வாசகம*்.

"இங்கே  புதை குழியில் கூட  இவன்  கறையான்களால்  சுரண்டப்படுகிறான்."

💮 *அரசியல்வாதியின்  கல்லறையில்*,

"தயவு செய்து  இங்கே  கை தட்டி  விடாதீர்கள்,  இவன்  எழுந்து விடக்கூடாது."

💮 *ஒரு  விலை மகளின்  கல்லறை  வாசகம்.*

"இங்கு  தான்  இவள்  தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு  செய்யாதீர்கள், பாவம்  இனி  வர முடியாது  இவளால்."


இந்தியை இடித்துக்கட்டுதல்

‘ பிரெஞ்ச் மக்களே, வாருங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வோம். ஆங்கிலேயர்களைப் பார்த்து உம் ஆங்கிலம் எமக்குத் தேவையில்லை எனச் சொல்வதற்கு நமக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்...’ 
பிரெஞ்சு மொழியில் ஆங்கிலம் கலப்பதற்கு எதிரானப் போராட்டத்தில் அறிஞர் டி.எஸ். எலியட் ஆற்றிய உரை இது. அவர் உரையாற்றி முடித்து கீழே இறங்குகையில் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சு மொழியைக் காப்பாற்ற போராடும் நாம் ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ளச் சொல்வது நம் மொழிக்குச் செய்கிறத் துரோகம் இல்லையா...?. எலியட் சொன்னார். ‘வேண்டும் என்பதை நம் மொழியில் சொல்லத் தெரிந்த நாம் , வேண்டாம் என்பதை அவன் மொழியில் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்...’ 

தமிழர்களின் தந்தை ஈ.வெ.ரா. பெரியார் தன் வாழ்நாட்களின் பிற்பகுதியை இந்தி எதிர்ப்பிற்காகக் கழித்தவர். ஆனால் ஒரு முரண் என்னத்தெரியுமா..? அவர் தொடக்கத்தில் தன் சொந்த செலவில் இந்திக்கென்று பள்ளி நடத்தியவர் அவர். 1922 ஆம் ஆண்டு அவரது வீட்டிற்கு டாக்டர் அன்சாரி, விட்டல்பாய் படேல், பண்டித மோதிலால் நேரு முதலிய காங்கிரஸ்க்காரர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் வந்து சென்றதற்கு ஞாபகார்த்தமாக ஒரு பதிய காரியம் ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று நினைத்த பெரியார் இந்தியை இன்றுமுதல் சில பிள்ளைகளுக்கு தன் சொந்தச் செலவிலேயே கற்றுக்கொடுக்கலாம் என முடிவு எடுத்தார். அதன்படி முப்பது பேர்கள் கொண்ட பள்ளியைத் தொடங்கி பதினைந்து ஆசிரியர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் இரண்டு ஆசிரியர்களை நியமித்தார். பதினைந்து மாணவர்களின் தங்கும் மற்றும் உணவு செலவை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. மற்றக் குழந்தைகளுக்கான செலவு இவருடையது. அவரது தகப்பனார் சமாதிக்கு அருகாமையிலுள்ள கட்டிடமே பள்ளிக்கூடமாகச் செயல்பட்டது. பாடம் ஆறுமாதம் நடத்தப்பட்டிருந்தது. குழந்தைகள் இந்தியின் வழியில் எதைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் கவனிக்கத் தொடங்கினார். அவர்கள் இந்தியில் வேதங்களைக் கற்றுக்கொண்டிருந்தார்கள். அப்பள்ளியை அத்துடன் நிறுத்தியிருந்தார். ஓரளவு இந்திப்படித்த மாணவர்களைக் கொண்டு இந்தியில் எதிர்ப்பு தெரிவிக்க வைத்தார். ‘ உங்கள் வடநாட்டு இந்தி, எங்கள் திராவிட நாட்டிற்கு தேவை இல்லை’
தமிழ்நாட்டில் எப்பொழுதெல்லாம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெறுகிறதோ அப்பொழுதெல்லாம் பெரியாரின் பெயர் தவறாமல் அடிபடும். ஒரு முறை பெரியாரிடம் கேட்டார்கள் ‘ நீங்கள் ஏன் இந்தியை எதிர்க்கிறீர்கள். ஆங்கிலத்தை ஈர்க்கிறீர்கள்....’என்று. பெரியார் சொன்னார் ‘ இந்தியில் திதி, திவசம், கன்னியாதானம், கருமாதி, பூசுரர் - வான்சுரர், மோட்சலோகம் - நரகலோகம், பிராமணன் -  சூத்திரன், தேவதாசி,..போன்ற சொற்கள் இருக்கின்றன. அதனால் அதை எதிர்க்கிறேன். இத்தகைய சொற்கள் இல்லாத ஆங்கிலத்தை விரும்பி ஈர்க்கிறேன்...’
பெரியார் இல்லாமல் நடக்கும் முதல் இந்தி திணிப்பு எதிர்ப்பு இதுதான். இது இந்திக்கு எதிரான நான்காவது போராட்டம். அன்றைய இந்திக்கு எதிரானப் போராட்டம் என்பது இந்தி எதிர்ப்பு போராட்டம். அதிலும் மூன்றாம் கட்டப்போராட்டம் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மேற்குவங்காளம் என பரந்துபட்ட போராட்டமாக எழுந்தது. இப்போராட்டம் நீண்ட கால காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து திராவிட ஆட்சிக்கு வழி வகுத்தது. இன்றைக்கு நரேந்திர மோடி ஆட்சிக்காலத்தில் துளிர்விடும் இந்திக்கு எதிரானப் போராட்டம் அத்தகையப் போராட்டம் அன்று. இது இந்தி திணிப்பிற்கு எதிரானப் போராட்டம். முன்னது இந்தி எந்த வடிவத்திலும் வேண்டாம். பின்னது தேவைக்கு ஏற்ப கற்றுக்கொண்டுதானே இருக்கிறோம்...கட்டாயப்படுத்தினால் எப்படி...? 
ஏன் இந்த இறக்கம்...? இந்திக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்களின் வாரிசுகள் இன்றைக்கு ஹிந்தியில் சகலகலா  வல்லவர்களாக இருக்கையில் நாம் ஏன் இந்தி கற்றுக்கொள்ளக்கூடாது என்கிற கேள்வியின் விளிம்புதான் காரணம். அவர்கள் ஹிந்தியின் தேவையை உணர்ந்திருக்கிறார்கள். ஹிந்தி தெரியாமல் டெல்லியில், ஆட்சியில், அதிகாரத்தில், நிர்வாகத்தில், வியாபாரத்தில் ஆழமாக காலூன்ற முடியாது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இதன் விளைவுதான் ‘ இந்தி எதிர்ப்புப் போராட்டம், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டமாக பரிணாமம் அடைந்திருக்கிறது. 
மார்க்சிய தத்துவத்தில் ஹெகலின் இயக்கவியல் முரண் கோட்பாடு என்று ஒன்று உண்டு. முட்டைக்குள் இருக்கும் மஞ்சள் கரு குஞ்சாக மாற முட்டைக்கு ஓடு தேவை. அதே ஓடுதான் முட்டைக்குளிலிருந்து குஞ்சு வெளியில் வர தடையாகவும் இருக்கும். சமஸ்கிருதம் தமிழகத்தில் எடுபடாத மொழியாக மாறிப்போனதற்கு காரணம் இயக்கவியல் முரண் கோட்பாடுதான். அன்றைய மெட்ராஸ் சர்க்காரில் சமஸ்கிருத பல்கலைக்கழகம் இராமேஸ்வரம் மற்றும் திருப்பதியில் இருந்தன. இப்பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் வர்ணாசிரம கட்டமைப்பில் சூத்திரர்களும், பஞ்சமார்களும் படிக்கக்கூடாத மொழியாக சமஸ்கிருதம் இருந்தது. இவர்கள் சமஸ்கிருதம் படித்தால் அவர்களின் நாக்கு அறுக்க வேண்டும். காதினில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என வேதங்கள் சொல்லியிருந்தன. 
மற்றொன்று இதை விடவும் சூழ்ச்சியானது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வரும் காலம் வரைக்கும் மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவத்துறைக்கான விண்ணப்பத்தில் சமஸ்கிருதம் தெரிந்த ஒருவர் மட்டும்தான் மருத்துவம் படிக்க தகுதியானவர் என்கிற குறிப்பு இடம் பெற்றிருந்தது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்ததும் சமஸ்கிருதத்திற்கும் ஆங்கிலத்தில் படிக்கும் அலோபதி மருத்துவத்திற்கும் என்னத் தொடர்பு...? என்கிற கேள்வியோடு அக்குறிப்பை அடியோடு நீக்கியிருந்தது. இதற்குப் பிறகே மருத்துவம் எல்லோருக்குமான படிப்பானது. பிராமணர்களுடன் போட்டிக்கு நிற்கும் மாணவர்களை போட்டியில் கலந்துகொள்ளாமல் வெளியேற்ற தேவைப்படும் மொழியாக இருந்ததுதான் சமஸ்கிருதம். அன்றைக்கு தலைத்தூக்கியிருந்த வேணும், கூடாது என்கிற பாகுபாட்டின் வடுதான் இன்றைக்கும் நம்மை சமஸ்கிருதத்திலிருந்து மெல்ல, மெல்ல நம்மை விலக்கிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தேசிய அளவில் நீட் தேர்வு நடைபெற்றது இல்லையா! இத்தேர்வு எழுதுவதற்கு அடிப்படைத் தகுதி ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தால் எப்படி இருக்கும்...? அப்படியாகத்தான் அன்றைக்கு மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையென இருந்தது. 
சரி! சமஸ்கிருதம் வெறுப்பிற்கு காரணம் இருக்கிறது. இந்தியை ஏன் நாம் எதிர்க்க வேண்டும்....?. முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் மொழியில் சொல்வதாக இருந்தால் ‘ சமஸ்கிருதத்தின் வாலறுக்கப்பட்ட நரிதான் இந்தி’
சிலர் இந்தி தேசிய மொழி என்கிறார்கள். தேசியம் என்கிற ஒன்று இந்தியாவில் இல்லைவே இல்லை. என்றைக்கு மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதோ அன்றைய தினமே தேசியம் என்கிற சொல் சடமாகிவிட்டது. தேசியம் என்பது ஒற்றை மொழி, ஒற்றை இனம், ஒற்றைக் கலாச்சாரம் கொண்டது. அதை கட்டமைக்கும் வேலையில்தான் இன்றைய ஆளும் மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது.
‘இந்தி தமிழ்நாட்டிற்குள் நுழைந்தால் தமிழ்மொழி அழிந்துபோய்விடுமா...?’ பெரியாரிடம் கேட்டார்கள். பெரியார் சொன்னார். ‘ தமிழை அழிக்க இந்தியால் முடியாது. ஆனால் இந்தி தமிழ்நாட்டிற்குள் நுழைந்தால் திராவிட கலாச்சாரம் சிதைந்துபோய்விடும்...’ என்றார். இந்தி என்பது உருது மற்றும் பாரசீக மொழிகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட மொழி. இந்தியால் திராவிட நாட்டில் துளசிதாஸ் இராமாயணம் படிக்கலாம். சாதிகளை வளர்க்கும் வேதங்கள் படிக்கலாம். நம் திராவிடர்களுக்குத் தேவை அது இல்லை. இராக்கெட் என்பது இந்தியில் உண்டு. ஆங்கிலத்திலும் உண்டு. இந்தியில் உள்ள இராக்கெட் மந்திரத்தால் இயங்கக்கூடியது. ஆங்கிலத்தில் உள்ள இராக்கெட் எந்திரத்தால் இயங்கக்கூடியது. நமக்குத் தேவை இந்தியா, ஆங்கிலமா...? குடிஅரசு தலையங்கத்தின் அவர் எழுதிய  கட்டுரை இது. 
இந்தி 96 வகைகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முரண்பாடுகளைக் கொண்டவையாக இருக்கிறது. அதில் ஒரு வகை தேவநாகரி ( தேவ - கடவுள் , நாகரி - நகரம் )இந்தி.  அதாவது கடவுளின் நகரத்து மொழி என்பது அதன் பொருளாகும். இந்தி மட்டுமல்ல சமஸ்கிருதம், மராட்டி, குஜராத்தி, காஷ்மீரி, சாந்தாலி, சிந்தி மொழிகள் யாவும் அவ்வகையைச் சார்ந்த மொழிகளாகவே காட்டப்படுகிறது. சிலர் இம்மொழிகள் கிமு 500 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த பிராமி எழுத்தின் நீட்சி என்கின்றார்கள் . பலர் அதை மறுக்கின்றனர். மேலும் இது அபுகிடா  என அழைக்கப்படும் எழுத்து முறை வகையைச் சார்ந்தது. ஒரு எழுத்தை வைத்துக்கொண்டு அதன் வடிவத்தை நீட்டுவதன் மூலம் புதிய புதிய எழுத்துகளை உருவாக்கும் வகையைச் சார்ந்த மொழி அது.
தற்போது பேச்சு, எழுத்து வழக்கத்தில் இருக்கும் இந்தி தேவநாகரி வடிவம் அல்ல. கடிபோலி வடிவம். அதாவது முகலாயர்களின் வருகைக்குப்பிறகு உருவான கலப்பின மொழிதான் கடிபோலி. இது உருது மொழியின் கிளை மொழியாகும். 1867 ஆம் ஆண்டிற்கு முன்பு  இந்தியின் பேச்சு மற்றும் எழுத்து வடிவம் தேவநாகரி அதன்பிறகு கடிபோலி. கடிபோலி எழுத்து வடிவம் வளர்ந்தக்காலம் ‘துவிவேதி யுகம்’ என அழைக்கப்படுகிறது.
கடிபோலி இந்தியை வளர்த்தெடுத்தவர் மகாவீரர் பிரசாத்து துவிவேதி ( 1868 - 1938 )  அவர்கள். அவர் உருது வடிவத்துடன் கூடிய இந்தி மொழியை வளர்த்தெடுத்தார். உருது மொழியுடன் இந்தி கலைச்சொற்களை இணைத்து நவீன இந்தியை உருவாக்கினார். அவ்வடிவின் வாயிலாக  கவிதை நூல்களை இயற்றினார். ‘விதி விடம்பனா’,‘ குமார சம்பவ சாரம் ’முதலிய உயர்ந்த கவிதை நூல்கள் கடிபோலி வடிவ இந்தி நூல்களாகும்.
 இந்தியின் தேசிய கவிஞரான  ‘மைதிலி  சரண் குப்தா’ அவர்களின்  ‘சாகேத்து’, ‘யசோதரா ’ போன்ற காப்பியங்களும் இன்றைய நவீன இந்தி இலக்கியங்களும் கடிபோலி இந்தி வடிவத்தால் ஆனவை. ஆனால் இந்தியின் வேதம் என அழைக்கப்படக்கூடிய ரிக், யஜுர் வேதங்கள் தேவநாகரி வடிவத்தலானவை. 
மத்திய இந்தியாவில் அதாவது டெல்லி, லக்கோ ,... பகுதிகளில் கடிபோலி இந்தியும் மற்ற பகுதிகளில் தேவநாகரி இந்தியும் பேசும் மொழியாக இருக்கின்றன. டெல்லி வாழ் மக்கள் பேசுகின்ற இந்தி காஷ்மீர் வாழ் இந்து பண்டிட்களுக்கு புரியாது. மக்கட்தொகை அடிப்படையில் பார்த்தால் இந்திய சுதந்திரத்தின் போது கடிபோலி இந்தி பேசுபவர்கள் அதிகமாக இருந்தார்கள். என்வே சுதந்திரத்திற்கு பிறகு கடிபோலி வடிவ இந்தி நிர்வாக மொழியாக மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. தேசிய மொழியாக  அல்ல.  ஆனால் தேவநாகரி இந்தி பேசுபவர்கள் அன்று முதல் இன்று வரை கடிபோலி இந்தியைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள்.. இதற்கிடையில்  கடிபோலி இந்தி உருது மொழியின் கிளை மொழி என்பதால் அம்மொழியை புறக்கணித்து தேவநாகரி வடிவம் கொண்ட இந்தியை பரவலாக்கும் முயற்சி நடந்தேறி வந்தது. சமீபத்தி்ல் மத்திய அரசு நிறுவிய அரசிற்கான இணையதளம் தேவநாகரி வடிவிலானது. அதாவது உருது மொழி கலப்பற்ற இந்தி அது. 
 காந்தியடிகள் வாழ்ந்த காலத்தில் அவர் ‘இந்துஸ்தானி’ என்கிற கலப்பு மொழியின் தேவையை அவர் வலியுறுத்தினார். ஆனால் அவர்காலத்திலேயே இந்தியில் இருந்த பாரசீகம், உருது மொழிகள் அகற்றப்பட்டு தூய வடிவ சமஸ்கிருதம் மொழியுடன் கூடிய இந்தியை உருவாக்கினார்கள். காந்தி பேசிய இந்தி கீழ் இந்தி வகையைச் சேர்ந்தது. 
இன்றைக்கு நாம் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். இந்தியை இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணித்ததில் பண்டித நேரு அவர்களுக்கு இருந்த நோக்கமும், இன்றைக்கு மோடி அரசுக்கு இருக்கும் நோக்கமும் வேறு , வேறு. நேரு காலத்தில் அவர் கடிபோலி மொழியை முன்மொழிந்தார். இந்தி என்கிற ஒற்றை நூழிலையின் வாயிலாக இந்திய மாநிலங்களை கோர்த்துவிடலாம் என நினைத்தார். அவரது கனவு மெல்ல நிறைவேறிக்கொண்டு இருந்தன. வட சென்னைக்கு வடக்கு இந்தி தன் ஆளுமையைக் காட்டத் தொடங்கியிருக்கிறது. ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களில் இந்தி பரவலாக பேசப்படும் மொழியாகியிருக்கிறது. ஆனால் அவர்கள் பேசுவது கடிபோலி இந்தி. அவற்றை முறியடித்து தேவநாகரி இந்தியை விதைக்கும் வேலையில் இன்றைய மோடி அரசு செயல்படுத்த நினைக்கிறது. 
இந்தி எதிரிப்புக்கு விதை இட்டது அன்றைய மருத்துவ படிப்புதான். 1937 ஆம் ஆண்டு காங்கிரசு அமைத்த முதல் அரசாங்கத்தில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க திட்டமிட்டது. வட நாட்டு காங்கிரஸ்க்காரர்களை திருப்திப் படுத்த இந்த கொள்கை முடிவு அவர்களுக்கு தேவையென இருந்தது. 
சென்னை மாநிலத் தமிழர் மாநாடு திருச்சியில் டிசம்பர் 26 - 1937  நாளன்று கூடியது. கி. ஆ.பெ. விசுவாதம் செயலளராகவும், பசுமலை பேராசிரியர் ச. சோமசுந்தர பாரதியார் மாநாட்டு தலைவராகவும் இருந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ‘இந்திக்கு எதிரான முதல் மாநாட்டு தீர்மானமாகும்.’
இந்தி தமிழ்நாட்டிலிருந்து பின்வாங்கப்பட்டதற்கு இரண்டாம் உலகப்போரும் காரணமாக இருந்தது என்பது வியக்கத்தக்க ஒன்று. அன்றைய ஆளும் காங்கிரசு அரசு 21.04.1938 ஆம் நாள் ஆணைப்படி தமிழகத்தில் 60 பள்ளிகள், ஆந்திரத்தில் 54, கன்னட நாட்டில் 4, கேரளத்தில் 7 என மொத்தம் 125  பள்ளிகளில் முதல் மூன்று வகுப்புகளுக்கு இந்தி கட்டாய மொழியாகத் திணிக்கப்பட்டது. இந்த ஆணையை எதிர்க்க சென்னை மாநில இந்தி எதிர்ப்பு உரிமை அணையம் என்கிற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி தமிழக அறிஞர்களைக் கொண்டு கிளை அமைப்புகள் அமைத்து இந்தி கற்பிக்கும் பள்ளிகள் முன்பு இந்திக்கு எதிராகப் போராடத் தொடங்கினார்கள். அத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்தி தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஸ்க்காரர்கள் இந்தியா இரண்டாம் உலகப் போரில் கலந்துகொள்கிறது என அறிவித்ததும் ஆங்கிலேயர்களுக்கும் - காங்கிரஸ்காரர்களுக்கும் இடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு மெட்ராஸ் சட்டமன்றத்திலிருந்து விலகிக்கொண்டனர். மாநிலத்தின் நிர்வாகம் ஆளுநர் கைக்கு சென்றது. இக்காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் இந்திக்கு எதிரான போராட்டம் பெரிய அளவில் நடந்தேற போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வரும் பொருட்டு ஆளுநர் இந்தியை தற்போதைக்கு பள்ளியிலிருந்து விலக்கிக்கொள்வதாக அறிவித்தார். 
இந்திய விடுதலைக்கு பிறகு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரின் முதல் அமைச்சரவையில் 20.06.1948 ஆம் நாளன்று அரசாணையில் இந்தி கட்டாயப் பாடமாக ஆணைப் பிறப்பித்தது. இதன் பிறகு இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் கிளர்ந்தெழுந்தது. அப்பொழுது ஓமந்தூர் இராமசாமி பெரியாரை நேரில் அழைத்து சொன்னார் ‘ நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன்...உங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்ளுங்கள்...’ எனக் கேட்டுக்கொண்டும் பெரியார் இந்திக்கு எதிரானப் போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக இல்லை. இந்த போராட்டம் அன்றைய கல்வி அமைச்சராக இருந்த தி.சு. அவினாசிலிங்கம் அவர்களுக்கு எதிரான போராட்டமாக அமைந்ததால் அவினாசிலிங்கம் தன் பதவியை ராஜினாமா செய்ததும் இந்தி இரண்டாவது முறையாக பள்ளியிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டது. 
 அன்றைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத் இந்தி மட்டுமே ஆட்சியாக விளங்கும் என்றும் ஜனவரி- 26 1965 முதல் இந்தி கட்டாய மொழி என்றும்  அறிவிப்பு செய்தார். அதன் பிறகு அவர் தமிழ்நாட்டிற்கு வருகையில் திமுகவினர்களால் அவருக்கு கறுப்புக்கொடி காட்டப்பட்டது. ஹைதரபாத்தில் அவர் பேசுகையில் தமிழர்கள் காட்டிய கறுப்புக்கொடிக்கு பதில் சொல்லும் பொருட்டு‘ இந்தி பேசா மக்களின் இடர்கள் உணர்ச்சிகள் பறக்கணிக்கப் படமாட்டா’ என்று உறுதியளித்தார்.
மூன்றாம் கட்ட எதிர்ப்பு போராட்டம் மிக முக்கியமான எதிர்ப்பு போராட்டமாக அமைந்தது. இந்தி பேசாத மாநிலங்களிலிருந்த ஆங்கிலம் மாற்று மொழியிலிருந்து துணை மொழியாக கீழிறக்கப்பட்டது. பிறகு அது இணை மொழி என்றானது. இதற்கு பிறகு கூடிய திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘ இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள மொழிப்பிரிவின் 17 ஆவது பகுதியை வெளிப்படையாக அறிவித்து விட்டு பொதுக்கூட்டத்தில் கொளுத்துவேன்’ என அறிவித்திருந்தார். அன்றைக்கு முதலமைச்சராக இருந்தவர் மீ. பக்தவத்சலம் அவர்கள். மாணவர்களின் பங்களிப்புடன் கூடிய போராட்டமாக இது மாறியது. பலர் தீக்குளித்தனர். இப்போராட்டம் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கன்னடம், மேற்கு வங்காளம் எனப் பரவியது. இப்போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வரும் பொருட்டு இந்திராகாந்தி இந்தி எதிர்ப்பு மாநிலங்களுக்கு விரைந்து சென்று இந்தியை விலக்கிக்கொள்வதாக உத்திரவாதம் அளித்ததும் மாணவர்களின் போராட்டம் முடிவிற்கு வந்தது. இந்த மாணவர்களின் எழுச்சிதான் திராவிட ஆட்சிக்கு வழிக் கோலியது. 
ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணிப்பதால் ஏற்படும் விளைவுகளை அவ்வபோது உலக நிகழ்வுகள் காட்டிக்கொண்டிருந்தன. ஒன்றுபட்ட பாகிஸ்தான் உருது மொழியை ஆட்சி மொழியாகவும், தேசிய மொழியாகவும் திணிக்க முற்பட்டதன் விளைவுதான்  வங்க மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாக உதயமானது. ஒன்றுபட்ட சோவியத் யூனியனில்  ஒற்றை மொழி மாகாணம் முழுமைக்கும் திணித்தால் நாடு பல நாடுகளாக சிதைந்து போய்விட வாய்ப்புண்டு என்பதை அவர் லெனின், ஸ்டாலின் புரிந்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் மொழி ஆதிக்கம் தலைத்தூக்க அந்நாடு உடையவும் செய்தன. இலங்கையில் முதல் பிரிவினைவாதமே சிங்கள மொழியைத் திணிப்பதில் தொடங்கியது. 
இந்தி திணிப்பு ஆதரவாளர்கள் கேட்கின்ற ஒரு நியாயமான கேள்வி ஒன்றுண்டு. அந்நியர்களின் மொழியான ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் நம் நாட்டின் மொழியான இந்தியை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது...? 
இந்தியாவை ஆங்கிலேயர்கள் மட்டும் ஆளவில்லை.ஒரு பகுதியை ப்ரெஞ்சுக்காரர்களும் ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளில் ப்ரெஞ்சு மொழி தழைக்காமல் ஆங்கிலம் ஆழமாகக் கால் ஊன்ற காரணம் என்ன...? காஷ்மீரை ஆங்கிலேயர்கள் ஆளவில்லை. ஆனால் அங்குள்ள மக்கள் ஆங்கிலம் விரும்பிக் கற்றுக்கொள்ளவும், பேசவும் செய்வதற்கானக் காரணம் என்ன...?. இன்றைய உலகம் அரசியல், மருத்துவம் என்கிற இரண்டு அச்சுகளில் இயங்கக்கூடியது. அரசியல் கிரேக்கச் சொற்களாலும், மருத்துவம் இலத்தீன் சொற்களாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு மொழிகளையும் உள்வாங்கி உருவான மொழி ஆங்கிலம். ஆகவே ஆங்கிலத்தின் தேவை உலகத்தின் தேவையென இருக்கிறது. 
‘இந்தியிலும் ஆங்கிலத்திற்கு நிகரான கலைச்சொற்கள் இருக்கின்றன’ எனச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். ‘இருக்கினறன என்பதை விடவும் இருந்தது’ என்பதே சரியானப் பதமாக இருக்க முடியும். கிரேக்க, இலத்தீன் மொழிகளுக்கு நிகரான மொழிகளாக இருந்த அன்றைய மொழிகள் பாரசீகம் மற்றும் உருது. இவ்விரு மொழிகளும் சமஸ்கிருதத்துடன் இணைந்து உருவான மொழிதான் இந்தி. ஆனால் இன்றைக்கு இந்தி ஆதிக்கவாதிகளால் திணிக்கப்படும்  தேவநாகரி என்கிற இந்தி உருது, பாரசீகம் நீக்கப்பட்ட இந்தி. அதாவது சமஸ்கிருத இந்தி. இந்த இந்தி வேதம் படிக்கவும் இந்து அடைப்படையிலான சட்டத்தர்மங்கள் பேசவும் மட்டுமே பயன்படுமே ஒழிய உலக அரசியலுக்கும் உலக மருத்துவத்திற்கும் உதவாத மொழி அது. இன்னும் சொல்லப்போனால் ஒப்பீட்டு அளவில் மருத்துவம் மற்றும் அரசியலுக்கு தமிழில் இருக்கும் கலைச்சொற்கள் தேவநாகரி இந்தியில் கிடையாது. இம்மொழியை யாரும் கற்றுக்கொள்ள தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை. அவரரவர் தேவைச்சேர்ந்து பிறதொரு மொழியைக் கற்றுக்கொள்ளவும், பேசவும் செய்கிறார்கள். அதிலென்று இந்தி மொழியாகவும் இருக்கிறது. அம்மொழியை கட்டாய மொழியாக திணிக்கையில்தான் அதற்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு உள்ளாகியிருக்கிறது. 
இக்கட்டுரையின் வாயிலாக கடைசியில் ஒரே ஒரு கேள்வி. இராமர் ஆட்சியை அமைத்துகொண்டிருக்கும் இன்றைய மத்திய அரசு இராமன் - சீதை பேசிய மொழியாகப் பாவிக்கப்படும் மைதிலி மொழியை தேசிய மொழியாக்க முயற்சிக்காமல் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேவநாகரி இந்தியை கடை விரிப்பதன் பின்னணி என்ன...?