வியாழன், 24 நவம்பர், 2016

டி.வி.ஆர் நினைவுச்சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை

ஆணி வேரும் சில சல்லிகளும்.....
      தன் குஞ்சுகள் மொத்தத்தையும் பருந்திற்கு கொடுத்துவிட்டு பரிதாபமாக நிற்குமே கோழி அப்படியாகத்தான் அந்த வேப்பமரம் நின்றுகொண்டிருந்தது. அம்மரத்தின் மொத்த இலைகளும் பழுத்து, கருகி, உதிர்ந்துபோயிருந்தன. மரக்கிளைகள் கவிழ்ந்து தானாகவே ஒடிந்து அந்தரத்தில் தொங்கின. பித்த வெடிப்புகளைப்போல் வேர் வெடிப்புகள். தண்டுகள் பட்டைப்பட்டைகளாகத் தெரித்து உதிர்ந்துகொண்டிருந்தன. மரமெங்கும் கரையான்கள். சுள்ளெரும்புகள், சூவைகள்.
      எப்படி இருந்த மரமிது! ஊரின் பெரிய  வேப்பமரம் இதுதான். குடை ராட்டினம் போல நாலாபுறமும் கிளைப்பரப்பி கவிழ்ந்திருக்கும். சாணம் தெளித்ததைப்போல நிழல்கள் சொட்டைச் சொட்டையாக. சிலு..சிலு...வென இதமாகக் காற்று வீசிக்கொண்டிருக்கும். ஒரு குட்டி சோலைவனம் அது. பொழுது விடிந்தால், இருட்டினால் போதும். பறவைகளின் குதூகலத்தால் மரம் ஆர்ப்பரிக்கும்.
      ‘ கீக்...கீக்...கீக்....’
      ‘ கொக்...கொக்...கொக்....’
      ‘ கிரீச்...கிரீச்....’
     
மரத்தில் காய்த்துத் தொங்கும் வேப்பங்காய்களை எண்ணிவிடலாம். பறவைகளை எண்ணமுடியாது. கூட்டம் கூட்டமாகப் பறவைகள். சரம் சரமாக வண்ணத்துப்பூச்சிகள்.
       மரத்தின் உச்சி காக்கைகளுக்கு. கிளைப்பரப்பு குருவிகளுக்கு. தண்டும், பொந்துகளும் அணிற்பிள்ளைகளுக்கு. ஐந்தறிவு சமுதாயத்தின் உறைவிடமாக இம்மரம் இருந்தது. மரத்தின் உச்சியில் நான்கைந்து காக்கைகள் கூடுகட்டியிருக்கும். இப்பொழுது அக்கூடுகள் இல்லை. இரவு நேரங்களில் மின்மினிப்பூச்சிகள் ஆலவட்டமடிக்கும். அவைகள் போனத்திசை தெரியவில்லை. பட்சிகளின் வீடுகளாக இருந்த மரத்தில் இப்பொழுது உட்காருவது ஆந்தையும், பருந்தும்தான். என்ன நடந்து விட்டது இம்மரத்திற்கு....? யார் செய்த வினை இது...? யார் கண் பட்டதோ....?
      இம்மரத்தை ஏறிட்டுப்பார்த்த அப்பத்தாள் சொன்னாள் ‘ மரதிற்கு உசிரு இல்ல. பட்டுப்போயிருச்சு...’. அப்படிச்சொல்கையில் அவளுடைய கண்கள் குளமாக இருந்தன. தாத்தா ‘கொல்’லெனச் சிரித்தார். அப்பத்தாளின் முகத்தில் அறைவதைப்போல அவரது சிரிப்பு இருந்தது. ‘ அடியே.....அசடு...அசடு.....உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு....ம்.....? இலயுதிர் காலமடி இது.....ஒரு மாசம் கழிச்சுப்பாரு. உதிர்ந்த அத்தன இலயும் துளிர்த்திருக்கும்....’ தாத்தா இதை அவருக்கே உரித்தான மேதாவித்தனத்தில் கேலியும், கிண்டலும் கலந்து சொல்லியிருந்தார். சொல்லவாச் செய்தார். அப்பத்தாள் தலையில் ‘நங்’கென ஒரு கொட்டு கொட்டச்செய்தார்.
      ‘ என்ன மனிசனோ நீங்க....இது கூடவா நான் தெரியாம இருப்பேன். கொழி பொரிக்காம விட்ட கூமுட்டயைப் போலல்ல என்னை நீங்க நினைச்சிட்டீங்க.....நான் பிள்ளையா நினைச்சு வளர்த்தெடுத்த மரமுங்க இது....நீங்க இந்த எடத்தில ஒரு குழியத் தோண்டி ஒரு வேப்பமரக்கன்ன வச்சத்தோடு சரி. இதுக்கு நான் வேலிக்கட்டி, தண்ணீ ஊத்தி, வேண்டாத கிளைகளை வெட்டி வளர்த்தெடுத்த எனக்குத் தெரியாதா....இது எப்ப இலயக் கொட்டும். பூ பூக்கும்... காய்க்கும்...பழுக்குமென.....?. வேர்ல உசிரு இல்ல... மரம் செத்துப்போச்சு...’
      அப்பத்தாள் வார்த்தைகளுக்கிடையில் அப்பா முரட்டுத்தனமாக நுழைந்தார். அப்பா எப்பொழுதும் ‘தாம்...தூம்’ பேர்வழி. அதுவும் அப்பத்தாளிடம் பேசுகையில் விறகுக்கட்டைகளை உடைப்பதைப்போலதான் பேசுவார். ‘ என்னம்மா நீ....உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு... வருசா வருசம் கொட்டுற இலயத் தானே கொட்டிட்டு நிற்கிது. மரம் செத்துப்போச்சு, செத்துப்போச்சுனு மூச்சுக்கு முன்னூறு தடவச் சொல்ற.....வாழுற வீட்ல வயசானவ இப்படியாப் பேசுவா... அபசக்குணமா....? வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்டே நீ.....’ அப்பா தொண்டை அதிரக் கத்தியதும் அப்பத்தாள் திறந்திருந்த வாயை ‘சட்’டென மூடிக்கொண்டாள்.
      அடுத்து அம்மா அவள் பங்கிற்கு, ‘அத்தே....மரம் நல்லாதான் நிற்குது....உங்க கண்ணுதான் சரியில்ல....எந்நேரமும் அதெயே சொல்லிக்கிட்டு இருக்காமே....கம்மென இருங்க....’ சொன்னதோடு பாத்திரத்தைத் தரையில் ‘நங்’கென்று வைத்தாள். அவள் சொல்லாமல் விட்ட மிச்ச, சொச்சத்தை அவள் வைத்த பாத்திரம் சொன்னது.
      தாத்தா, அப்பா, அம்மா மூன்று பேருக்கும் பதில் சொல்லியாக வேண்டிய நிலைக்கு அப்பத்தாள் உள்ளாகி இருந்தாள். முகத்தை ‘உம்’மென வைத்துகொண்டு சுருக்குப்பையை எடுத்து விலக்கி அதற்குள் சுண்ணாம்புப் புட்டியைத் தேடிக்கொண்டு அப்பாவிடம் சொன்னாள் ‘ஏலேய்....உனக்கு இந்த மரத்தைப்பத்தி என்னடாத் தெரியும்.....நீ வயித்துக்குள்ள இருக்கையில வச்ச கன்னுடா இது. உனக்கு ரெண்டு மாசத்துக்கு மூப்பு இது. எனக்கு மூத்தப்பிள்ள நீ இல்ல. இந்த மரம்தான். இது எப்ப இலைகளக் கொட்டும்....பூக்கும்...காய்க்குமென எனக்குத் தெரியாதா.....? பெரிசா எனக்கு பாடம் கற்பிக்க வந்துட்டே....மரத்துக்கு என்னவோ ஒரு சீக்கு வந்திருக்கு.....எனக்கு வந்திருக்கிற சீக்கோ...என்னவோ....இந்த மரத்தில ஒர நாளைக்கு  எத்தனைப் பட்சிக வந்து உட்காரும்... இப்ப ஆந்தை, பருந்தைத் தவிர வேறெந்த பட்சியும் வருதானுப் பார்த்தீயா....’ என்றவாறு அவள் மரத்தை ஒரு கணம் ஏறிட்டுப்பார்த்தாள். அவளுடன் சேர்ந்து நாங்கள் அத்தனைப்பேரும் பார்த்தோம். மரத்தில் ஓரே ஒரு  ஆந்தை மடடும் உட்கார்ந்துகொண்டு திருட்டு முழி விழித்துக்கொண்டிருந்தது.
      ஓரிரு மாதங்கள் கழித்துப்பார்க்கையில் அப்பத்தாள் சொன்னதுதான் சரியென இருந்தது. உதிர்த்த இலைகள் மறுபடியும் துளிர்க்கவில்லை. திருப்பதிக்கு சென்று வந்த பக்தனைப்போல மரம் மொட்டையடித்து நின்றது. மரம் நாளுக்கு நாள் நலிவடைந்துகொண்டே வந்தது. மொத்தப்பட்டைகளையும் உதிர்த்துவிட்டு அதோகதியில் நின்றது. கரையான்கள் மரத்தில் சாரை சாரையாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தன. மரத்தின் வேர்களில் கட்டெரும்புகளும், சுள்ளான்களும் மொய்த்தன. மரப்பட்டைகளின் வெடிப்புகளுக்குள் பூரான் பூச்சிகள் அடைந்தன.   வீட்டு வாசலின் வலது புறம் இம்மரமிருந்தது. அப்பாவை விடவும் இரண்டு மாதங்கள் மூப்பு என்றால் மரத்திற்கு வயது எப்படியும் ஐம்பதிற்கு குறையாது. தாத்தா வெளிக்குப் போன இடத்திலிருந்து ஒரு மரக்கன்றை பிடுங்கி வந்து வாசலில் ஊன்றியிருக்கிறார். அவரது வேலை அத்தோடு சரி. இதை முழுவதுமாக வளர்த்தெடுத்தது அப்பத்தாள்தான். ஆட்டிற்கு தழை, பல் துலக்கக் குச்சி, ஊஞ்சல் கட்டி விளையாட கிளை, கோயில் திருவிழாவின் போது வெப்பங்கொத்து,...என எந்தச் சடங்கிற்கும் அந்த மரத்தை அவள் விட்டுக்கொடுத்ததில்லை.  வேப்பமரமாக இருந்த அம்மரத்தை சாமி மரமாக மாற்றியப் பெருமை அம்மாவையேச் சாரும். அம்மா அப்பாவை திருமணம் செய்துகொண்டு வந்த மறுமாதம் அப்பா வாங்கிவந்த பூச்சரத்தில் ஒரு முழத்தை அம்மரத்தின் ஒரு கிளையில் தொங்கவிட்டிருக்கிறாள். அதன்பிறகு அம்மரம் சாமிமரமாகி விட்டது. பொங்கல், கார்த்திகை தீபம், ஆடி பதினெட்டு, ஆவணி ஞாயிற்றுக்கிழமை, சித்திரை பௌர்ணமி,...என விசேச நாட்கள் வந்தால் அம்மரத்திற்கு எப்படியும் ஒரு முழம் பூ  கிடைத்துவிடும். வேரிடத்தில் ஒரு சொம்பு மஞ்சள் தண்ணீர் தெளிப்பாள். மார்கழி பிறந்தால் வாசலுக்கென கோலம் போடுகிறாளோ இல்லையோ மரத்திற்கென ஒரு ரங்கோலி எப்படியும் போட்டுவிடுவாள். எனக்கு அம்மை நோய் பார்த்திரிக்கையில் அதன் தழைகளை ஒடித்துதான் அப்பத்தாள் எனக்கு வீசி விட்டாள். வெள்ளை வேட்டியை விரித்து அதன் மீது அமம்மரத்தின் வேப்பந்தழைகளை பரப்பி என்னைப் படுக்க வைத்தாள்.
      எங்கள் வீட்டில் நான் உட்பட அம்மரத்தை அழைப்பது சாமி மரம் என்றுதான். ஒருநாள் கோடாங்கி வந்து ‘ வீட்டு வாசலில் மாரியாத்தாள் குடியிருக்கிறாள். நல்ல நாள், கிழமைக்கு அதுக்கு தீபம் ஏத்து...’ எனச் சொல்லிவிட்டுப்போன மறுநாள் முதல் அம்மா வெள்ளி, செவ்வாய்க்கு தவறாது தீபம் ஏற்றவும் தொடங்கிவிட்டிருந்தாள். நான் தேர்வு எழுத போகும் காலங்களில் அதன் வேரிடத்தில் ஒரு சூடம் ஏற்ற நான் மறந்ததில்லை. துக்கத்திற்கு சென்று வரும் அப்பா அந்த மரத்தின் வழியே வரமாட்டார். ஒரு வேளை வந்தால் அம்மா அவரை வசைபாடியே கொன்றுவிடுவாள். வேரிடத்தில் மஞ்சத்தண்ணீர் தெளித்து பாவமன்னிப்பு கேட்கத் தவறமாட்டாள். எப்பொழுதேனும் அப்பா உடல் நலம் குன்றி கட்டிலில் படுத்தால் ‘ அன்னைக்கு சாவு வீட்டுக்குப் போயிட்டு சாமி மரம் வழியா வந்தீங்கள்ல.... அந்தக்குறைதான் இப்ப உங்க குடுமியைப் பிடித்து ஆட்டுது....’.எனக் குத்திக்காட்ட மறக்கமாட்டாள். அப்பா அக்மார்க் நாத்திகவாதி.‘ போடி இவளே....’ எனச் சொல்லி அவளது வாயைச் சட்டெனத் தைத்துவிடுவார்.
      ஒரு நாளிற்கு மூன்று வேளை அம்மரத்திற்கு நாங்கள் தண்ணீர் ஊற்றி வந்தோம். உரமென்ன, எரு என்ன...?  மரம் துளிர்விடுவதாக இல்லை. பசு மாட்டுச்சாணங்களைக் கொண்டுவந்து அம்மா அதன் வேரில் கொட்டினாள். அப்பத்தாள் வெள்ளாடு புழுக்கைகளை பொறுக்கி வந்து வேரிடத்தில் இருக்கும் பொந்துகளின் வழியே கரைத்து ஊற்றினாள். மரத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லை. கிளைகள் ஒவ்வொன்றாக முறிந்து அந்தரத்தில் தொங்கிக்கிடந்தன.
      ‘ சாமி மரம் பட்டுப்போயிருச்சு.....’ என்பதை ஊர்க்காரர்கள் பரவலாகப் பேசத் தொடங்கியிருந்தார்கள். சிலர் ‘ அந்த வீட்டுக்கு என்னவோ ஒரு சோதனைக் காட்டிக்கிட்டு இருக்குது..’ என்றார்கள். சிலர் பொத்தம் பொதுவாக ‘ சாமிக்குத்தம் ’ என்றார்கள்.
      கோடாங்கி ஒரு நாள் இரவு வீட்டு வாசலில் நின்று நாய் குரைப்பிற்கிடையில் சொல்லிவிட்டுப்போனான். ‘ஊருக்குள்ள துஷ்டன் நுழைந்திருக்கிறான். சாமினு நினைச்சு வளர்தெடுத்த மரம் பட்டுப்போயிருக்கு. ஊர்க்குள்ள அடுத்தெடுத்து கெட்டது நடக்கப்போகுது. பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடப்போகுது......’ என வரிசையாக என்னென்னவோ சொல்லி ஊர்க்காரர்களின் மொத்த அமைதியையும் அள்ளிக்கொண்டு போனான். விடிந்ததும் நெல் வாங்க வந்த கோடாங்கியை மறித்துக் கேட்டாள் அப்பத்தாள். ‘ ஊர்க்குள்ள துஷ்டன் நுழைஞ்சதுக்கும் எங்க வீட்டு மரம் பட்டுப்போறதுக்கும் என்ன சம்மந்தம்...?’
      ‘ஊர்ல  மரத்த பணமாப்பார்க்கிறாங்க. விறகாகப்பார்க்கிறாங்க. நிழலாப் பார்க்கிறாங்க. நீங்க மட்டும்தானே தாயீ சாமியாப்பார்க்கிறீங்க....அதனாலதான் அவ்ளோ மரத்தையும் விட்டுட்டு சாமி மரத்தில சோதனைக்காட்டுது...ஊர்ல ஒத்துமை இல்ல... யார்க்கெட்டால் நமக்கென்ன என இருக்குறாங்க. ஊர்க்குள்ள துஷ்டம் நுழைஞ்சு ஒரு வருஷம் ஆகுது.... அதை சாமிமரம் மூலமாகக் காட்டுது....ஊர்சனம் ஒன்னுகூடி அதைத் தடுக்கணுமெனச் சொல்றாள் இந்த ஜக்கம்மா...குடுகுடுகுடு....’
      ‘ இதுக்கு என்ன பரிகாரம் செய்யணும்......?’
      ‘ஊர் ஒத்துமைக்கு வரணும்...அப்பத்தான் துஷ்டனை ஊரைவிட்டு விரட்டலாம்....’
      ‘ இந்த சாமி மரத்த பிழைக்க வைக்க வழி எதுவும் இருக்கா...?’
      ‘ ஊர் ஒத்துமை ஒன்னுதான் வழி.....’
      இதை அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதுதான் அப்பா வீட்டிற்கு வந்தார். வந்ததும் ‘ சாமியாவது...பூதமாவது....ஆயுள் முடிந்து மனுசன் சாகுறான். ஆடு, மாடு சாகுது. அதுபோல இந்த மரமும் சாகுது....இதுல என்ன வேண்டிக்கிடக்கு சாமிக்குத்தம்....’
      குடுகுடுப்பை எடுத்து அவரது பைக்குள் வைக்கப்போன கோடாங்கி அப்பாவைப் பார்த்து சொன்னார் ‘ அப்படியெல்லாம் சொல்லாதீங்க அய்யா. ஜக்கம்மா பொறுக்க மாட்டாள்....’
      ‘ என்ன செய்வாளாம்.....?’
      ‘ ஊர்க்கூடி ஊர்க்குள்ள நுழைஞ்சிருக்கிற துஷ்டத்தக் விரட்டலைன்னா ஊர் விலங்காது. ஒவ்வொருத்தரா சாகுவாங்க. மரங்க அதுவாகவே தீப்பிடிச்சி எரியும். வெள்ளாம்மை விளங்காது. ஊர்க்குள்ள பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்தாடும். தண்ணீகூட நஞ்சாகும்....’
       கோடாங்கி சொன்னதைப்போலவே மறுநாளுக்கும் மறுநாள் நாங்கள் வளர்த்த வீட்டு நாய் செத்துப்போனது. மறுவாரம் அப்பத்தாள் படுத்தப்படுக்கையில் இறந்துக்கிடந்தாள். அவரை அடக்கம் செய்து வந்த மூன்றாம் நாள் வடக்குத்தெரு குமரிமுத்து தோட்டத்தில் ஆழ உழுகையில் பூதம் தாங்கி செத்துப்போனான்.
       ஊர் துக்கத்தில் மிதந்தது. அந்தி சந்தி தெருக்களில் ஆள் நடமாட்டமில்லை. கிழக்குத் தெருக்களில் கோழிக்கழிச்சல் வந்து மொத்தக்கோழிகளையும் வாறிக்கொண்டு போனது. கூடவே மேலத்தெரு சின்னத்தம்பி வீட்டு கோயில்காளையும் வேலுத்தம்பியோட பசு மாடும் கால்களை உதைத்துகொண்டு மாண்டுப்போயின. இதையெல்லாம் விடவும் மரப்பாச்சி தோட்டத்திற்குளிலிருந்த ஆலமரம் தானாகத் தீப்பிடித்து எரிந்தது.
       அப்பத்தாள் இறந்தத் துக்கத்தில் தாத்தா படுத்தப்படுக்கையாகி விட்டார். அம்மா மாமியார் இறந்த துக்கத்தை விடவும் சாமி மரம் பட்டுப்போனத் துக்கம்தான் அவரை பெரிதும் பிடித்து ஆட்டியது. நாத்திகம் பேசிக்கொண்டுத் திரிந்த அப்பா குருசாமியின் ஆலோசனைப்படி ஐயப்பன் சாமிக்கு மாலையிட்டிருந்தார். பெண்கள் சமயப்புரத்தாளுக்கும் இன்னும் சிலர் ஓம் சக்திக்கும் மாலை அணிவித்துக்கொண்டனர். ஊரில் ஒரு வாரக் காலம் பக்தியும் பஜனையுமாக இருந்தது.
       ‘ கடவுளே....ஆத்தா....ஊர்க்குள் பேய், பிசாசு வரக்கூடாது.....ஊர்ல இருக்கிற எல்லாரையும் நல்லப்படியா  வச்சிக்கிறணும்....’ வெள்ளி, செவ்வாய்க்கு சிறப்பு அபிஷேகங்களும் , பஜனைகளும், தீப வழிபாடுகளும் நடந்தேறின.
       ஊருக்குள் பெயர்  கொடுக்காத ஒரு புது நோய் ஒன்று வாட்டி எடுத்தது. பெரியவர்கள் கக்...கக்...’ என இருமிக்கொண்டிருந்தார்கள். பலருக்கு முச்சுத்திணறல் வந்தது. சிலர் மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தார்கள். கண் எரிச்சல் ஊரின் பொது வியாதியானது.
       ஊர் இளைஞர்கள் ஐநூறு ஆயிரம் வரி சேர்த்து ஒரு கோடாங்கியை அழைத்து வந்து ஊரைப்பிடித்திருக்கும் துஷ்டத்தை  விரட்ட வேண்டும் என முடிவெடுத்தார்கள். ஒரு நாள் ஊர் கோயில் எல்லைக்குள் ஆண்களும், பெண்களும் கூடினார்கள். உடுக்கடிப்புகளும், சாமி ஆட்டமும் நடந்தேறியது.
       கோடாங்கி சொன்னார் ‘ ஒரு வாரத்திற்கு ஊர்க்குள்ள யாரையும் விடக்கூடாது...யாரும் ஊரை விட்டு வெளியூர் போவக்கூடாது....’
       ‘ சரிங்க.....’
       ‘ ஊர்க்குள்ள யார் யார்க்கூட முறப்பாடு வச்சிருக்கீங்களோ அவங்க இன்றைக்கே திருநீறு பூசி அன்னம் தண்ணீ புழங்கி முறப்பாட்டத் தீர்த்துக்கணும்.....’
       ‘ சரிங்க...’
       ‘ அடுத்து சொல்லப்போறது...முக்கியம்.......’
       ‘ சொல்லுங்க சாமீ.....’
       ‘ ஊர்க்குள்ள எங்கெல்லாம் பட்டுப்போன மரங்க இருக்கோ அதுகள வேறோடக் களையணும்..... மண்ணுக்குள்ள ஒரு இஞ்சி வேர இருக்க விடக்கூடாது....’
       கூட்டம் களைந்தது. யாரும் ஊரைவிட்டு போக இல்லை. பங்காளிகள் திருநீறு பூசிக்கொண்டு அன்னம் தண்ணீர் புழங்கி முறப்பாடுகளைத் தீர்த்துகொண்டார்கள்.  ஊர் ஆண்கள், பெண்கள் அத்தனைப்பேரும் ஒன்றுக்கூடி பட்டுப்போன மரங்களை வெட்ட அரிவாள், கோடாரியுடன் இறங்கினார்கள். முதலில்  சாமி மரத்தை வெட்டினார்கள். அம்மா ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து சாமி உண்டியலில் வைத்தாள். ‘ மாரியாத்தா.....மன்னிச்சிக்கோடியம்மா.....’
       ‘ கரிச்...கரிச்....’
       ‘ டடக்...டடக்.....’
       ‘ டடாச்.....’ அறுப்பதும், வெட்டுவதும், முறிப்பதுமாக இருந்தார்கள்.
       ‘ எங்கே இழு....இந்தா இழு......’ மரம் அடியோடுக் கீழே சாய்ந்தது. நீ, நானென மரத்தின் குச்சிகளை விறகுக்காக ஒடித்தார்கள். முறித்தார்கள். பொறுக்கி அடுக்கினார்கள்.
       ‘ இது மண்வெட்டிப்பிடிக்காகும்.....’
       ‘ இது களைக்கட்டுப்பிடி...’
       ‘ இது கட்டில் காலுக்காகும்.....’ என விறுவிறுவெனக் கிளைகளை அறுத்தெடுத்தார்கள்.
       அம்மா மாரியாத்தாளைக் கும்பிட்டபடி நின்றாள். அப்பா அறுபட்ட தண்டுகளை எடுத்து விறகடியில் அடுக்கினார். தாத்தா பச்சையாக இருக்கும் பொழுது வெட்டியிருந்தால் கதவு, சன்னலுக்கு ஆகியிருக்கும்...எனக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்.
       சற்று நேரத்திற்குள் மரம் வெட்டி அறுத்து சுத்தம் செய்தாகி விட்டது. வேர் களைவது ஒன்று மட்டும் மிச்ச வேலையென இருந்தது. அதற்கான வேலையில் மக்கள் இறங்கினார்கள். ஒருவர் பாறையால் குழித் தொண்டினார். ஒருவர் மண்வெட்டியால் மண்ணை அள்ளினார். இன்னொருத்தர் கோடாரியால் வேர்களைக் களைந்தெடுத்தார். வேர்கள் நாலாப்பக்கமும் ஓடிக்கிடந்தன.
       ஒரு வேர் எங்கள் மாட்டுக்கொட்டகைக்குள் ஓடிக்கிடந்தது. அதன் போக்கில் சென்று அதை ஒருவர் களைந்து, அறுத்து, ஒரு சாரைப்பாம்பைப் போல எடுத்து வெளியில் விட்டெறிந்தார். இன்னொரு வேர் பக்கத்து வீட்டு அடுப்படிக்குள் ஓடியிருந்தது. அதையும் இரண்டாக அறுத்து எடுத்தார்கள். மூன்று பேர் ஆணி வேர்களைக் களைந்துகொண்டிருந்தார்கள். ஆணி வேர் அதிலப்பாதாளத்திற்குள் சென்றிருந்தது.
       ‘இம்...இம்.....’ என்றவாறு ஒருவர் தொண்டிக்கொண்டிருந்தார். பாதாளத்திற்குள் சென்ற வேர் சட்டெனக் கிழக்குப்பக்கமாகத் திரும்பி வடக்கு நோக்கித் திரும்பியது.
       ‘ என்னய்யா இது.....ஆச்சரியமாக இருக்கு....! வேர் என்ன இவ்ளோ தூரமாப் போகும்.....?’ என்றார் ஒருவர். மற்றொருவர் ‘ இது என்ன சாதாரண மரமா.... சாமி மரமய்யா...’ என்றார். இன்னொருத்தர் ‘ களைங்கய்யா....இந்த வேர் எங்கேதான் போகுதெனப் பார்ப்போம்.....’ எனக் களைந்துகொண்டிருந்தார்கள். வேர், ஊர் குடியிருப்புகளைத் தாண்டி மழைக்காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வாரியைத் தாண்டி மேட்டில் ஏறி ஓரிடத்தில் சுற்றிக்கொண்டிருந்தது.
       அந்த இடத்தை மெல்லக் களைந்தார்கள். அடர் கறுப்பு நிறத்தினாலான இரும்பு குழாய் ஒன்று அதற்குள் புதைக்கப்பட்டிருந்தது. அதைச்சுற்றியிருந்த புற்கள், புதர்கள், செடிகள், கொடிகள் யாவும் கறுகிப்போயிருந்தன. அதற்குளிலிருந்து நெடியுடன் கூடிய புகை வெளிவந்தது. அது துர்நாற்றத்தையும் கண்ணெரிச்சலையும் கொடுத்தது.
      
ஊர்மக்கள் நாசியையும், வாயையும் இறுகப் பொத்திக்கொண்டு அக்குழாயை வெறிக்கப் பார்த்தார்கள். எரிவாயுக் குழாய் அது. அதில் ‘ கெயில் ’ என எழுதப்பட்டிருந்தது.

                                                

விக்கிரமன் நினைவுச்சிறுகதைப்போட்டி - 2016

இலக்கியப்பீடம் - மாம்பலம்சந்திரசேகர் இணைந்து நடத்தும் கலைமாமணி விக்கிரமன் நினைவுச்சிறுகதைப்போட்டி  - 2016
முதல் பரிசு - ரூ.10000/-
இரண்டாம் பரிசு -ரூ. 5000/-.
மூன்றாம் பரிசு - 3000/-.
பத்துக் கதைகளுக்கு ஆறுதல் பரிசுகள் ரூ.1000/-.
நிபந்தனை-
பத்து பக்கங்களுக்கு மிகாமல்
உறுதி மொழிக் கடிதம்.
கடைசி தேதி - 15.12.2016
முகவரி
கண்ணன் விக்கிரமன்
3, ஜெயசங்கர் தெரு,
மேற்கு மாம்பலம்
சென்னை - 600033

.

திங்கள், 14 நவம்பர், 2016

சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை - நூல்கள் வரவேற்கப்படுகின்றன

சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை - நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தப்பரிசு 15000 (பதினைந்தாயிரம் இந்திய ரூபாய்)
நூல்கள் இரண்டு படிகள் அனுப்பப்பட வேண்டும்
கடைசி தேதி - 10.01.2017
நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி
டாக்டர். எம்.குமரேசன்
150. ஔவை சண்முகம் சாலை
ராயப்பேட்டை
சென்னை - 14
தொடர்புக்கு - 98410 - 55774
குறிப்பு - இத்தகவல் எனக்கு வந்த குறுந்தகவல் அடிப்படையில் இடுகைச்செய்யப்படுகிறது.


புதன், 9 நவம்பர், 2016

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்- கந்தர்வகோட்டை கிளை


க....பூ......க.....போ.....

க....பூ......க.....போ.....என்றொரு சிறுகதை. அம்ருதா இதழில்  வந்திருக்கிறது. சாத்திரி எழுதியிருக்கும் கதை. கதையின் முடிவிற்குப்பிறகு குறிப்புப்பகுதியில் அவர் சொல்லிருக்கும் தலைப்பிற்கான விளக்கம் கரப்பான்பூச்சியும் கடந்து போகும்
     அக்கதையில்  ஒரு உரையாடல். கதையின் மொத்த நகைச்சுவை பாத்திரத்தையும் இப்பகுதி சற்றுக் கூடுதலாகவே நகைப்பூட்டுகிறது. கணவன் மனைவி இருவரும் பேசிக்கொள்கிறார்கள்.
     ‘ சமைக்கிறதா...?. பேசாமல் பீட்சா ஓடர் பண்ணவா...?’
     ‘ என்னது பீட்சாவா...? அதோடை முதல் எழுத்து சரியில்லை. எனக்கு வேணாம்...’

           அக்கதையாசிரியரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை..

திங்கள், 7 நவம்பர், 2016

அசந்தர்ப்பம்

எழுத்தாளர் - வைதீஸ்வரன்
     அம்ருதா இதழில் ‘அசந்தர்ப்பம்’ என்றொரு கதை. ஒன்றரை பக்கம்தான் அக்கதை. வாசித்த கனம் எனக்குள் இன்னும் கனத்துகொண்டிருக்கிறது.
     மனைவிக்கு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தை பிறந்திருக்கிறது. செவிலி அக்கணவனிடம் தகவலைத் தெரிவிக்கிறார். அவருக்கு அத்தனை சந்தோசம். மகிழ்ச்சியில் குழந்தையையும் மனைவியையும் பார்க்க தன் சொந்தக் காரை எடுத்துகொண்டு பயணிக்கிறார். ஒரு சுரங்க வழிப்பாதையில் ஒரு லாரியுடன் மோதி கார் விபத்துக்குள்ளாகிவிடுகிறது. லாரியுடன் மோதியதை வைத்து அவரது நிலையை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்....!!

     மனைவி மருத்துவமனையில் தவித்துகொண்டிருக்கிறாள். தான் இரண்டும் பெண் குழந்தையாகப் பெற்றெடுத்ததால்தான் கணவர் என்னையும் குழந்தையையும் பார்க்க வரவில்லையோ....!

வியாழன், 3 நவம்பர், 2016

ஈரநிலம்


நான், என் மனைவி, மகள், சீனு நான்குபேரும் ஒரு கள்ளத்தோனியில் புலம் பெயரத்தொடங்கினோம். ஒரு வாரம் ஆகுமெனச் சொன்னப் பிரயாணம் இரண்டு வாரங்கள் கடந்தும் கரைத்தொட முடியவில்லை. பயணம் நீண்டுக்கொண்டே இருந்தது.
பெரிய மீன், சின்ன மீனைத்தின்னும்; சிங்களமண் தமிழ் மண்ணைத் தின்னுவதைப் போல. ஆனால், எங்கள் பெருங்குடலை சிறுகுடல் தின்பதை உணர்ந்தோம். பசியால் துடித்தோம். தாகம் தணிக்க முடியாமல் நாக்கு வரண்டுத் தவித்தோம்.
சொந்த மண்ணை விடுத்து அந்நிய மண்ணில் அடைக்கலம் புக, யாருக்குத்தான் மனம் கொள்ளும்..?. எனக்கு இலங்கை மண்ணை விட்டு புலம்பெயர கடுகளவும் மனமில்லை. பிறந்த மண், புழுதி வாறித் தூற்றி விளையாண்டுத் திரிந்த நிலம் , சொந்தம், பந்தம்,.....இத்தனையையும் விட்டுவிட்டு வேறொரு நிலத்தினை நோக்கி இடம் பெயர என் மனம் ஒப்பவில்லை. ஆனால் என் மனைவி இந்நிலத்தை விட்டு புலம் பெயர்ந்தால் மட்டுமே மிச்சச் சொச்ச வாழ்வை ஓரளவேணும் கழிக்க முடியும் என்கிற முடிவில் அவள் இருந்தாள். இந்நிலத்தை விட்டு எங்கேயேனும் போய்விட வேண்டும் என என்னிடம் மண்டியிட்டு கெஞ்சினாள். கண்ணீர் சரமாக ஒழுகக் கேட்டாள். அழுதாள். புரண்டாள்..
‘ பாப்பம்...பாப்பம்....’ என்று நான் காலம் கடத்தி வந்தேன். ஒரு நாள் அவள் என் சட்டையைப்பிடித்து குலுக்கினாள். ‘ இதுக்கு மேலும் என்னால்  இங்கண்ட காலம் தள்ள இயலாது...?’ சினம் கொண்டு கண்ணீராகக் கொட்டினாள்.
‘ கொஞ்ச நாட்கள் எனக்கு அவகாசம் கொடும்’ என்றேன்.
‘யுத்தம் உச்சம் தொட்ட நாள் கண்டு சொல்லிண்டு வாறென். இந்த யுத்த பூமி வேணாம்....வேணாம்....எண்டு....’ அவள் தன் இரண்டு கைகளையும் அகல விரித்து வைத்துகொண்டு கதறினாள். தலையில் அடித்துகொண்டாள். தலைவிரிக்கோலமாக இருந்தாள். அவளது இருப்பையும், அழுகையையும் பார்க்கையில் எனக்குள் ஒரு உருவமற்ற பூதம் நெஞ்சுக்கூட்டைத் தாக்குவதைப்போலிருந்தது.
எந்நேரமும் கள்ளம் கபடமற்று சிரித்தவண்ணமாக இருந்தவள் அவள். யாழ்ப்பாணத்திலிருந்து வரும் அத்தனை தினசரிகளையும் ஒரு வரி விடாமல் வாசித்து விடுபவள். தினசரியில் இருக்கும் எழுத்துப்பிழையைக்கூட அவள் சுட்டிக்காட்ட தவறமாட்டாள். இப்பொழுதெல்லாம் அவளால்  எதையும் வாசிக்க முடிவதில்லை. எந்நேரமும் அல்லற்படும் அழுதக்கண்ணீர்தான்.  அவள் எதற்காக அழுகிறாள், யாரை நினைத்து அழுகிறாள் என்று கூட என்னால் கணிக்க முடியவில்லை. அவளுடைய தகப்பனார்,  பெற்ற மகன், மகள்,.... இவர்களில் யாரை நினைத்து அழுகிறாள் என அழுதுகொண்டிருக்கும் அவளாலேயே கணிக்க முடியாத துக்கத்தில் அவள் மூழ்கிக்கொண்டிருந்தாள்.
‘ வாருன்கள்....எங்கே யானும் போய்விடுவம் ’
‘ இவ்விடத்த விட்டு ஏன் போவ வேணும்...?’ என்றேன் நான்.
‘அட கண்டிக்கதிர்காமக்கந்தா.....எம் பிள்ளையாள் உயிர் பிழைக்க வேணாமா.... ’
அவளது உதடுகள் உதிர்ந்த சிறகைப்போல் துடித்தன. ‘ இந்த மட்டக்களப்பை விட்டு எங்கண்ட போவ இயலும்...?’
‘ இந்த ஆழி சூழ் உலகில் தமிழன் எங்கண்ட இல்லை. தமிழ்நாடு போவம்....’
‘ அங்கண்டப்போவதற்கு இங்கண்டே இருந்து மாண்டுத் தொலயலாம்...’ என்றேன்.
‘ அப்படி எண்டால் மலேயா போவொம். அங்கண்டபோய் ஒரு பிழைப்பத்தேடிக்கொள்வொம். கனடா....போவொம். ஆஸ்திரிலியா போவொம். எங்கயாண்டும் போவொம்.....’
‘ ஆசை கண்டு எழுப்பிய புதுகுடில், கோப்பித்தோட்டம், பனைமரக்கூடல், ஆடு, சீனு,..... இத்தனயும் விட்டுண்டு எப்படி போவ இயலும்....’ என்றேன்.
அவள் பெருமூச்சொரிந்தாள்.  சினம் கொண்டு பார்த்தாள்.
‘ எம் ஒரு மகனை இழந்து நிற்கிறொம். தெரியும் தானே.... ஒரு நாள் நான்கு சிங்கள இராணுவன்கள் வந்தான்கள். எம் மகனை போராளி என்றான்கள். அவன் என்ன போராளியா...? அவன் புலி கொடியைக்கூட  தீண்டியவன் இல்லன். நானும் நீயும் என்னவெல்லாம் சொல்லிப் போராடினொம்.  மறுதலித்தொம். விசாரிக்க வேணும் என அழைத்துகொண்டு போனவன்தான். இன்னும் வீடு திரும்ப இல்லை....
எம் மூத்த மகள் யாழினி. யாழ்பாணம் பாடசாலையில் முதுகலை அரசியல் படித்தள். அவள் என்ன போராளியா...? அவள் குழந்தாய். அவளுக்கு அன்புத் தவிர வேற என்னத்தெரியும்....? இலகு மனம் கொண்டவள். அதிர்ந்துகூட  பேசத் தெரியாதவள். அவளையும் விசாரிக்க வேணும் எண்டு அழைச்சிண்டு போனவள்தான். எத்தனை நாள் அவளைத் துலாவினொம். அவள் மாண்டச் செய்தி கூட வேறு யார் மூலமாகவோதான் கேட்கப்பெற்றொம். அன்றைய நாள் தொட்டு அழுதுக்கிடக்கிறென். பசி அற்று இருக்கிறென். உங்கள நான் கண்டிக்கதிர்காமக்கந்தனா... நினைக்கிறென். கையெடுத்துக் கும்பிடுறென். வாருங்கள் எங்கேயாண்டும் போய்விடுவொம்....’ எனக் கண்ணீரில் மன்றாடினாள்.
அவள் வற்புருத்தலின் பேரில்தான் நாங்கள் நான்கு பேரும் இந்த கள்ளத்தோனியில் புலம்பெயர்ந்தோம். மட்டக்களப்பிலிருந்து கதிர்காமத்திற்க்கு பேருந்து பயணம் செய்கையில் உடம்பு உதறுவதைப்போலதான் இந்தக்கள்ளத்தோணியில் குலுங்கினோம்.
ஆசைக்கண்டு எழுப்பிய புது குடில். விற்றுவிட்டோம். ஒரு வேலி கோப்பித் தோட்டம். விற்றுவிட்டோம். பணத்தை டோலராக மாற்றி மடியில் கட்டிக்கொண்டு கடலே விதியெனக் கடந்தோம்.
கண்ணுக்கு எட்டிய மட்டும் சமுத்திரம். எந்த திசையில் இடம் பெயர்ந்துகொண்டு இருக்கிறோம் என அடையாளம் காண முடியவில்லை. பகலவன் உதித்தால் மட்டும் காண இயலும். இரவு வந்தால் மரண பயம். என் குழந்தை அழுகிறாள். பொல..பொல...வெனக் கண்ணீர் சொரிகிறாள். ‘வேணாம் அப்பா....  வீட்டுக்கு போயிடலாம்....’ என்கிறாள்.
‘ எம் தங்கம் அல்லவா நீ.... அங்கு பாரும். நட்சத்திரம்’ காட்டினேன். நட்சத்திரம் சிங்கள ராணுவன்கள் விட்டெறியும் ஏவுகணைப்போல தெரியும் போலும். பயத்தால் தலையை உள்ளே இழுத்துக்கொண்டாள். முகத்தை அவளது அம்மாவின் சேலையால் மூடிக்கொண்டாள்.
‘ அப்பா....அக்கா எங்கே.....?’
அவள் கேள்வியில் நான் துடித்தேன். ஓலமிட்டு அழும் மனைவியின் வாயை அடைத்தேன்.
‘ அப்பா..... அண்ணா எங்கே.....?’
‘ அண்ணா , அக்காவை அழைக்கத்தான் போகிறொம்...’ என்றேன்.
அவள் ‘ அய்......!’ என்றவாறுக்குதித்தாள்.‘அவகளிடத்தான் போய்கிறோமா....?’ என ஆனந்தத்தில் சிரித்தாள்.
‘ ஓம்....ஓம்....’ என்றேன் நான்.
இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் எத்தனை தூரம்....நாலாயிரத்து இருநூற்று முப்பத்து ஒன்பது கல்தூரம். தோணி எத்தனைத்தூரம் போய் இருக்கும். இன்னும் எத்தனைத் தூரம் போக வேணும். போக முடியுமா...என் தொண்டைக்கும் நெஞ்சிற்குமிடையே பயம் உருண்டையாக உருண்டது. நான்கு நாட்களைக் கடந்து விட்டோம். மனதிற்கு சுகம் இல்லை. துணிவு இல்லை.
ஒரு நம்பிக்கைக்குரிய ஓர் அந்நியன், ‘ நான் உறுதியாக அடைக்கலம் தேடித்தருவன்’ என்கிற உத்திரவாதத்தின் பேரில்தான் நாங்கள் பிரயாணம் செய்தோம். முன்தொகையாக ஆயிரம் டோலர் வாங்கிக்கொண்டான். மீதம் நடுக்கடலில் கொடுக்க வேணும்.  நாட்டிற்குள் நுழைந்ததும்  ஆறு , ஏழு எடத்தில் கையூட்டு நீட்ட வேணும். உண்ண வேணும். உடுத்த வேணும். முகாம் கிடைக்கும் மட்டும் தனியாக வசிக்க இடம் தேடிப்பிடிக்க வேணும். மடியில் இருக்கும் டோலர் போதுமா....தெரியவில்லை. அதைவிடக் கவலை தோனி கரைப்போய் சேருமா....!
பிராயாணம் தொடங்கிய முதல் நாள்...
அமாவாசை. முழு இருட்டு. மூட்டை முடிச்சுடன் கல்லடி பாலம் கடந்து , அனிச்சம் வீடு, வாவி உளிச்சம் குளத்தைக் கடந்து கண்களில் கண்ணீர் சொரிய மட்டக்களப்பு துறைமுகம் வந்தடைந்தோம். அங்கேயிருந்து ஒரு கள்ளத்தோணிக்கு மாறினோம். ஐம்பது கல் தூரம் கடந்து வந்து விட்டோம். சுற்றிலும் கண் கட்டிய இருட்டு. கடற்கரையின் கலங்கரை விளக்கம் வெளிச்சம் மட்டும் மின்மினிப்பட்சியாக  ஒளிர்வதைக்காண முடிந்தது.
என் ஏழு வயதுடைய மகள் கேட்டாள்.‘ அப்பா.... அங்கே பாரும். அங்கே தெரிவது திரிகோணமலையில் விழும் குண்டுதானே....?’
‘ இல்லை...அம்மா. இல்லை...அது கலங்கரை விளக்கம் ’ என்றேன் நான். அவள் அதை நம்பவில்லை.
‘ இல்லை அப்பா . அது சிங்களவன் விட்டெறியும் குண்டுதான் ’ என்றாள்.
அவள் அதைச்சொல்லி வைப்பதற்கும் வெளிச்சம் எங்கள் புலனிலிருந்து மறைவதற்கும் சரி என்று இருந்தது.
பிரயாணம் நான்கு நாட்களைத் தொட்டிருந்தது.
என் மனைவி கலங்கிய முகத்துடன் உட்கார்ந்திருந்தாள். அவளது மடியில் மகள் இசையாழ் படுத்திருந்தாள்.  அவளது மடியில் சீனு படுத்திருந்தது.
சீனு பாவம். ஐந்து அறிவுடைய பிராணியாக இருந்தும் என்னவோ ஒரு துக்கம் அதன் கண்ணில்  தெரிந்ததைக் காண முடிந்தது. நான்கு நாட்களாக எதையும் அது உண்ணவில்லை.  குரைக்கவில்லை. வாலாட்டல் இல்லை.
நாங்கள் எங்களுக்குத் தேவையான உருப்படிகளை நான்கு மூட்டைகளாகக் கட்டியிருந்தோம். ஒரு மூட்டையில் எள் உருண்டை இருந்தது. அதை எடுத்து என் மனைவிக்கும் மகளுக்கும் கொடுத்தேன். நான் ஒன்று எடுத்துகொண்டேன்.
மகள் சொன்னாள். ‘ அப்பா....சீனுவுக்கு ஒன்று கொடுங்கள் ’.
நான் மட்டக்களப்பில் எப்படியேனும் இந்த சீனுவை விட்டு விட்டு வந்துவிடலாம் என்றுதான் பார்த்தேன். சீனு எங்களை விட்டு போவதாக இல்லை. நாங்கள் வளர்த்தெடுத்த செல்லம் அல்லவா அது!  நான் என்ன செய்ய...? சீனுவையும் தூக்கிக்கொண்டுதான்  தோணியில் ஏறினோம்.  
எள் உருண்டையை எடுத்து சீனு வாய் அருகினில் கொண்டுப்போனேன். சீனு எழுந்திருக்கவில்லை. வாலைப் பிடித்து ஆட்டினேன். அதற்கு உணர்வு என்று ஒன்று இல்லை.
‘ அட கதிர்காமக்கந்தா....’ நான் அழுகிறேன். என் அழுகையைக் கண்டு மகள் அழுகிறாள்.
அவள் என்னச்செய்வாள்...? அவள் பாவம்....! அவளுக்கு தோழி சீனு இல்லையா.... பெட்டை நாய். அவளுக்கு அது செல்லம். அது இறந்துபோனதை அவளால் எப்படி பொறுத்துக்கொள்ள இயலும்.....நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். அவள் கேட்பதாக இல்லை. குலுங்கிக் குலுங்கி அழுதுக்கொண்டிருந்தாள். கண்ணீர் அவளுடைய கன்னங்களில் தாரையாக ஒழுகிக்கொண்டிருந்தது.
தோணியோட்டி அண்ணா எழுந்து வந்தான்.
‘ உங்களுக்கு கொஞ்ச மேனும் அறிவு எண்டு இல்லை. நான் சொன்ன விதிமுறை எதையும் நீங்க மதிக்க இல்லை. யாரும் அவ்வளவு எளிதில் நுழைய முடியா தேசத்தில் இந்த நாயை கொண்டுச்செல்லாவிட்டால் என்னவாம்...’
‘அண்ணா..என்னை மன்னித்து விடுங்கள். எண்ட பேச்சை என் பிள்ளையாள் கேட்க இல்லை. நான் என்ன அண்ணா செய்ய இயலும்..’
‘சரி... அடுத்து எண்ட சொன்னேன். யாரும் யாருக்காகவும் அழக்கூடாது சொன்னேன் இல்லையா....பாரும்! உன் பிள்ளையாள் குலுங்கிக்குலுங்கி  அழுதுண்டு இருக்காள்...’
நான் என் மகளை தோளில் கிடத்திக்கொண்டு அவளைத் தேற்றினேன்.
‘ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் புலம் பெயரும் ஈழத்தமிழர்களின் தொகை கூடிக்கொண்டு போய்கிறது. அங்குள்ள பூர்வீக குடிகள் ஈழத்தமிழன் எண்டு தெரிந்தால் ஈவு, இரக்கப்பட மாட்டேன்கிறான்கள். உங்களில் யாருக்கும் அது தெரிய இல்லை. திரும்பவும் நான் சொல்கிறன். மனதில் தைத்துக்கொள்ளும். உங்களில் யாருக்கும் என்னனாலும் நடக்கக்கூடும். மாண்டுக்கூட தொலையலாம். அடி விழலாம். யாரும் யாருக்காகவும் அழுவுது இயலாது. விளங்குகிறது தானே.... ?’
‘ ஓம் அண்ணா....’
‘உங்களை மீட்டுப்போக ஆஸ்திரேலியா தேசத்து படகு ஒன்று வரும். நீங்கள் அதில் மாறி மீன் தொட்டிக்குள் ஒழிந்துக்கொள்ள வேணும். அதை ஒரு பெரிய பலகையைக்கொண்டு மூடி விடுவொம்.
ஆஸ்திரேலியா பொலீஸ் கண்ணில் அகப்படக்கூடாது. அவன்கள் ஈவு இரக்க மட்டவன்கள். தன் துப்பாக்கியால் மீன் தொட்டியைச் சுடுவான்கள். அதற்குள் யாரெனும் மறைந்து  இருக்கான்களா எண்டு கூர் ஆயுதம் கொண்டு பார்ப்பான்கள். தோட்டா, கூர் ஆய்தம்,...யார் மேலெனும் படக்கூடும். என்ன நடந்தாலும் பொறுத்துக்கொள்ளத்தான் வேணும்.  சத்தம் எழும்புதல் கூடாது. ஒரு வேளை எழும்பினால்.... அவ்வளவேதான்! இலங்கைக்கு திருப்பிவிடுவான்கள். இத்தனை நாள் எடுத்த எல்லா முயற்சியும் வீண் எண்டாயிடும்...விளங்கும் எண்டு நினைக்கிறன்....’
‘ ஓம்... விளங்குகிறது அண்ணா......’
‘ பாரும்...இந்த நாய் மாண்டு விட்டது. அதை தூக்கி கடலுக்குள் போடப்போகிறன். எல்லாரும் கண்களை மூடிக்கொள்ளுங்கள்’ என்றவன் நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தை  நோக்கி வந்தான். நாயின் வாலைப்பிடித்து தூக்கி கடலுக்குள் விட்டெறிந்தான்.
அதன்பிறகும் இரண்டு நாட்கள் கடலுக்குள் மிதந்தோம். மிரண்டுக்கிடந்தோம். எந்தத் திசையில் போய் கொண்டு இருக்கிறோம் என எங்களால் கணிக்க முடியவில்லை.
ஒரு நாள் ஏறு பொழுதிருக்கும். தோணியோட்டி அண்ணா தோணியை நிறுத்திவிட்டு எங்கள் பக்கம் திரும்பினான்.
‘இந்துமாப்பெருங்கடலில் இந்திய எல்லையை நாம் கடந்து விட்டொம். இனி ஆஸ்திரேலியா. இன்னும் ரெண்டு நாட்களில் உங்களை மீட்டுச்செல்ல படகு ஒன்று வரும். அதன் பிறகு நான் நாடு திரும்பி விடுவென். நீங்கள் நான் சொன்னதைப்போல நடந்துகொள்ள வேணும். என்ன புரிகிறது தானே......’
‘ ஓம் அண்ணா....’
அவன் சொன்ன படகு  மூன்று நாட்கள் கழித்துதான் வந்தது. தோணியிலிருந்து படகிற்கு தாவிக்கொண்டோம். படகோட்டி அண்ணா எங்களுக்கு கைகளைக் காட்டி தலையில் கை வைத்து ஆசியுடன் எங்களை அனுப்பி வைத்தான்.
ஆஸ்திரேலியா படகு அது.  நல்ல சவுகரியத்துடன் இருந்தது. சுத்தமாகவும் இருந்தது. அப்படகில் அந்நாட்டு கொடி பரந்தது. அவன் மீனவன். ஆங்கிலத்தில் செப்பினான். தமிழும்  கதைத்தான். அவனுக்கு நான் கொடுக்க வேண்டிய டோலரை அவன் வாங்கிக்கொண்டான்.
நல்ல வேகத்தில் அந்த படகு செல்வதை எங்களால் உணர முடிந்தது. படகின் வேகத்தில் எங்கள் உடம்பில் புது இரத்தம் பாய்வதைப்போலிருந்தது. மூன்று நாள் இரவு முடிந்து விடிந்திருந்தது. ஆஸ்திரேலியாவை நெருங்கியிருந்தோம்.
படகோட்டி எங்களிடம் கையை நீட்டி ‘ அதோ...! பாருங்கள்....அது பப்புவா நிபூசிக். ஆஸ்திரிலியாவின் கடற்தீவு ’ என்றான். நாங்கள் மூவரும் படகிலிருந்து மெல்லத் தலையைத் தூக்கிப் பார்த்தோம். தீவுகள் பார்க்க கடற்பரப்பையொட்டிப் பறக்கும் மின்மினிப்பட்சிகளைப் போலிருந்தது. படகு அத்தீவினையொட்டிச் சென்றது. கொஞ்சம் தூரத்தில் மற்றொரு தீவு தெரிந்தது. அது  மானுஸ் தீவு. தீவின் கலங்கரை விளக்கம் வெள்ளொளியை எங்களால் பார்க்க முடிந்தது. .
அன்றைய நாள் இரவில் படகோட்டி பயந்த நிலையில் இருந்தான். திடீரென்று எங்கள் பக்கம் திரும்பி ‘மறைந்துகொள்ளுங்கள்...மறைந்துகொள்ளுங்கள்...’ என்று பதறினான். ‘என்னை காட்டி கொடுத்து விடாதீர்கள்’ என மண்றாடினான்.
நாங்கள் மட்டக்களப்பு புதைக்குழிக்குள் மறைந்துகொள்வதைப்போல மீன் தொட்டிக்குள் மறைந்துகொண்டோம். ஆழி சூழுடன் கூடிய பயம் எங்களைச் சூழ்ந்துகொண்டது. படகைச் சுற்றிலும் ஆஸ்திரேலியா பொலீஸ்காரர்கள் சூழ்ந்துகொண்டார்கள்.
படகு ஓரிடத்தில் நிற்பதை உணர்ந்தோம். வானத்தில் குண்டு முழங்கும் அரவம் கேட்டது. அந்த அரவத்தைக் கேட்டதும் என் மகள் திடுக்கிட்டாள்.
‘அய்யோ...! அப்பா...! சிங்களன் குண்டு போடுகிறான்.....’ என ஓலமிட்டாள்.
‘ உஷ்.....!’  நான் அவளது வாயை அடைத்தேன்.
மீன் தொட்டியை ஒரு லத்திக்கொண்டு தட்டினான் ஒரு பொலிஸ்.
‘ படகில் என்ன...? ’ ஆங்கிலத்தில் கேட்டான்.
‘ மீன்...மீன்....’ படகோட்டி சொன்னான்.
எனக்குள் பயம் சில்லிட்டு இருந்தது. குளிர் வேறு பிய்த்துத்தின்றது. நான் என்  மனைவியையும் மகளையும் கோழி தன் சிறகால் அரவணைப்பதைப்போல அணைத்துக்கொண்டு நடுங்கிப்போய் உட்கார்ந்திருந்தேன்.  
ஓர் கூர்ஆயுதம் ஒன்று மூடி இருந்த பலகையைத் துளைத்தது. மறுஆயுதம் என் தொடையில் பாய்ந்தது. இன்னொன்று என் கண்  முன்னே குத்தி நின்றது.
‘அப்.....’ மகள் ஒலி எழுப்பினாள்.
அவளது வாயை இறுக அடைத்தேன். மறுகையால் என் தொடையில் பாய்ந்த ஆயுதத்தைப் பிடுங்கி முனையில் இருந்த குருதியைத் துடைத்தேன். மனைவியையும் மகளையும் இறுக அணைத்துகொண்டேன்.  கூர் ஆயுதம் ஒன்று மகளின் கையைத் துழைத்தது.
‘அய்யோ....!’ என் உயிர் அறுவதைப்போலிருந்தது.
‘ அப்.....’
அவள் ஓலமிடுவதற்கு முன் அவளது வாயை இறுக அடைத்தேன். அவள் விசும்பினாள். இன்னும் இறுக அடைத்தேன்.
வெளியில் பொலீஸ்காரர்களின் அரவம் அதிகமாக இருந்தது. கடல் போர்த்திய இரவு ஒளிவெள்ளமாகத் தெரிந்தது. உடம்பில் ரத்தம் சொற்றியது. மகளின் வாயிலிருந்து கையை மெல்ல எடுத்தேன்.
‘ அம்...‘ 
நாசிகள் வழியே விசும்பல் வந்த வண்ணமிருந்தது. நான் கையை எடுத்தால் போதும். அவ்வளவேதான்! இத்தனை நாள் எடுத்த எல்லா முயற்சிகளும் வீண் என்றாகி விடும். என் கையில் கைக்குட்டை இருந்தது. அதனால் அவளது வாயையும் நாசியையும் இறுக அடைத்தேன்.
‘ என் செல்லம்....என் அழகு... என் தங்கம்.....சத்தம் இடுதல் கூடாது....’ அவளது காதிற்குள் முணங்கினேன்.
அவள் கண்களைத்திறந்து என்னைப்பார்த்தாள். அவள் கண்களில் மட்டக்களப்பு தெரிந்தது. யாழ்பாணத்து புழுதி தெரிந்தது. கண்டி கதிர்காமம் ஏக்கம் தெரிந்தது. அவளை இறுக அணைத்து முத்தம் கொடுத்தேன். அவள் என் தங்கம். என் அழகு. என் தேவதை. அவளை நெஞ்சோடு அணைத்தேன். அவள் அழ இல்லை. ஒரு சிணுங்கல் இல்லை.
படகு  மெல்ல நகர்வதைப்போலிருந்தது. எங்களை விட்டுப்போயிருந்த உயிர் திரும்பி வந்ததைப்போலிருந்தது.
என் மனைவி என் மடியிலிருந்த மகளை ‘வெடுக்’கெனப் பறித்தாள். தோளில் கிடத்திக்கொண்டு முதுகைத்தட்டினாள். பாதங்களை வருடினாள். குஞ்சை இழந்த கோழியின் பரிதவிப்பில் தவித்தாள். மகளை மடியில் கிடத்திக்கொண்டு  தலையைக் கோதினாள். கன்னங்களைப் பிடித்துக் குலுக்கினாள். கண் காது, மூக்கு, செவியென முத்தமழைப்பொழிந்தாள். நெஞ்சோடு அணைத்தாள்.
எனக்கான உலகம் நழுவி மெல்ல கடலுக்குள் மூழ்குவதைப்போலிருந்தது. இதயத்தை முள்வேலி அறுத்தது. என்னவோ ஒன்று நடந்து விட்டது. நினைக்கவே பயமாக இருந்தது. கைநழுவி தீக்கனலில் விழுந்துவிட்டதைப்போல திடுக்கிட்டேன். ஒரு பெருந்தவறை செய்துவிட்ட லயத்தில் துடித்தேன். கண்களை இறுக மூடிக்கொண்டு கத்த வேண்டும் போலிருந்தது. கீழ் உதட்டை பற்களால் கடித்து கண்ணீர் சொரிந்தேன். விசும்பினேன். வாயிற்குள் துணியை திணித்துக்கொண்டு குலுங்கினேன்.
என் மனைவி பிள்ளையாள் மீது சரிந்து கிடந்தாள். மார்பில் செவிச்சாய்த்தாள். தலையில் அடித்துகொண்டாள். தலை விரிக்கோலமாய் ‘ வீ......ல்’ எனக் கத்தினாள். நான் என் வாய்ப்பொத்திருந்த கைகளை எடுத்து அவளது வாயினை அடைத்தேன்.