திங்கள், 24 ஜூலை, 2017

நெகிழிச்சோறு

ஆயக் கலை அறுபத்து நான்கில் முதன்மையானக் கலை சமையல் கலை. பிளாஸ்டிக் அரிசி சந்தைக்கு வந்திருக்கிறது என்கிற புரளியைத் தொடர்ந்து பிளாஸ்டிக் அரிசியைச் சமைத்து சோறு ஆக்குதல் அறுபத்து ஐந்தாவது கலையாகி இருக்கிறது. இதுநாள் வரைக்கும் அறுபத்து ஐந்தாவது கலையாக இருந்த கணினி கலை அறுபத்து ஆறாவது கலையை நோக்கி தள்ளப்படுகிறது.

பிளாஸ்டிக் அரிசியை சீனாவின் கொடை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியா சீனா இரண்டு நாடுகளுக்கு இடையேயான பகைமை பிளாஸ்டிக் அரிசியை இந்தியாவிற்குள் அனுமதிப்பதன் வாயிலாக முடிவிற்கு வருகிறது. இனி இந்தியாவின் ஒற்றை மொழி இந்தி , ஒற்றை மதம் இந்து , ஒற்றை உணவு பிளாஸ்டிக் சோறு....இந்த வரிசையில் இந்தியாவின் ஒற்றை எதிரி பாகிஸ்தான்.

உலகின் முதல் மாற்று அறுவைச் சிகிச்சை மனிதத் தலையிடத்தில்  யானையின் தலையைப் பொறுத்திய அறுவை சிகிச்சைதான் என உலகிற்கு பறைசாற்றிய நம்  விஞ்ஞானிகள் இன்னொரு கண்டுப்பிடிப்பை கண்டறிந்துள்ளனர். அது மணிமேகலை காப்பியக் காலத்து யானை பசியுடைய காயசாண்டிகை கடைசியில்  பசியாறியது இந்த பிளாஸ்டிக் அரிசி சோற்றில்தான். அத்துடன் அவள் அட்சயப்பாத்திரத்தில் சமைத்து எடுத்து பசியினால் வாடும் ஏழைகளுக்கு  பரிமாறியது இந்த அரிசி சோற்றைத்தான்.  வட நாட்டிலிருந்த வந்த ஒரு முனிவரின் வயிற்றுப் பசியை ஒரு  ஏழைத் தாய் ஒற்றை பருக்கையினால் பசி ஆற்றினாள் இல்லையா...அச்சோறு இதே பிளாஸ்டிக் அரிசி சோறுதான். 

இன்றைய தேசப்பற்று மிக்கவர்களிடம் மற்றொரு சந்தேகம் எழுந்துள்ளது அது மகாத்மா காந்தி தொடர் உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முன் இந்த பிளாஸ்டிக் அரிசி சோற்றை தின்றுவிட்டு போராட்டத்தைத் தொடங்கியிருக்கலாம் என்கிற சந்தேகம் அது.  இச்சந்தேகம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கிராமப் புற அங்காடிகளில்  அவ்வகை அரிசி குறைந்த விலைக்கு விநியோகம் செய்ய வாய்ப்புண்டு. 

ஒரு கிலோ பிளாஸ்டிக் அரிசி வாங்கினால் அதன் எடை ஒரு கிலோவும் அதன் நிறை இரண்டு கிலோ அளவிற்கும் இருக்கும். சர்க்கரை வியாதிகளை முழுமையாகக் கட்டுப்படுத்தும் இந்த அரிசி  தமிழக விவசாயிகளுடன் காணப்படும் தொப்பையையும் கொழுப்பையும் குறைக்கவல்லது. பசி என்றும் பட்டினி என்றும் செத்து மடியும் விவசாயிகளுக்கு ஒரே வரப்பிரசாதம் இப்பிளாஸ்டிக் அரிசிதான். 

பிளாஸ்டிக் அரிசி சமையல் குறிப்பு தேசப் பற்று மிக்கவர்களால் முதலில் தெய்வீக மொழியான சமஸ்கிருதம் மொழியில் இயற்றப்பட்டது. பிறகு அது தேவர்களின் மொழியான தேவநாகரி இந்திக்கு பகிரப்பட்டது. தற்பொழுது போனால் போகிறதென்று தென் இந்திய மொழிகளில் நீச மொழியான தமிழ் மொழியில் தரப்படுகிறது. 

 பிளாஸ்டிக் சோறு சமைத்தலுக்கு பிளாஸ்டிக் அரிசி தேவை. உங்களிடம் இருப்பது பிளாஸ்டிக் அரிசிதானா என்பதை முதலில்  உறுதிப்படுத்திக்கொள்ளவும். இவ்வரசி தற்போது  பாகிஸ்தான் வழியில் வரத்தொடங்கியிருப்பதால் அரிசியை வாங்கும் பொழுது சீன பிளாஸ்டிக் அரிசிதானா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

 பிளாஸ்டிக் அரிசி வெண்மையானது. அதன் நிறம்  நூலைப் போன்றிருக்கும். இந்த அரிசிக்கும் கறுப்புக்கும் ஆகவே  ஆகாது என்பதால் நீங்கள் சமைக்க இருக்கும் அரிசி பிளாஸ்டிக் அரிசிதானா என்பதை மீண்டுமொரு முறை  உறுதிச்செய்துகொள்ளவும். அப்படியும் உங்களுக்கு சந்தேகம் வரும்படியாக இருந்தால் இந்த அரிசியை  ஒரு கைப்பிடி அளவிற்கு அள்ளி கீழ்த்தஞ்சைப் பகுதியில் விளையும் கல்சர் , பொன்னி அரசியுடன் கலந்து பார்க்கவும். இரண்டும் ஒன்றோடொன்று கலக்கவில்லை என்றால் சந்தேகமே வேண்டாம். நீங்கள் சமைக்க இருப்பது உலகத் தரம் வாய்ந்த பிளாஸ்டிக்  அரிசிதான். பிளாஸ்டிக் அரிசி  பார்க்க கங்கை மணல் போல தகதகவென இருக்கும்.

அரிசியை கழுவுதல் கூடாது. கழுவினால் அதன் சாயம் அதாவது அதன் குணாம்சம் வெளுத்துவிட வாய்ப்புண்டு. இவ்வரிசியில் கல் ,குறுணை இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் புடைக்க வேண்டியதில்லை. 

முதலில் எரிவாயு அடுப்பை மூட்டிக்கொள்ளவும். சமைப்பதற்கு முன்பு நன்கு சோப்புத் தேய்த்து குளித்திருக்க வேண்டும். உங்கள் கவிச்சி அரிசியின் மீது படாமல் இருக்க சென்ட் அடித்துகொள்வது சிறந்தது. தலை சீவி நெற்றியில் பொட்டு வைத்துகொள்ள வேண்டும்.  காவி உடுத்திக்கொண்டு சமைத்தால் சோற்றின் சுவை சற்று கூட வாய்ப்புண்டு. இதைவிடவும் முக்கியமான ஒன்றை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் சமைக்க இருக்கும் அரிசி பாய்க்கடைகளில் வாங்கியிருத்தல் கூடாது.

முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைக்க வேண்டும். வைக்கும் பொழுது எதாவது ஒரு மந்திரத்தை உரக்கச் சொல்ல வேண்டும். பாத்திரத்தில்  தண்ணீரை ஊற்ற வேண்டும். அத்தண்ணீர் கங்கை நீராகவே இருக்க வேண்டும். உங்களிடம் கங்கை நீர் இல்லையென்றால் நீங்கள் சமைக்க எடுத்துகொண்ட தண்ணீரில் உங்கள வீட்டிற்கு அருகாமையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் வாங்கிய கோமியத்தில் ஓரிரு சொட்டு இடவும். அவ்வாறு இடுவதன் மூலம்  உங்கள் தண்ணீர் புனிதத் தன்மை அடைந்து விடும்.

சீனாவை இந்த இடத்தில் நாம் பாராட்ட வேண்டும். எதையும் இரண்டாம் தரமாகவே இந்தியாவிற்குள் அனுப்பும் அவர்கள்  இதை மட்டும் முதல் தரமாக அனுப்பியதற்காக. 

நாளுக்கு நாள் சீனா உள்ளிட்ட ஆசியநாடுகளில்  தென் இந்திய உணவான அரிசிக்கும் அதனைக்கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களுக்கும் தொடர்ந்து அதிகரித்து வரும் வரவேற்பால் இப்படியொரு அரசியை தயாரித்து நம்மிடம் அனுப்பி வைத்திருக்கிறார்கள் நம் அண்டை பங்காளியான சீனர்கள்.

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் உலகம் முழுவதும் நூறு ரக அரிசிகள் மரபணு மாற்றம் முறையில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறைந்தது இரண்டாயிரம் வகை ரக அரிசிகள் சந்தைகளில் விற்கப்படுகின்றன. ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கவே செய்கின்றன. கார் அரிசி பசியைத் தணிக்கும். குண்டு சம்பா நா வறட்சியைப் போக்கும்.  குன்றுமணிச்சம்பா வாதக்குறைப்பாடிற்கானது என்றால் நெய்கிச்சி ஆணின் இனப்பெருக்க செல்லான விந்தணுகளை உற்பத்தி செய்யக்கூடியது.

இது தவிர சீரகச் சம்பா , ஈர்க்கு சம்பா , கோடைச் சம்பா , வாடன் , முடுவு , கனர் , நாரை , குழி வெடிச்சான் , அன்னழகி , மாப்பிள்ளை , கருங்குறுவை , கல்லுண்டை , கருடன் சம்பா , சீரகம் , விஷ்ணு யோகம் , பூங்கார் , கிச்சடி , நெய்கிச்சி , பாஸ்மதி , பாட்னா , மசூரி என இப்படி நிறைய அடுக்கிக்கொண்டு போகலாம். 

கோதுமையில் அரிசியை விடவும் உயிர்ச்சத்து அதிகம். ஆனால் ரொட்டி கோதுமை , மக்ரோனி கோதுமையை விடவும் சம்பா கோதுமையின் உற்பத்தி அதிகம் என்றாலும் ரொட்டி கோதுமைதான் ஏழைகளின் பசியை  ஆழ்த்தி வருகிறது.  

டிடிகே 1001 , 1009,1026,1029 புதிய ரகங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இந்த ரகங்கள் வளர்ந்து மகசூல் கொடுக்குமளக்கிற்கு தகவமைப்பை தேசத்தின் காலநிலையும் மண் வகையும் கொண்டிருக்கவிலலை. இதனால்  சீனா உட்பட  உலக நாடுகள் முழுவதும் பல்வேறு ரகத்திலும் பல விலைகளிலும் கிடைக்கும்  அரிசிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. இதனால் சீன சந்தைகளில் சீன கோதுமைகளின் விலைகள் இறங்குமுகம் கண்டது. கோதுமையின் வீழ்ச்சியை மீட்டெடுக்கவும் அரிசியின் மோகத்தைத் தணிக்கவும் அவர்கள் அத்தனை சிரத்தை எடுத்து பிளாஸ்டிக் அரிசியைக் கண்டுபிடித்துள்ளனர்.

 சரி சமையல் குறிப்பிற்கு வருவோம். நீங்கள் சமைக்கும் பாத்திரம் மண் பானையாக இருத்தல் கூடாது. மண் பானையின் மண் கீழடி மண்ணாக இருந்துவிட வாய்ப்புண்டு. ஆகவே  பிளாஸ்டிக் பானையில்  நீங்கள் சமைக்கலாம். பாத்திரத்தில் சாம்பல் அல்லது விபூதி  பூசியிருக்க வேண்டும். ஓரிரு இடத்தில் பொட்டு வைத்திருக்க வேண்டும்.

தண்ணீரை கொதிக்க விடுதல் கூடாது. தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடுவது நல்லது. தெர்மாகோல் இல்லையென்றால் தாம்பூலம் கொண்டு மூடவும்.

தண்ணீர் ஆவியாகும் போது அரிசியை உலையில் கொட்டவும். கொட்டும் பொழுது அரிசி கீழே சிந்துதல் கூடாது. ஒரு வேளை சிந்தினால் கட்டை மற்றும் மோதிர விரல்களால் எடுத்து விபூதி கொடுப்பதைப்போல உலையில் போடவும். உலையில் அரிசியைக் கொட்டுகையில்  கைகளை கும்பிடுவதைப் போலக் குவித்து மெதுவாகக் கொட்ட வேண்டும்.  இப்பொழுது பானையை தாம்பூலம் கொண்டு மூடி பானையை தடவி கும்பிட்டுக்கொள்ள வேண்டும்.

அடுப்பை எரித்தல் இந்த இடத்தில் முக்கியமானது. அடுப்பு ஏனோ தானோ என்று எரிதல் கூடாது. தகதகவென எரிய வேண்டும் குஜராத் எரிந்ததைப் போல. இந்திய சுதந்திரத்தின் போது பஞ்சாப் எரிந்ததைப்போலவும் எரியலாம். குறைந்தப்பட்சம்  சேசு சமுத்திரத்தில் குடிசைகள் எரிந்த அளவிற்காகவாவது அடுப்பு எரிய வேண்டும்.

அரிசி வேகும் பொழுதே அதில் உப்பை போட வேண்டும். கங்கை நீரில் சமைப்பவர்களுக்குத் தான் இது பொருந்தும். காவிரி ,வைகை, தாமிரபரணி தண்ணீரில் சமைப்பவர்களுக்கு உப்பு தேவையில்லை. உலை வைக்கும் பொழுது தண்ணீரில தெளித்த கோமியம் போதுமானது.

அடுப்பை அமரால் தொடர்ந்து எரிக்க வேண்டும். ஒரு வேளை அடுப்பு அமருமானால்  மதத்தைத் தூண்டுவதைப்போல தூண்டிவிட வேண்டும். அப்படியாகத் தூண்டினால் மட்டும்தான் இந்த அரிசி வேகும்.

ஒரு ஆப்பையைக் கொண்டு அரிசியை திராவக வேண்டும். அரிசி போராட்டக்காரர்கள் குதிப்பதைப் போல குதிக்கச்செய்யும். அவ்வாறு குதித்தால் அரிசி வெளியே குதித்து விடாமல் பார்த்துகொள்வது அவசியம். ஒரு வேளை அரிசி தவறி அடுப்பிற்குள் விழுந்துவிட்டால் உருகும் வாசணை வரக்கூடும். இதனை சுவாசிப்பதனால் கேன்சர் மூச்சுத்திணறல் வர வாய்ப்புண்டு . நம் தேசத்தின் தேசிய நோய் பசி. மக்கள் பசியினால் மட்டுமே சாக வேண்டும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

பிளாஸ்டிக் அரிசியின் வரவு தேசத்தின் வளர்ச்சியைத் திருப்பி போடும்படியாக இருக்கிறது. ஆதார் எண்கள் ஸ்மார்ட் கார்டு உடன் முழுமையாக இணைக்கப்பட்டதன் பிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருபது கிலோ , முப்பத்து ஐந்து கிலோ அரிசி கொடுக்க வேண்டியதில்லை. மாதத்திற்கு இரண்டு கிலோ போதுமானது. தென் இந்தியாவில்  இனி யாரும் நெல் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி  உண்ணாவிரதம் இருக்க முடியாது. பிளாஸ்டிக் சோறு சாப்பிட்டு உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என முத்திரைக் கொத்தி போராட்டத்தை நீர்த்துப் போக செய்துவிடலாம்.

இந்த அரிசியில வேகும் சோற்றில் சைவ குழம்புகள் மட்டுமே ஊற்றி சாப்பிட வேண்டும். மாட்டு இறைச்சி குழம்பு கூடவே கூடாது.

வேகும் அரிசியைத் தொடர்ந்து கிளறிவிட வேண்டும். தண்ணீர் குறையக் குறைய ஊற்றிக்கொண்டிருக்க வேண்டும். பானையை உடனே இறக்கிவிடுதல் கூடாது. இவ்வரசி முழுமையாக வெந்து முடிய சரியாக ஐந்து வருடங்கள் பிடிக்கும். நீங்கள் அடுப்பில் உலையை வைத்து எத்தனை நாட்கள், வாரங்கள் ,மாதங்கள் ,ஆண்டுகள் ஆகிருக்கின்றன என்பதைக் கணக்கில் கொண்டு தொடர்ந்து அடுப்பை எரியூட்டச் செய்யவும்.

ஐந்தாம் வருடத்தின் முடிவில் நீங்கள் பசியோடு இருப்பீர்கள். இத்தனை நாட்களின் பசியால்  உங்கள் முகம் உங்களையும் அறியாமல் சிவந்துபோயிருக்கும். அப்பொழுது பானையை  நீங்கள் அடுப்பிலிருந்து இறக்குவீர்கள். இச்சமையல் குறிப்பின் மிக முக்கியமானது  பானையை அடுப்பிலிருந்து இறக்குவதுதான்.

இப்பொழுது உங்களுக்கான சோறு தயார்.  இதற்குப்பிறகு நீங்கள் சோற்றை தட்டில் கொட்டி ஆற வைப்பீர்கள். இதமான சூட்டுடன் அதை அள்ளும் நீங்கள் அதை வாய்க்கு கொண்டுச்செல்லாமல் அதை ஒரு கணம் நுகர்ந்து பார்க்கச் செய்வீர்கள். அப்பொழுதும் அச்சோறு உங்களைப் போலவே நொந்து குழைந்து அரிசியாகவே இருக்கும்.  இப்பொழுது இந்த அரிசியை நீங்கள் சாப்பிடுவீர்களாயின் உங்களுக்கு நீங்களே போட்டுக்கொள்ளும் வாய்க்கு அரிசி. அதை பத்திரப்படுத்திக்கொள்வீர்களாயின் 
அது வேறொருவருக்கான வாய்க்கு அரிசி.

வியாழன், 20 ஜூலை, 2017

பானை

பானை - இரா. முருகன்.

1997 ல் கணையாழி இதழில் பிரசுரமான இக்கதை நடுநிசியில் ஒரு பேய்ப்படத்தை பார்த்த திருப்தியைக் கொடுத்தது.
மூக்குப்பொடி கடை நடத்தும் ஒரு குடும்பம் ஓட்டல்கடை நடத்துகிறது. வீட்டின் மேல்மாடி எப்பொழுதும் சாத்தப்பட்டிருக்கிறது. அதில் தாத்தாவின் அம்மா இறந்தும் ஆவியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என அக்குடும்பம் நினைக்கிறது. அதற்கான சமிஞ்கை அவ்வபோது தென்படுகிறது.
ஓட்டல் கடை வைத்ததற்கு பிறகு பலரும் கடைக்கு வருகிறார்கள். கிளார்க் மீது கடை நடத்தும் ரெங்கமாளுக்கு கள்ளத்தொடர்பு ஏற்படுகிறது. கணவனுக்கு தெரியாமல்  அவனுடன் அவள் மேல் வீட்டில் கூடுகிறாள்.
ஒரு நாள் உருவமற்ற பெரியம்மா என்கிற ஆவி அவளுடன் சண்டைப்பிடிக்கிறது. அவளது செய்கைகளைச் சுட்டிக்காட்டுகிறது. அவளை கிணற்றடிக்கு அழைத்துச்சென்று ஆள் மயக்கும் நீண்ட கூந்தலை அறுக்கிறது. இத்தனையும் அவளது கணவன் இறந்த பதினைந்தாம் நாள் நடக்கிறது. கடைசியில் நடுநிசியில் மாடிப்படியேறும் அவள் அந்த ஆவி இருப்பதாக கருதும் பானை உடைத்து கிணற்றுக்குள் எறிந்து கதறி அழுகிறாள் ரெங்கம்மாள்.
ஒரு ஆவியைக் கொள்வதை உண்மையில் ஒரு மனிதனைக்கொன்ற குற்ற உணர்வாக அவளது அழுகை இருக்கிறது என்பதுதான்  இக்கதையின் சிறப்பு...

செவ்வாய், 18 ஜூலை, 2017

போர்க்கால கதைகள்
தொகுப்பு -தி.ஞானசேகரன்
ஈழப்போர் ஏற்படுத்திய பல்லேறு அனர்த்தங்களை இக்கதைகள் பேசியிருக்கின்றன. இத்தொகுப்பில்
ஒற்றைக்கூவல் - டிலான் ஜெயந்தன், பிறந்த மண் - ராணிசீதரன், காட்டுப்பூனைகளும் பச்சைக்கிளிகளும் - தி.ஞானசேகரன், இடிபாடுகள் - செ.கந்தசாமி, ஒரு பிடி சோறு - ஓ.கே.குணநாதன், அடையாளம் - தாமரைச்செல்வி, பழுதி- சுதர்மமகாராஜன்,கடற்குருவிகள்- குமுதினி கலையழகன்,நாம் யார் - முல்லையூரான்,அது உடைந்து விடக் கூடாது - யோகேஸ்வரி சிவப்பிரகாசம், தொலையும் பொக்கிசங்கள் - இராஜேஸ்கண்ணன்,அலைகடல் தாண்டி- செங்கை ஆழியான், இன்பம் எங்கே - ச. முருகானந்தம் , பொட்டு - வே. சுப்பிரமணியம், காணாமல் போனவனுக்கு ஒரு கடிதம் - தாட்சாயணி, சந்தேகக் கைதிகள் - கே.விஜயன் ,இத்து வரும் சுமைதாங்கிகள் - இராமு சரவணமுத்து ,மணல் - நீரங்க விக்ரசிங்ஹ, யாரிடம் நோவேன்?- சந்திரகாந்த முருகானந்தன் , ஆத்மவிசாரம் - அ.ச.பாய்வா ஆகிய கதைகளின் தொகுப்பாக இக்கதைத்தொகுப்பு வந்திருக்கிறது. மித்ர வெளியீடு.

இக்கதைகள் யாவும் ஞானம் இதழில் பிரசுரமானக் கதைகளாக இருக்கிறது. கண்ணப்ப நாயனார் தான் சமைத்து சுவைத்த கறிகளில் நல்லக் கறிகளை சிவனுக்கு படைத்ததைப்போல தொகுப்பாசிரியர் முதல் ஐம்பது இதழ்களின்  கதைகளில் தேர்ந்தக் கதைகளைத் தொகுத்துள்ளார். தொகுப்பாசிரியர் முன்னுரையில் சொல்லியிருப்பதைப் போல தமிழில் வெளிவந்திருக்கும் தொகுப்புகளில் சிறந்த சிறுகதைத் தொகுப்பு இத்தொகுப்புதான் என்பதில மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதே நேரம் இக்கதைகள் யாவும் ஒருவரின் கதைகளாக இருந்திருக்குமாயின் இத்தொகுப்பு இன்னும் சற்று கூடுதல் கவனத்தை பெறும்...

இத்தொகுப்பில் காட்டுப்பூனைகளும் பச்சைக்கிளிகளும்  என்கிற சிறுகதை சொல்லப்பட்டிருக்கும் விதத்தால் கவனம் பெறுகிறது. பள்ளிக்கு செல்லும் ஒரு தமிழ் மாணவியை ஒரு சிங்களவன் காமப்பசியாறுவதை வீட்டில் வளர்க்கும் ஒரு பச்சைக்கிளியை ஒரு காட்டுப்பூனை கடிச்சுக்குதறுவதுடன் ஒப்பிட்டு கதையாக்கம் செய்யப்பட்டிருக்கும் விதம் புதுமையானது. இக்கதையில் வரும் மியாவ்....பச்சைக்கிளியோடு நம்மை பதைக்க வைக்கிறது.


சித்தி - மா. அரங்கநாதன்

சித்தி என்கிற தலைப்பை படித்ததும் அது சித்தி பற்றிய கதை என்று நினைத்துவிட்டேன். இக்கதையில் சித்தி என்பது ' அதுவாகவே ஆகுதல்'.

இக்கதை தனித்துவமாக எழுதப்பட்டிருக்கவில்லை. ஆனால்  கதை சொல்லி நிறுத்தும் செய்தி தத்துவத்துவமானது.

ஒரு இளைஞன் எந்நேரமும் ஓடுபவனாக இருக்கிறான். அவனது ஓட்டத்தைக் கண்டு பிரமிக்கும் ஒருவர் அவனிடம ஒரு முகவரியைக் கொடுத்து ஒரு பெரியவரிடம் அனுப்பி  வைக்கிறார். பெரியவர் முன்னாள் தடகள வீரர். இவனை வைத்து ஒலிம்பிக் பதக்கம் பெற்றுவிட வேண்டும் என நினைத்து பயிற்சி கொடுக்கிறார். தகுதி பெறுகிறான் அவன். பத்திரிகையாளர் பேட்டி எடுக்கிறார்கள். பதக்கம் பெற்றுவிடுவீர்களா....உங்களால் நாடு பெருமையடையுமா....
எல்லா கேள்விக்கும் அவன் 'எனக்கு ஓட்டம் பிடித்தமான ஒன்று...' என்றே சொல்லி வருகிறான். பயிற்சியாளர் அதிருப்தி அடைக்கிறார்.

பயிற்சியாளரிடம் அவன், எனக்கு நிலவின் மீது ஓட ஆசை. இப்போதைக்கு அதோ அந்த மலையின் உச்சிக்கு ஓட ஆசை.....என தன் ஆசையைத் தெரிவிக்கிறான். அதற்கு அந்த பயிற்சியாளர் சொல்கிறார் ' ஆம்...ஓடு...ஓடிப்போய் உச்சியிலிருந்து குதித்து செத்துப்போ...' என்கிறார்.

 இக்கதை சொல்லவரும் செய்தி ஒன்றுதான். அவன் ஓட்டத்தை ஓட்டமாக பார்க்கிறான். பெரியவர் ஓட்டத்தில் ஒலிம்பிக் பதக்கத்தைப் பார்ககிறார்..